வானத்தை எட்டிப் பிடிப்போம்

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில்
தமிழினம் தரணியில் தழைத்தோங்கச் செய்வோம்! தடைகள் தகர்த்து தமிழ்தேசியம் காப்பதே
தலையாய கடமையென சபதம் கொள்ளுவோம் ...!!

ஒன்றிணையும் தமிழர்களால் தமிழினம் மேம்படும்
ஒன்றுபடவே வாழ்வுண்டு தாழ்வும் நீங்கிடும் !
ஒற்றுமை ஓங்கிவிட்டால் வாகை சூடலாம் !
ஒன்றலர் எவர்வரினும் விரட்டி அடிக்கலாம் ....!!

தன்னினம் அழிவுகண்டு பொறுமை காப்பதோ ?
தன்மானத் தமிழர்களும் தட்டிக் கேட்பரோ ...?
தனக்கென்ன என்றிருத்தல் முறை யாகுமோ ?
தமிழன்னை விழிநனையச் செய்ய லாகுமோ ...?

ஆறிரண்டு கோடிதமிழர் கரங்கள் இணைந்திட்டால்
அடிமைத்தளை உடைத்து தமிழீழம் மலர்ந்திடும்!
அரசியலால் அலக்கழியும் நிலையும் மாறிடும் !
அகிலமெங்கும் தமிழ்தேசியம் தலை நிமிர்ந்திடும்!

உடனிருந்து உறவாடி கெடுப்பது அழகல்ல
உணர்வாலே அர்ப்பணிப்பு வேண்டும் அவசியம் !
உள்ளங்கள் ஒன்றுபடின் நம்மினமும் வென்றிடும்!
உண்மையிதை என்மனமும் உரக்கச் சொல்லிடும் !

இனமத பேதங்களை குழியில் புதைப்போம் !
இதயத்தால் தமிழனென்று மார் தட்டுவோம் !
இடர்வந்தால் எதிர்த்து நின்று போராடுவோம் !
இமயம்ஏறி வானத்தையே எட்டிப் பிடிப்போம் ...!!!

---------------சியாமளா ராஜசேகர்
07 சனவரி 2014

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (07 சனவரி 201 (8-Jan-14, 11:31 am)
பார்வை : 98

மேலே