வாக்கினை அளியுங்கள் வாய்ப்பிது நமக்கு

​புலி வருது புலி வருது என்றனர்
வந்தே விட்டது தேர்தல் செய்தி !
பாவம் வாக்காளர்கள்தான் இனி
​பறந்திடும் முழுஉறக்கமும் இனி !

பார்த்திராத முகங்கள் பவனிவரும்
பாவனை செய்திடுவர் பரிவுடனே !
பணவெள்ளம் வீடுகளில் புகுந்திடும்
பாமரனுக்கு இனி பட்டுமெத்தைதான் !

பொருட்கள் அணிவகுக்கும் பின்வழியே
பொறுமை காப்பர் பொய்யரும் மெய்யாய் !
​உதவிடுவேன் சத்தியமாய் எனநடித்திடுவர்
உள்ளமே இல்லாத உலகமகா உத்தமர்கள் !

வெள்ளைநிற ஆடை விற்பனையில் கூடும்
வெண்மேக கூட்டமும் வீதிகளில் உலவும் !
கோடையில் நடைபோடும் வாக்காளரை
கோமான்கள் கடந்திடுவர் குளுகுளுப்பாய் !

காற்றிலே மிதக்கும் கடலாய் உறுதிகள்
போற்றலும் தூற்றலும் பொழிந்திடும் !
நதிகள் இணைந்திடும் நாவால் மீண்டும்
தனி ஈழமும் மலர்ந்திடும் மேடைகளில் !

அலங்கார மின்விளக்குகள் ஒளிர்ந்திடும்
அல்லல் தொடரும் மின்தடையே நமக்கு !
மறைந்த தலைவர்கள் பிறப்பர் மீண்டும்
மானநஷ்ட வழக்குகள் மலரும் இனியும் !

முடிந்த திட்டங்கள் உருவாகும் மீண்டும்
மடிந்த தியாகிகள் திருநாமம் ஒலிக்கும் !
வாக்குகள் விலையேறும் ஏலமுறையில்
நாக்குகள் சுழன்றிடும் நாவன்மை காட்ட !

எதுவாக இருப்பின் ஏமாறப் போவதுநாமே
சிந்திக்கும் ஆற்றலை இழந்தோம் என்றோ !
யோசியுங்கள் நீங்கள் யாசிக்காமல் இருக்க
வாக்கினை அளியுங்கள் வாய்ப்பிது நமக்கு !

கட்சிகளும் சாதிகளும் வளருகிறது நாளும்
பழிஉணர்வும் பொய்மையுமே உலவுகிறது !
உதவிடும் உள்ளங்களோ குறைகிறது நாளும்
இலவசங்களை கண்டு மயங்குது மனங்களும் !

அரசியல் அநாகரீகமே அரங்கேறுது இங்கே
சட்டமும் ஒழுங்கும் சவபெட்டியில் உளது !
வன்முறை கலவரங்கள் தினசரி நிகழ்வானது
தனிப்பட்ட விரோதம் தலைப்பு செய்தியாகிறது !

இறந்தவர் வருவர் வரிசையிலும் நிற்பார்
இல்லாத வாக்கை பலமுறை அளிப்பார் !
வல்லரசு நாடாக வாக்கினை அளியுங்கள்
வறுமை ஒழிந்திட்டு வளமான நாடாக்கிட !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Mar-14, 8:44 am)
பார்வை : 435

மேலே