நீரின்றி பாரேது

உயிரினங்கள் இப்புவியில் உய்ய
தாவரங்கள் தழைத்தெங்கும் ஓங்க
முப்பாகம் நீ கொண்டாய்
முன்னிலையில் நீ உறைந்தாய்!
திட வடிவில் பனியானாய்
வளிம வடிவில் நீராவியும்
வெண் புனலே என்னுயிர் காக்க
மண் மேலே திரவமுமானாய்!
ஊற்றாக நீ பிறந்து
ஆற்று வழி தான் கடந்து
மலை உச்சிதனை நீயடைந்து
தலை கீழ் வீழ்ந்தாயே
நீர் வீழ்ச்சி ஆனாயே!
காடு மலை தாண்டி வந்து
கரைகளிலே புரண்டு எழுந்து
சுழித்தாங்கே படித்துறை யமைத்து
வழி நெடுகும் செழித்தோங்க
ஆழி தனில் நீ கலந்தாய்!
வேளாண்மை இன்னதென்றே
வேறெவரும் அறிந்திடுமுன்
ஆற்றினிலே அணை கட்டி
சேற்றினிலே வயல் கட்டி புவி
போற்ற வாழ்ந்திருந்தோம்!
ஆலயம் தோறும் குளம் கட்டி
ஆங்காங்கே குட்டை வெட்டி
வழிந்தோடும் மழை நீரை
தெளிந்த பின்பு பயன் பெறவே
தேக்கமெங்கும் நிறைத்திருந்தோம்!
பேரலை கொண்டதனால்
பெருங்கடல் ஆனாயோ
பேராசை கொண்ட மக்கள் உன்
பேராற்றல் அறிவாரோ
உள்வாங்கும் ஒரு பொருளும்
உள்ளடக்கும் வழக்கமில்லை
உள்ளது உள்ளபடி
கரைசேரும் மாற்றமில்லை!
அணு கழிவுகள் தந்தோம்
அனு தினமும் கொன்றோம்
சாயங்கள் கலந்திட்டோம் பல
காயங்கள் தந்திட்டோம்
குளங்குட்டை மூடிவிட்டோம் உயர்
கூடங்கள் அமைத்திட்டோம்
ஆழ் துளையிட்டே உனை
மிச்சமின்றி எடுத்திட்டோம்!
உன் நிலை நீ கடந்து விட்டால்
பாலை வனமும் தோப்பாகும்
சோலை வயலும் வெறுங்காடாகும்
பூகோளம் மரித்து விடும்
பூலோகம் அழிந்து விடும்!
என்றோ ஒரு சுனாமி
எங்கேயோ பெரு வெள்ளம்
ஆங்காங்கே வரும் வறட்சி
பாடம் புகுத்தியும் புரியவில்லை எமக்கு
கண்ணீர் விட்டாலும்
தண்ணீர் கிட்டாதே - மேலும்
நீரின்றி பாரேது?????