கவிதை பிறப்பெடுக்கிறது

பகல் முழுவதும் வேலை
மூளை கசக்கப்பட்டு
சோர்வடைந்து கிடக்கிறது
படுத்து கெஞ்சி
பார்த்தாலும் வராத உறக்கம்

தொலைக்காட்சியின்
தொந்தரவு அடங்குகிறது
காற்றோடு சேர்த்து
சத்தத்தையும் கக்கும்
மின்விசிறியானது
தடைபட்ட மின்சாரத்தால்
தடுமாறி நிற்கிறது

அமைதி! அமைதி!
அதிகம் ஏங்குவதுதான் நான்
அந்த அமைதிக்கு

புறச்சூழல் மட்டுமே அமைதி
புண்ணாக ஆகிவிட்ட மனம்
புரண்டு கொண்டுதான் இருக்கிறது
அமைதி காணாது

முன்னிரவுக்கு படுத்து
அதிகாலையை நேரம் நெருக்குகிறது
இன்னும் உறக்கமென்பது
இமைக்கெட்டா தூரம்
உறக்கம் வந்தபாடில்லை

அரசியல் நிலைமையை
அசைபோடுகிறது மனம்
விடுதலையை எண்ணி
விழித்திருக்கிறது விழி

கண்மூடி உறங்கி
கனவு காணும் நேரத்தில்
கண்ணீர் சிந்துகிறது கண்கள்
எம் மக்களை எண்ணி

எங்கோ சென்ற மனமானது
கற்பனையை நிறுத்தி
இருக்குமிடம் வருகிறது
விரித்து படுத்திருந்த சாக்கு
நனைந்து இருக்கிறது
கண்ணீரில் குளித்து

படுக்கைக்கு கிழே
பதுக்கி வைத்திருக்கும்
எழுதுகோலும் காகிததும்
என்கையில் தட்டுப்படுகின்றது

இதோ எழுதுகிறேன்! எழுதுகிறேன்!
வார்த்தைகள் பிறப்பெடுக்கிறது
பிறப்பெடுத்து வேகமெடுக்கிறது

எண்ணங்களின் வேகத்துக்கு
எழுதுகோலினால் ஈடுகொடுக்க முடியவில்லை
மடை திறந்த வார்த்தைகள்
கவிக்கோர்வையாய் செதுக்கப்படுகிறது

கண்ணீரும் இரத்தமும்
சிந்துகிறது எனது எழுதுகோல்
சகக் கவிஞனின்(?) எழுதுகோல்
விந்து சிந்துகிறது

என்பணியை நானறிகிறேன்
என் எழுதுகோல் என்பது
எதற்கானது என்பதை உணர்கிறேன்

எழுதியவர் : வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார் (17-Mar-14, 6:31 pm)
பார்வை : 69

மேலே