பொங்கு தமிழா பொங்கு
பொங்கு தமிழா!-பொங்கு!!
வங்கக்கடல் அலையென-இந்த
பொங்கல் தினத்திலாவது
பொங்கு தமிழா!-பொங்கு!!
மதுப்பாரினிலே நீயும்
ஒன்றாய்ப் பொங்கியது போதும்
நன்றாய் போதையில் நீயும்
பன்றியாய்க் கிடந்ததும் போதும்
இலவசங்களுக்கு நீயும்
ஏங்கிக் கிடப்பதும் போதும்....
இடுப்பு துண்டு அவிழ
ஏமாந்து போனதும் போதும்
இன்னல் படும் தமிழர்
எங்கிருப்பினும்....
இருள் களைந்திடும்
ஈடில்லா ஒளிச்சுடராய்
இருந்திடு தமிழா! இணைந்திடு!
வஞ்சக வேடதாரிகளின்
நெஞ்சைக் கிழித்திடும்
நெம்பு கோலாய் நிமிர்ந்திடு!
புதைந்து போனாலும்
மக்கிப் போகாதே-தமிழா!
வீரிய விதையாய்
பீறிட்டு முளைத்திடு!
--------------------பரிதி.முத்துராசன்
06 சனவரி 2014