வசூலுக்கு வந்த வண்ணம்

பெண்கள் நாங்கள்
ஊர் தாண்டி
எல்லை தாண்டி
இருட்டுக்குள்தான்
செல்ல வேண்டியிருக்கிறது !
இயற்கை உந்துதலைக்
கழிப்பதற்கு !

கண்மாய்க்குள்
காட்டுக்குள்
பாம்பு கிடக்குமோ
தேள் கிடக்குமோ
தெரியாத கொடுமையினால்

கிராமத்து ரோடுகளில்
அமர்ந்து
வெளிச்சத்தோடு வரும்
வண்டிகளுக்கு
எழுந்து எழுந்து பின்
அமர்ந்து அமர்ந்து
கழிக்கும் அவலம்
தொடரத்தான் செய்கிறது !


பேருந்து கழிப்பறையோ
ஊருக்குள் இருக்கும்
ஒரே ஒரு கழிப்பறையோ
ஏன் பள்ளிக்கூடத்திற்குள்
இருக்கும் கழிப்பறையோ
மூக்கை பொத்திக்கொண்டுதான்
போகவேண்டியிருக்கிறது !
இதில் சுத்தம் சோறுபோடும்
என்னும் வார்த்தைகள் வேறு !


ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே !

கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !

எழுதியவர் : வா. நேரு (9-Jun-14, 8:02 pm)
பார்வை : 101

மேலே