அது

எதோவொரு நாளில்
அது எனக்கு
அறிமுகமானது !
அன்றிலிருந்து
அது எனக்கு
உற்ற நண்பன் !
யாராவது
அதைச் சீண்டினால்
எனக்கு
பொல்லாத
கோபம் வரும் !
திடீரென்று ஒருநாள்
அது
என்னைத் தாண்டி
வளர்ந்து நின்றது !
அது சொல்வதையெல்லாம்
கேட்க ஆரம்பித்தேன் !
எனக்கே தெரியாமல்
நானதன்
அடிமையானேன் !
தனக்கான
பெருந்தீனியை
கொண்டா கொண்டா
என
நாலாப்புறமும்
அது என்னை
விரட்டியது !
அதைத்
திருப்திப்படுத்துவதே
என் வாழ்நாள்
இலக்கானது !
சில தனிமைகளில்
அது
பூதாகரமாக
என்னைப் பார்த்துச் சிரிக்கும் !
பயமாக இருக்கும் !
என் நண்பர்கள்
அதைக் கொன்றுவிடும்படி
சொன்னார்கள் !
ஆகவே,
நானதைப் பட்டினி போட
ஆரம்பித்தேன் !
பசியால்
அது துடித்தது !
சிறுகச்சிறுக
அதைக் கொன்று விட்டதாய்
நண்பர்களிடம் சொன்னேன் !
ஒருநாள்
என் மனதின்
பாதாள அறைதிறந்து
உள்ளே சென்றேன் !
அங்கே,
சாதுவாய்
அது
அமர்ந்திருந்தது !
அதற்கான உணவை
அளித்துவிட்டு
" பயப்படாதே
நானிருக்கிறேன் "
என்றேன். !
அது புன்னகைக்க .........
நானும்,
அதுவாகிய நானும்
கைகுலுக்கிக் கொண்டோம் !
============================
- குருச்சந்திரன்