ஒரு வெற்றி ஒரு மரணம்

பல உயிரினங்களில்
ஓர் இனமாய் நான்.
சில கோள்களில்
ஒரு கோளாய் பூமி.
சுயநலங்கொண்ட
எத்தனை உயிர்களை
நான் அனுசரிப்பது..?
இந்த கோள்களின்
கொடூர தாக்குதல்களை
எத்தனை முறை
நான் தாங்கிடமுடியும்?

எனக்கு தெரிவது
ஒரே ஓர் ஆகாயம்
ஒரே ஓர் ஆன்மா.
இந்த ஆன்மாவினால்
அந்த ஆகாயத்தை
எப்போது எப்படி
எத்தனை நாளுக்குள்
துளையிட
முயலப்போகிறேன்?

தரையில்
கால் பதித்து
வானின் கையை
பிடித்திட வேண்டுமாம்.
எப்படி முடியும் ?

தன்னடக்கத்தில் இருந்தால்
தன்னம்பிக்கை தள்ளாடுகிறது
தன்னம்பிக்கையில் ஆடினால்
தலைக்கணம் கொக்கரிக்கிறது..?

அனுபவங்களை படித்தால்
தோற்றவர்கள் முன் நிற்கிறார்கள்.
வெற்றியாளர்களை தேடினால்
அர்ப்பணிப்புக்கு பின் நிற்கிறார்கள்.

இதோ முடிவெடுத்துவிட்டேன்...!

தோற்று தோற்று
வெற்று தத்துவங்களை
வெள்ளைத்தாளில் எழுதும்
மாமனிதன் நானில்லை.

அர்பணிப்பு...!
அர்பணிப்பு..!
உயிரின் அர்பணிப்பு..!
உடலின் அர்பணிப்பு..!
இந்த மனித
பிறவியின் அர்பணிப்பு..!

என் கால்களை
தரையில் அகற்றுவேன்..!
என் கைகளை
வானில் வீசுவேன்..!
மனசாட்சி பேசும்
இதயத்தினை
வெட்டி கொளுத்திவிடுவேன்..!
கனவுகளை சுமந்த
கற்பனைகளை நிஜமாக்கிடுவேன்.
உடல் இறக்கையினால்
அண்டத்தினை சுற்றிடுவேன்

அந்த அண்டசுவற்றினை
வெற்றி உளியினால்
உடைத்தெறிந்துவிட்டு
எனது இந்த
அற்ப ஆன்மாவை
அண்டத்திற்கு அப்பால்
வீசியெறிந்தெடுவேன்...!

எனக்கு தேவை
இந்த நொடியில் ஒரு வெற்றி..!
அடுத்த நொடியில் ஒரு மரணம்...!


---------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (10-Apr-14, 10:07 pm)
பார்வை : 1119

மேலே