மங்கல வாழ்த்து

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய கொங்கு நாட்டின் மங்கல வாழ்த்து வாழி:

விநாயகர் காப்பு:
***********************
நல்ல கணபதியை நாம்காலமே தொழுதால்
அல்லல் வினையெல்லாம் அகலுமே, சொல்லரிய
தும்பிக்கை யோனைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை யுண்டு நமக்கேநீ நாயகனே

வாழ்த்து பாடல்:
**********************
அலைகடல் அமிழ்தம் ஆரணப் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வஞ் சிறந்திட
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்

சந்திரர் சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடத்திடும் சீர்தனில்

தப்பித மில்லாமல் சரஸ்வதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்

சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்
மிக்கத்தோர் கரும்பு விதவிதக் கிழங்கு
எள்அவல் நற்பொரி இனித்த பாகுடனே

பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
ஆரமுது அருந்தும் அழகு சிறந்த

பேழை வயிற்றுப் பிள்ளைக்கணபதியை
அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
கடுகியே வந்தென் கருத்தினில் நின்று

நினைத்த தெல்லாம் நீயே முடித்து
மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!
மங்கல வாழ்த்தை மகிழ்ந்து ஓத

என்குரு நாதன் இணையடி போற்றி
கிரேதா திரேதா துவாபரம் கலியுகம்
செம்பொன் மகுடம் சேரன் சோழன்

பைம்பொன் முடியும் பாண்டியன் என்னும்
மூன்று மன்னர் நாட்டை ஆளுகையில்
கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்

சிறந்த மானுடம் தாயது கற்பம்
வாழ்வது பொருந்தி வளமாய் நலமாய்
செம்மை யுடனே சிறந்திடுங் காலம்
இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்

பக்குவ மாகிப் பருவங் கண்டு
திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
வேதியன் பக்கம் விரைவுடன் சென்று

சோதிடரை அழைத்துச் சாத்திரங் கேட்டு
இந்தமாப் பிள்ளை பேர்தனைச் கூறி
இந்த பொண்ணின் பேர்தனைச் சொல்லி

இருவர் பேரையும் ராசியில் கேட்டுக்
கையில் ஓடிய ரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டாவெனப் பார்த்து

தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
வாசல் கௌலி வலிதென நிமித்தம்
தெளிவுடன் கேட்டுச் சிறியதோர் பெரியோர்

குறிப்புச் சொல்லும் குறிப்பையும் கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டு
பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து

சிலபேருடனே சீக்கிரம் புறப்பட்டு
மச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று
வெண்கல முரசு வீதியில் கொட்ட

தங்க நகரி தானாயலங் கரித்து
முத்துக்கள் தன்னை முசம்பரங் கொட்டி
சித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி

உரியவர் வந்தார் உன்மகளுக் கென்றே
பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
நாளது குறித்து நல்விருந் துண்டு

பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
வாழ்வது மனைக்கு மகிழ வந்துமே
கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து

தென்பனை யோலை சிறக்கவே வாரி
திசைதிசை எங்கும் தென்னவர் அனுப்பி
கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்

வாழை கமுகு மகமே ருடன்
சோலை இலையால் தோரணங்கட்டி
மூத்தோர் வந்து மொழுகி வழித்து

பார்க்குமிட மெங்கும் பால்தனைத் தெளித்து
பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைத்
கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி

நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
பாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்

வாரியே வைத்து வரிசை குறையாமல்
முறைமை யதாக முக்காலிமேல் வைத்து
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்கு

குணம் பொருந்திய குடிமகன் அழைத்து
போன மச்சம் முகமது துடைத்து
எழிலான கூந்தலுக்கு எண்ணை தனையிட்டு

குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து
ஏழு தீர்த்தம் இன்பமுடன் விட்டு
மேழமுடனே விளாவிய வார்த்து

செந்நெற் சோற்றால் சீக்கடை கழித்து
வண்ணப்பட்டாடை வஸ்திரந் தன்னை
நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி

அன்னமும் முப்பழம் ஆவின் பாலும்
மன்னவர் முன்னே வந்தவருடனே
வாசல் கிளறி மதிப்புடன் கூட்டி

சாணங் கொண்டு தரைதனை மெழுகி
கணபதி உன்றைக் கருத்துடன் நாட்டி
அருகது சூட்டி அருள் பொருந்திடவே

நிறமிய தாகவே நிறைநாழி வைத்து
வெற்றிலை பழமும் விருப்பமுடன் வைத்து
அலைகடல் அமிழ்தம் அவணியில் நீரும்

குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
களரியோர் மெச்சிடக் காப்பது கட்டி
குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்து

செப்பமுடன் மன்னவர்க்கு திருநீரு அணிந்து
சாந்து சந்தனம் தான்பன் னீரும்
சேர்த்துக் கலக்கிச் சிறக்கவே பூசி

கொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி
முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ
நாருங் கொழுந்தும் நந்தியா வட்டமும்

வேருங் கொழுந்தும் வில்வ பத்திரமும்
மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்
புன்னை கொன்னை பூக்கள்எல்லாம் கொண்டுவந்து

தண்டைமாலை கொண்டைமாலை சோபனமாலை
சுடர்மாலை ஆடை ஆபரணம் அலங்காரம்
திடமாய் மிகச்செய்து திட்டமுடன் பேழைதனில்
சோறு நிறையுடன் நிறைநாழி வைத்து

நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனக்கு
நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே
செந்சோறு ஐந்துஇடை சிரமத்தைச் சுற்றி

திருஷ்டி கழித்துச் சிவசூரியனைக் கைதொழுது
அட்டியெங்கும் செய்யாமல் அழகு மனைக்குவந்து
மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி

இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்து சந்தனம் புணுகு சவ்வாது மிகப்பூசி
மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு

ஆடை ஆபரணம் அழகுறத்தான் பூண்டு
கூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையரும்
பேழைமூடி தான்சுமந்து பிறந்தவரை சுற்றிவந்து

பேழையை இறக்கிவைத்து பிறந்தவளை அதில்நிறுத்தி
கூறைசேலை ஒருதலைப்பை கொப்பனையாள் கைப்பிடித்து
மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனைதான் கொடுத்து

அருமைபெரியார் அழகு மாப்பிள்ளை கையை
அரிசியில் பதியவைத்து அங்கரன் பூசைசெய்து
மங்கல வாழ்த்துகூற மணவறையில் குடிமகனுக்கு

செங்கையால் அரிசியள்ளி சிறக்கக் கொடுத்திடுவார்
குடிமகன் மங்கலவாழி கூறி முடித்தவுடன்
வேழமுகத்து விநாயகரின் தாள் பணிந்து

சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்

முன்னர் ஒருமுறை விநாயகருக்கு இணைநோக்கி
பின்னர் ஒருமுறை பிறந்தவர்க்கு இணைநோக்கி
இந்திரனார் தங்கைக்கு இணைநோக்கி நின்றபின்பு

தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்வ விநாயகனைப்
பாங்காய் கைதொழுது பாரிகொள்ளப் போரோமென்று
மாதாவுடன் மகனாரும் வந்திறங்கி

போதவே பால்வார்த்துப் போசனமும் தானருந்தி
தாயாருடன் பாதம் தலைகுனிந்து தெண்டனிடப்
போய்வாமகனே என்றாள் பூங்கொடிக்கு மாலையிட

பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவர
தந்தை யானவர் தண்டிகை மேல்வர

தமையன் ஆனவர் யானையின் மேல்வர
நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போலவர
தேடியே வந்தவர்கள் தேரரசர் போலவர

பேரணி முழங்க பெரிய நகாரடிக்க
பூமிதான் அதிர புல்லாங்குழால் ஊத
எக்காளஞ் சின்னம் இடிமுரசு பெரியமேளம்

கைத்தாளப் பம்பை கரகதப்பட்டைதான் முழங்க
துத்தாரி நாதசுரம் சோடிகொம்பு தானூத
சேகண்டி சங்குதிமிர்த்தாள பம்பையுமே

வலம்புரிச் சங்கு வகையாய் ஊதிவர
உருமேளம் பறைமேளம் உரம்பை திடும் அடிக்க
பலபல விதமான பக்கவாத்தியம் முழங்க

பல்லாக்கு முன்னடக்க பரிசுகள் பறந்துவர
வெள்ளைக்குடை வெண்சாமரம் வீதியில் வீசிவர
சுருட்டிய சூரியவாணம் தீவட்டி முன்னடக்க

இடக்கை வலக்கை இனத்தார் சூழ்ந்துவர
குதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளைதான்
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்க

கட்டியங்கள் கூறி கவிவாணர் பாடிவர
நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தெய்வடியாள்
பாகமாஞ்சீ லைப்பந்தம் பிடித்திட

மேகவண்ணச் சேலை மின்னல்போல் மின்ன
அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவர
பெண் வீட்டார்கள் பிரியமுடன் எதிர்வந்து

மன்னவ ர்தங்களை வாருங்கள் என்றழைத்து
வெகு சனத்துடனே விடுதியில் விட்டு வந்தார்
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பவென்று

நாழியரிசிக் கூடை நன்றாகமுன் அனுப்பி
பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிற்கு
நல்ல முகூர்த்தம் நலமமுடன் தான்பார்த்து

பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை

முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
திட்டமுடன் மங்கையர்க்கு திருப்பூட்டப் போவோம் என்று
அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை

அன்னநடையாரும் அருமைப் பெரியவரும்
பொன் வளையல்கையால் பேழைமுடிதான் சுமந்து
இன்னும் சிலபெண்கள் இவர்களையே சூழ்ந்துவர

சென்று உட்புகுந்தார் திருப்பெண்ணாள் மாளிகையில்
நாட்டில் உள்ளசீர்சிறப்பு நாங்கள் கொண்டு வந்தோம்என்று
கொண்டுவந்த அணிகலனைக் கோதையருக்கு முன்வைக்க

கண்டு மகிழ்ந்தார்கள் கன்னயர்கள் எல்லேரும்
பூட்டினார் தோடெடுத்து பொன்னாள் திருக்காதில்
தங்கச் சங்கிலிதனை தான்கழுத்தில் இட்டார்கள்

அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
ஆனிப் பெண்ணவளை அலங்கரித்துக் குலம்கோதி
சாந்துப் பொட்டிட்டு சவ்வாது மிகபூசி

ஊட்டுமென்றார் சாதம் உடுத்துமென்றார் பட்டாடை
பொன்பூட்டவந்தவர்க்குப் பூதக்கலம்தான் படைத்து
அன்பாக வெற்றிலை அடைக்காயும்தான் கொடுத்தார்

தாய்மாமன் தன்னை தன்மையுடனே அழைத்து
சந்தனம் மிகபூசி சரிகைவேட்டிதான் கொடுத்து
பொட்டிட்டுப் பொன் முடித்து பேடைமயிலிற்கு

பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர்தானறிய
ஆரணங்குப் பெண்ணை அலங்காரம் மிகச்செய்து
மாமன் குடைபிடித்து மாநாட்டார்சபைக்கு வந்து

வலமதாய் வந்து நலமதாய் நின்று
செஞ்சோறு ஐந்து அடைசிரம்கால் தோளில்வைத்து
நிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து

அட்டியங்கள் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
மங்கள கல்யாணம் செய்ய மணவறை அலங்கரித்து
அத்தி எழுதப்பட்டு அனந்த நாராயணப்பட்டு

பஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி
மாந்துளிர் சேர்பூங்கொத்து வண்ணமுள்ளப் பட்டாடை
மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங்கட்டி

கட்டியே இருக்கும்கனப் பெரிய வாசலிலே
அருமையுள்ள வாசலிலே அனைவரும் வந்திறங்கிப்
பெருமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்து

சேரசோழ ராசாக்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே
வீரஇலக்குமி விளங்கிடும் வாசலிலே

விருதுகள் வழங்கிடும் வளமான வாசலிலே
தரணியின் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே
பன்னீராயிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே

நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டு
பேய்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும்தான் போட்டு
சாலுங் கரகமும் சந்திர சூரியரும்

அம்மி வலமாக அரசாணி முன்பாக
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக
சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்

பத்தியுடன் இதனையும் பாரித்தார் மணவறையில்
மணவறை அலங்கரித்து மணவாளனை இருத்தி
அழகுள்ள பெண்ணை அலங்காரம் மிகச்செய்து

மாமன் எடுத்து மணவறையைச் சுற்றிவந்து
மகிழ்ச்சியதுமீதுற வலதுபுறம் தானிருத்தி
குலம் பெரியமன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க

இராமன் இவரோ இலக்குமணன் இவரோ
கண்ணன் இந்திரன் காமன் இவரோ
அத்தை மகள்தனை அழகு செல்வியை

முத்துரத்தினத்தை முக்காலிமேல் அமர்த்தி
கணபதி முன்பாககட்டும் மாங்கலியம் வைத்து
அருமை பெரியவர் அன்புடன் பூசைசெய்து

மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்தி
கெட்டிமேளம் சங்கநாதம் கிடுகிடென்று சப்திக்க
மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடுரியம்போல் திருப்பூட்டி

ஆரம்தனைமாற்றிஅமர்ந்தபின்மணவறையில்
மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவென்று தானழைத்து
கலம் பெரியஅரிசிதனில் கைகோர்வை தானுமிட்டு

சிங்காரமான இந்த தெய்வச் சபைதனிலே
கங்காகுலம் விளக்கக் கம்பர்சென்ன வாழ்த்துரையை
மங்கலமும் கன்னி சொல்லவாத்தியம் எல்லாம்அடக்கி

மறையோர் வேதம்சொல்ல மற்றவர் ஆசிகூற
பிறைஆயிரம் தொழுது பிள்ளையாருக்குப் பூசைசெய்து
அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்பு

கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்து
தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து
உரியதோர் பாட்டன் இருவருட கைதனிலே

தண்ணிர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
பிரியமுள்ள மணவறையை பின்னும் சுற்றிவந்து
மங்கலக் கல்யாணம் வகையாய் முடிந்ததென்று

செங்கையினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
சாப்பாடு போசனம் சந்தோசமாய்ப் போட
உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்

கொண்டு வந்தபொன்முடிப்பைக் கொடுத்துச் செல்லுமென்றார்
மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் அமர்ந்து
கல்யாணத்தார் தம்மை கருத்துடனே அழைத்து

கண்ணாளர் தனையழத்து ப்பொன்னேட்டம் காணுமென்றார்
இப்போது கண்ணாளர் அவ்விடமேதானிருந்து
பணமது பார்த்து குணமது கழித்து

கடலுவாகன் கருவூர் பணமும்
வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
சம்மன் கட்டி சாத்தூர் தேவன்

உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்க

பலவகை நாணயமும் பாங்காய் தெரிந்து
முன்னூறு பொன்னு முடிப்பொன்றாய் முடிந்தவுடன்
பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்

பந்தல் கௌரி பாக்கியம் உறைக்க
மச்சினன்மார்கள் மகிழ்ந்து சூழ்ந்து நிற்க
சிற்றடிப் பெண்கள் சிறுசீர்கள் சுமந்துவர

சந்தோசமாகித் தங்கமுடி மன்னவர்கள்
பந்தச்சிலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
ஆடுவான் பாடுவான் ஆலாத்தியுட்பட

நாடிவந்த பேர்களுக்கு நல்லமனதுடனே
சகாயமென்ற பேர்களுக்கு தனிப்பணம்தான் கொடுத்து
வாழிப் புலவருக்கு வரிசைதனைக் கொடுத்து

திட்டமுள்ள பந்தலின் கீழ்வந்தநின்ற பேர்களுக்கு
அரிசி அளந்தார்கள் அனைவருந்தானறிய
கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கு

புடவைதனைக் கொடுத்துப் பின்னுந்தலை முழுகி
சட்டுவச்சாதம் பெண்தளிர்கரத்தால் மாப்பிள்ளைக்கு
சாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன்

பண்ணையத்து மாதிகனைப் பண்பாக தானழைத்து
வில்லை மிதியடிகள் மிக்கவே தொட்டபின்பு
காலும் வழங்கிக் கன்னிகையைத் தானழைத்து

மஞ்சள் நீராடி மறுக்க இருஅழைப்பழைத்து
மாமன்மார்களுக்கு மகத்தான விருந்து வைத்து
மங்கள சோபனம் வகையாய் முடிந்தவுடன்

மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
பஞ்சவர்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டுசேலை

அத்தியடி துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
மேலான வெள்ளைப்பட்டு மேகவர்ணக் கண்டாங்கி
இந்திர வர்ணப்பட்டு ஏகாந்த நீலவர்ணம்

முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்

வட்டில் செம்பும் வழங்கும் சாமான்களும்
அம்மி குழவி அழகு சிறு செம்பும்
தோல்வார் பசும்பொன் துண்டு கடுக்கனும்

காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
குதிரையுடன் பல்லாக்கு குறையாத பல்பண்டம்
நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர்தானறிய

வாழிப்பாட்டு:
*******************
ஆதி கணேசன் அன்புடன் வாழி
வெற்றிவேல் கொண்ட வேலவர் வாழி
வாணி சரஸ்வதி மகிழ்வுடன் வாழி
எம் பெருமானின் இணையடி வாழி
பாரத தேசம் பண்புடன் வாழி
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழி
நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் வாழி
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி
வேதம் ஓதிடும் வேதியர் வாழி
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி
வாழியே யானும் மகிழ்வுடன் வாழி
என்குரு கம்பர் இணையடி வாழி
வையத்து மக்கள் மற்றவரும் வாழி
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி
வேளாளர் குலதிலகர் விவசாயரும் வாழி
இந்தபாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே

ஆல்போல் தழைதழைத்து அருகுபோல் வேறூன்றி
மூங்கில்போல் கிளைகிளைத்து முசியாமல் வாழ்ந்திருக்க
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திருக்க
மகிழ்ந்தார்கள் எல்லோரும்
மகிழ்ந்தார்கள் எல்லோரும்...

எழுதியவர் : கவிச்சக்கரவர்த்தி கம்பர் (25-Jan-14, 2:12 pm)
பார்வை : 794

மேலே