தகிக்கிறது நெருப்பு - பொள்ளாச்சி அபி

பெருநெருப்பென தகிக்கும்
உன் பண்பாட்டுவேலிக்குள்
சிறையிருப்பதே
பெண்ணுக்கு நாகரீகம்
என்னும்
ஆலகால விஷத்தை
அருந்த வைத்துவிட்டு,
நிலவென முகம்
சுடர்மீனென கண்
பழச்சுளையென உதடு..
சங்கெனக் கழுத்து
முகடென மார்பு
கொடியென இடை
மத்தளமென புறம்
தண்டெனக் கால்
பவளமென விரல்
அன்னமென நடை..
இப்படியெல்லாம் நீ
வர்ணிக்கும்போது
அரசியல் கசடனின்
குரல்தான் எனக்கு கேட்கிறது..!
சரிதான்..,
சமூகத்தை ஏமாற்றுவதும்
சகமனுஷியை ஏமாற்றுவதும்
லாபத்திற்கான அரசியல்தானே..!
அது.. எடுக்கும் வரை
இது.. ..டுக்கும் வரை..!