தாயுள்ளம்

தாயுள்ளம்:

ராசா நல்ல உருளை கிழங்கு இருக்கு வாங்கி போப்பா!? என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வயது 75 யை தாண்டியிருக்கும் . இருந்த இடத்தில் இருந்து எழும்புவதற்கே சிரமப்படும் உடம்பு. இருந்தாலும் வீதியோரத்தில் இருந்து உருளை கிழங்கு விற்றுக்கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.

எனக்கு உருளை கிழங்கு வாங்கவேண்டிய தேவை இல்லாவிட்டாலும் அவரிடம் வாங்காமல் செல்லவும் மனதில்லை, அவர் சந்தோஷப்படட்டும் என்பவதற்காவே இரண்டு kg உருளை கிழங்கு கொடு பாட்டி என்றவாறே, என்ன பாட்டி இந்த வயதில் வந்து வியாபாரம் பண்ணுறியே பிள்ளைகுட்டி ஒன்னும் இல்லையா என்றேன்?

இருக்கானப்பு ஒரு பையன் இருக்கான் என்று சொன்னவாறே எனக்கான உருளை கிழங்கை நிறுத்துக்கொண்டிருந்தாள். அவனெல்லாம் ஒரு மனிசனா இந்த வயதில தன் அம்மாவை வேலை செய்ய விட்டிருக்கானே அவனையெல்லாம் வெட்டிப்போட்டாத்தான் சரிவரும் என்று மனதிலே திட்டிக்கொண்டே என்ன பாட்டி ஒத்தப் பிளைய பெத்துப்போட்டு நீ இப்படிக் கஷ்டப்படுறியே உன்ட மகன் வேலைவெட்டி ஒன்னும் பண்ணலியா என்று என் மனதின் ஆதங்கத்தை கொஞ்சம் நாகரிகமாக கேட்டேன்.

அவன் அப்பன் செத்தபிறகு மகன்தான் ஒரு ஆலையில கூலி வேலை செய்து என்னை நல்லாப் பார்த்துக்கொண்டான். போன மாசம்தான் தெரியாம இயந்திரத்தில சிக்கி ரெண்டு கையையும் இயந்திரம் வெட்டிப்போட்டுது. ஒருமாசமா ஆசுபத்திரியிலதான் இருக்கான், இனி என்ன செய்றது ரெண்டு கையுமில்லமா அவன் என்ன பண்ணுவான் அதுதான் நான் உயிரோட இருக்குமட்டுமாவது அவனுக்கு கஞ்சி ஊத்துவம் என்றுதான் உருளை கிழங்கு விற்க வந்தேன் என்றவாறே எனக்குத் தருவதற்காக மிச்சக் காசினை எண்ணிக் கொண்டிருந்தார். வேண்டாம் பாட்டி மிச்சத்தை நீயே வச்சுக்கோ அடுத்தவாட்டி உருளை கிழங்கு வாங்கும்போது பார்ப்போம் என்றவாறே நடக்கத் தொடங்கினேன். மயங்கி விழுந்த என் மனச் சாட்சியை தாங்கிப் பிடித்தபடி..

எழுதியவர் : முரளிதரன் (24-Feb-14, 3:04 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 127

மேலே