என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

வடுகபட்டியில் பிறந்த
பண்டிதனே
பத்து வயதில் கவி படைத்த
காவியனே
பெரியார் அண்ணா வழிதொடர்ந்த
முத்தே
பாரதியில் பாசமிகுந்த
வைரமே

என்ன சொல்லி விழுகிறது
இந்த மழைத்துளிகள்
உன் பெயர் உச்சரித்தே
மண்ணில் புதைகின்றனவே ....
ஆம் உனக்கு அகவை அறுபதோ
வாழ்த்துப்பாட வந்ததோ இந்த மழைத்துளிகள்

ஏய் மழைத்துளிகளே
என்ன நினைத்தீர்கள் என் கவிஞனை
அவனை வாழ்த்த உமக்கு தகுதி உண்டோ.....?

அவன் வைகறை மீன்கள்
உங்களால் நெருங்க முடியாது
அவன் நிழல்களில் அடியெடுத்து வைத்தவன்
உங்களால் தொடவே முடியாது
ஏன் உங்களுக்கு இந்த ஆசை
அவன் திருத்தி எழுதுவான் உங்கள் தீர்ப்புகளை
இங்கிருந்து ஓடோடி விடுங்கள்

எங்கே………
எங்கே………
இங்கே வாருங்கள்
இவன்தான் காவியத்தலைவன்
எங்கே உங்கள் முதல் மரியாதை
இதோ இந்த ரோஜாவை கொடுங்கள்
அவன் கைகளில்
அதுவும் கொஞ்சம் சிரிக்கட்டும்

கருத்தம்மா பெத்த வைரமே
கவிகளின் கலைமாமணியே
எல்லா நதியிலும் என்னோடும்
இணைந்த வரிகளின் கருவுருவே
என் சின்ன சின்ன ஆசைகளை
செதுக்கிய சீமானே
தண்ணீர் தேசத்தின் சொந்தக்காரனே
வில்லோடு விளையாட
நிலவுகொண்டு வந்தவனே


உன்னை ஈன்ற தாயும்
உன்னை ஏந்தும் புவியும்
என்ன தவம் செய்தாளோ
கவிப்பேரரசை கருவிலும்
மடியிலும் சுமப்பதற்கு ......

என் கவியே
கவியின் பிறப்பே
பிறப்பின் கருவே
அட நீதான் கவிப்பேரரசே
அகவை எத்தனை சென்றாலும்
உன் வரிகளுக்கு வயதாகுமா ..?
கடல் நீர் வற்றிப்போனாலும்
உன் கற்பனை கடல் வற்றலாகுமா ...

இன்னும் எத்தனை கவி காண
நாம் ஏங்கி இருக்கின்றோம்
நீ நீடூழி வாழ நாங்கள்
வாழ்த்துப்பா படிக்கின்றோம்

எழுதியவர் : நுஸ்கி.மு .இ .மு (5-Jul-14, 7:39 pm)
பார்வை : 249

மேலே