ஈழத்துக்கு இதுவே இறுதி அஞ்சலி - பூவிதழ்

ஈழத்தமிழா ...
உன்னை நினைக்கும்போதெல்லாம்
துக்கம்- துயரம்- துரோகம் --
தோட்ட விழுங்கிய துப்பாக்கியாய் ! தொண்டைக்குழிவரை - இன்று வெடித்துச் சிதறியது வார்த்தைகளாய் !
போர்குற்றமா ?, மனிதஉரிமை மீறலா ? இனப்படுகொலையா ? ????
ஊடகங்கள் நடத்தும் நாடகத்தில்
விவாதம் மட்டுமே செய்தோம்
வேறென்ன செய்தோம் ???
முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடித்துக்கொண்ட நம் உறவை திரும்பிப் பார்க்கிறோம் தேர்தலுக்காக !
உன் வாழ்கையை வாக்காக்க துடிக்கும் வர்த்தகத்தில் விலைபோகுமோ உன் வரலாறு ?
புயலொன்று வந்தால் பூங்கொடிகள் அறுபடும் !
போரொன்று வந்ததுமே அறுந்துபோனதோ - நம் தொப்புள்க்கொடி !
அறுத்தது அரசியலோ , அந்நியனோ
அகதிகளாய் , அனாதைகளாய் , அடிமைகளாய் சொந்தமண்ணில் சுவடுகளாய் - தமிழா !
இமயத்தில் ஒருநாள் பறந்ததும் உன்கொடியே
இலங்கையில் பறக்குது இன்று உன் கோவணமே !
முள்ளிவாய்க்காளில் மூச்சிரைத்த இறுதிமூச்சின் சூளுரைகள் யாமறிவோம் !
அதை சமன் செய்யும் சாத்தியம் யாரறிவார் ?
சூத்திரம் பலகண்ட சரித்திரம் எமக்குண்டு !
ஆயுதம் கொடுத்து ஆழித்த பெருமை யார்க்குண்டு ? தமிழா ?
தனிஈழம் கேட்டதில் உன் தவறென்ன ?
பொதுவாய் கிடைத்தது புதைகுழி மட்டுமே !
இனம் அழிந்த மரண செய்தியை செரித்து
துக்கம் துடைத்து வாழும் -தமிழா
தலைமுறைகள் தணிக்கை செய்யும் உன்வரலாற்றை - அதில் தனித்துவிடப்படுவாய் நீ தமிழன் சுயசரிதை சுயநலமாய் போனதோ ?
புலம் பெயர்ந்த தமிழன் பெறும் பரிசுக்கு மார்தட்டும் தமிழா - உன் காலடியில் கட்டப்பட்ட எங்கள் கல்லறைக்கு கண்ணீரஞ்சலி மட்டுமா ?
இந்தியர்களே எங்களை புறக்கணித்தார்கள் ஏன் ?
ஈழம் இன்னும் தமிழ் பேசுவதாலோ ?
எதிரியின் தோட்டாக்களுக்கு இதயத்தை பரிசளித்த என் இனமே ... இதுவரை என்ன செய்தோம் உங்களுக்கு ?
மரணம் சிலகாலம் எங்களை மறக்கலாம் ஆனால் உங்கள் மரணம் எங்களை ஒரு காலமும் மன்னிக்காது !
இதுவரை என்ன செய்தோம் இவர்களுக்கு
எழுதுவதற்கு மட்டும் நாம் என்ன - எழுத்தாணிகளா ?
********************************************************************
இதுவே ஈழத்துக்கு நாம் எழுதும் இறுதி அஞ்சலியக இருக்கட்டும் இனி எழுத்தில் எழுதுவதென்றால் அது தனி ஈழம் பிறந்ததற்கு தமிழன்னை பாடும் தாலாட்டாக மட்டும் இருக்கட்டும் -
இனி எழுத்தில் வேண்டாம் - எண்ணத்தில் - செயலில் - ஏதாவது செய்வோம் - ** பூவிதழ் ***