புண்படுத்தும் கவிதையும் புனை

எவரையும் புண்படுத்தாத கவிதைகள் கேட்கிறது எழுத்து வலைத்தளம்....!!!
பேருந்து இருக்கையினிடையே என் தமக்கை நீசப்பேய்களால் சிதைக்கப்பட்டதையும்...
தோட்டாவினால் தொடப்பட்ட ஈழத்தோழன் இரத்தம் தெறித்துச் சிதறியதையும்....
முகமூடி கொள்ளையர்கள் மூன்றே சவரனுக்காக முதியவரின் குருதி பார்த்ததையும்...
சாதி இரயிலினருகில் இளவரசன் பாதி உடலாய்க் கிடந்ததையும்....
மதத்தின் இரதமேறி வந்து கர்ப்பிணித்தாயைக் கயவர்கள் குத்திக்கிழித்ததையும்...
இன்னும் எண்ணிலடங்கா இன்னல்களை நேற்றும் இன்றும் கண்டபின்னும்.,
எவரையும் புண்படுத்தாக் கவிதையொன்றை நான் எங்ஙனம் புனைவது...?
கயவரைக் கண்டிக்காத மலட்டுக்கவிதையில்
எதுகைகள் இருந்தும்,நல்ல புதுமைகளிருந்தும்..
பல வரி இருந்தும்,பல்சுவை இருந்தும்...
பயன் என்ன தோழா...?

எழுதியவர் : அங்கயற்கண்ணி (15-Feb-14, 1:11 am)
பார்வை : 170

மேலே