பொறுமை

புத்தகங்கள் அறிவின் திறவுக்கோல். இந்தத் திறவுக்கோல் அறிவை மட்டும் திறக்கின்றதா? அல்லது பிற உணர்வுகளைத் திறக்கின்றதா? என்பதைப் பார்ப்போம். ஆயிரம் பக்கங்களைக் கொண்டப் புத்தகத்தை ஒரு அறிவாளி பொறுமையுடன் படித்து மேலும் பேரறிஞன் ஆகின்றான். ஆனால் அந்தப்பேரறிஞன் வாழ்க்கையில் சாதிக்கின்றானா? இல்லையா? என்பதை அவனது வாழ்க்கை நெறிமுறையில் காண முடியும் . ஒரு புத்தகத்திற்குப் பொறுமையைக் கடைப் பிடிக்கின்றவன் வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களுக்கும் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை அவனுக்கு சாதனைப் புத்தகமாக விளங்கும். அல்லது அவனால் வாழ்க்கையில் சாதனைப் படைக்க முடியும். பல புத்தகங்களைக் கற்றுணர்ந்த பேரறிஞனுக்குப் பொறுமையைக் கடைப்பிடிக்காத வாழ்க்கைத்துணை அமைகின்றது என்பதை வைத்துக்கொள்வோம். அப்போது அவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவைகள் ஏராளமாக இருக்கும். அத்தனைக்கும் பொறுமை ஒன்றே மூலக் காரணமாக அமையும்.
ஓரளவிற்குப் படித்த ஒருவனுக்கு பொறுமையின் சிகரமாய் வாழ்க்கைத் துணை அமைகிறது என்பதை வைத்துக் கொள்வோம். அவனுக்கு வாழ்கை ஒரு சாதனைப் புத்தகமாக திகழும். ஏனெனில் பொறுமை உள்ள இடத்தில் பூகம்பம் வெடிப்பதில்லை. இருவருமே பொறுமை உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பதை வைத்துக் கொள்வோம்.அவர்கள் இருவரும் எந்த ஒரு செயலையும் பொறுமையுடன் செய்து வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பங்கிட்டுக் கொள்வார்கள். இவர்களிடம் சந்தோசம் தங்குவதற்குக் காரணம் பொறுமை
பல புத்தகங்களைக் கற்றறிந்தப் பேரறிஞன் பொறுமையுடன் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை அனுபவ ரீதியாக படித்தும்,செயல்படுத்தியும் வரவேண்டும். அப்போத்துதான் அவனுக்கு வாழ்க்கை ருசிகரமாக இருக்கும். பொறுமை இல்லாத ஒரு நபரிடம் ஆணவம் தாண்டவமாடும். அந்த ஆணவச் செறுக்கால் ஒருவனுடைய வாழ்க்கைத் தேவை இல்லாதப் பக்கங்களைக் கிழத்து எறிவதைப் போல் ஆகிவிடும். பொறுமை துணிவைத் தருகிறதா? அல்லது சோம்பலைத் தருகிறதா?ஒரு மனிதன் பொறுமையை எல்லா செயல்பாட்டிருக்கும் பயன்படுத்தினால்,அது சோம்பேறித் தனமாகும். எந்த எந்த செயலுக்குப் பொறுமையைக் கடைப்பிடித்தால் அது துணிவைத் தரும்.துணிவு என்பது வேறு. சோம்பல் என்பது வேறு. சோம்பலையும் பொறுமைதான் விதைக்கிறது. துணிவையும் பொறுமைதான் விதைக்கிறது. பொறுமைக்குப் பல உதாரணங்கள் எடுத்துக் கொள்வோம்.
ஒரு சிற்பி ஒரு சிலையை செதுக்கவேண்டும் என்றால் அவனிடம் பொறுமை இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த சிற்பி சிலையை செதுக்கமுடியும். அந்த சிற்பியின் கைகள் உளியுடனும், சிந்தனையுடனும் செயல்படும் போதுதான் சிலை உருவாகுது. பொறுமைக்கு மற்றொரு பெயர்தான் சிந்தனை. கடலிலும் மிகப் பெரியது பொறுமை என்பார்கள். ஆம். வற்றாதக் கடலே பெரிது என்றால் அதைவிட பொறுமை எவ்வளவுப் பெரிதென்று ஒருவனுடைய செயல் மூலம் அறிய முடியும். சாதிக்க நினைக்கின்றவர்களிடம் பொறுமை அதிக அளவில் பெரிதாக நிறைந்திருக்கும். சாதிப்பதற்கு அறிவுடன் பொறுமையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அறிவு என்பது நன்மைத் தீமைகளைப் பிரித்துப் பார்ப்பதற்குத் திறக்கின்ற உணர்வின் திறவுக்கோல். பொறுமை என்பது அந்த உணர்வின் திறவுக்கோலால் பல செயல்களை வாழ்க்கையில் செய்துக் காட்டக் கூடியதாகும். காற்று பலமாக வீசினால் கடல் கொந்தளிக்கும். கடல் கொந்தளித்தால் "சுனாமி" தலை விரித்தாடும். "சுனாமி" தலை விரித்தாடினால்,அழிவுகள்தான் தோன்றும். அதேப்போல் ஒரு மனிதனுக்கு ஆணவம் என்ற காற்று வீசினால் "கோபம்" என்ற சுனாமி அவனிடம் நிறைந்திருக்கும். இதனால் இழிவு அவனுக்கு மட்டும் அல்ல அவனைச் சார்ந்த சமுதாயத்திற்கும் தான். சிந்திக்கத் தெரிந்தவன்தான் சாதனை சிகரத்தை எட்டத் தெரிந்தவன். ஒரு மனிதனுக்கு பல உணர்வுகள் அவனுக்குள் புதைந்திருக்கும் பரிவுக் காட்டுதல்,பிறருக்கு உதவி செய்தல், ஆவேசம் கொள்ளுதல்,அடங்கிப் போகுதல், அடக்கி ஆளுதல் ,பழித் தீர்த்தல்,கயமைக் கொள்ளுதல், கடமைத் தவறுதல், கண்ணியம் காத்தல், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல், இவையாவும் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாகும். நமது பாரத தேசத்திற்கு சுதந்திரம் என்ற வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்கு தேசப்பிதா மகாத்மாகாந்தி அவர்கள் வெள்ளையனின் ஆணவச் செருக்கை தமது பொறுமையால் அடைக்கினார். அந்த ஆணவச்செருக்கு ஆளனை சிந்தனைக் கொண்டும், பொறுமையுடன் கையாண்டும் சாதித்ததால்தான் என்றைக்கும் அவர் தேசப் பிதாவாகவே திகழ்கின்றார். இவருக்கு முன் சுவாமி விவேகானந்தர்,ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் கண்டதை தமது செயல்பாடுகளில் செய்து காட்டினர். அதுதான் அவர்களது பல போதனைகள். போதனைகள் என்பது மற்றொரு அறிவின் திறவுகோல். தத்துவத்தின் திறந்த வாசல். தத்துவங்கள் வாழ்க்கையின் மகத்துவங்கள். இவற்றை எல்லாம் எவனொருவன் வாழ்க்கையில் கடைப் பிடிக்கின்றானோ அவன் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நன்கு அறிவோம். இந்தப் பொறுமைக்கு மறு பெயர்தான் சகிப்புத் தன்மை. சகித்துக் கொள்ளாதவன் சாதிக்கத் தெரியாதவன். பல புத்தகங்களைக் கற்றவனை புத்திசாலி என்று சொல்கின்றோம். அந்தப் புத்தகங்களை வாழ்க்கையில் கடைப் பிடிக்கத் தெரிந்தவனை பொறுமைசாலி என்று சொல்கின்றோம். வாழ்க்கையில் சாதிப்பதற்கு அறிவும், அறிவுடன் பொறுமையும் மிக அவசியமாகும். ஒரு கட்டிடம் உருவாக வேண்டும் என்றால் அதற்க்குக் கட்டிடப் பொறியாளரின் கிட்டிட வரைபடம் மிக அவசியம். அந்தக் கட்டிடப் பொறியாளருக்குத் தேவை பொறுமை. பொறுமையுடன் கட்டிடப் பொறியாளர் வரைகின்ற வரைபடத்திற்கு ஏற்றவாறு கட்டிடம் உருவாக வேண்டும் என்றால் பொறுமையுடன் செயல்படுத்தக் கூடிய மனிதர்கள் வேண்டும். அந்த மனிதர்களிடம் பொறுமை இருந்தால்தான் ஒரு கட்டிடம் ஒன்றுபட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக விளங்கும். இங்கே அறிவு செறிந்த ஒரு மனிதனும், பொறுமை நிறைந்த பல மனிதர்களும் தேவைப்படுகிறது. அறிவும் பொறுமையும் ஒரு மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது. கண்களுக்குள் வேறுபாடு இருந்தால் காட்சிகளில் மாறுபாடு தெரியும். அதனால்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் கண்கள் சமமாகப் படைக்கப் பட்டுள்ளது. சமமாகப் படைக்கப் ட்டக் கண்களால் கானப்படுகிரக் காட்சிகள் ஒரே சம நேர் கோட்டில் செல்லுகின்ற கோள்களைப் போல் தெரிகின்றன. அதேப் போலத்தான் அறிவுக் கண் திறந்தவனும், பொறுமைக் கண் திறந்தவனும் அமைந்துவிட்டால், வாழ்க்கையில் பல உன்னத செயல்கள் சமமாக இருக்கும். பொறுமை என்பது பூக்களைப் போல், மிகவும் மென்மையானது. ஆணவம் என்பது நெருப்பைப் போல். மிகவும் கொடுமையானது. பொறுமையிடம் உண்மை இருக்கும். ஆணவச் செருக்கு உள்ளவனிடம் பொய்மை நிறைந்து இருக்கும். ஒரு தவறுக்கு பல தவறுகளை செய்ய உந்த வைக்கும் ஆணவம். ஆனால் பொறுமை ஒரு தவறு செய்ததும், தன்னையே திருந்த வைக்கும். அல்லது அந்த தவறுக்காக தண்ணிய வருந்த வைக்கும். உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். தப்பு செய்தவன் தண்டனைப் பெற்றே ஆகவேண்டும். உப்பு என்பது இயற்கையில் கரிக்கக் கூடியது என்பது எல்லோருக்கும் தெரியும். தவறுதலாக உப்பு தின்றுவிட்டால் உடனடியாக நாம் தண்ணீர் குடிக்கின்றோம். தண்ணீரைக் குடித்ததும் உப்பின் கரிப்புத் தன்மை ஜீரணம் ஆகிவிடும். அதேப்போலத்தான் கோபம் என்ற உப்பு ஒருவனிடம் அதிகம் இருந்தால் அவன் வாழ்க்கையில் பொறுமை என்ற தண்ணீரைத் தேடுகின்றான். எனவே வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் பொறுமையைக் கண்டிப்பாக எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டும். பொறுமையைக் கடைப் பிடிப்பதால் சோம்பலும் விழித்துவிடும். அந்த சோம்பலையும் ஒழிக்க வேண்டும் என்றால் சிந்திக்க வேண்டும். சிந்திக்கத்(மன்னிக்கத்)தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா என்று ஒரு கவிஞன் பாடியுள்ளான். விளக்கு எரியும் என்றால் வெளிச்சம் வராது. அந்த விளக்கு எரிவதற்கு ஒரு தீக்குச்சியை உரசவேண்டும்.அப்போதுதான் விளக்கு வெளிச்சத்தைத் தரும். அதேப்போல் சாதிக்க வேண்டும் என்றால் சாதிக்க முடியாது. சாதிப்பதற்கு சிந்திக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். சிந்திப்பதை உரசிப் பாருங்கள். சாதனையின் வெளிச்சங்கள் உங்கள் வாழ்க்கையில் கிட்டும். ஒரு நாணயத்திற்கு இரண்டுப் பக்கங்கள் உள்ளதைப்போல், பொறுமைக்கும் இரண்டுப் பக்கங்கள் உண்டு. ஒன்று சிந்திப்பது. மற்றொன்று சாதிப்பது. கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் யாவும் சிந்திக்கக் கூடியப் பாடல்கள் ஆகும். இவரைப்போல் காவியக் கவிஞர் வாலியின் பாடல்களும் சிந்திக்கக் கூடிய பாடல்கள் ஆகும். இந்தக் கவிஞர்களைப் போல் நடன இயக்குனர்களும் சாதிக்கக் கூடியவர்களாவர். எப்படி என்றால் இசைக்கேற்ப உடலை அசைக்க வேண்டும் என்றால் நடன இயக்குனர்கள் ஆடிக் காட்டுவார்கள். அதற்கேற்ப ஆடினால் நாட்டியமாகும். ஆடத் தெரிந்தவர் யாரோ? பாடத் தெரிந்தவர் யாரோ? அவர்களெல்லாம் சாதிக்கத் தெரிந்தவர்கள். ஆடத் தெரிந்தவனுக்கும், பாடத் தெரிந்தவனுக்கும் உள்ளுக்குள் இருப்பது பொறுமையின் சிந்தனைப் பக்கமே. இயல், இசை மற்றும் நாடகம் இம்மூன்றுக்கும் தேவைப் பொறுமை. பொறுமையுடன் இம்மூன்றையும் ஒருவன் கற்றுக்கொண்டால் அவன்தான் சாதிக்கத் தெரிந்தவன். சார்லிசாப்ளின் என்ற ஒரு மாபெரும் கலைஞனை நாம் நன்கு அறிவோம். அவனது நடையிலும், செயலிலும் சிந்திக்கக் கூடிய வகையில் இருக்கும். வாழ்க்கையில் சாதிப்பதற்குப் பொறுமை மிக அவசியம் என்பதை பல முன்னோர்களின் வாழ்க்கைத் தரம் நமக்கெல்லாம் ஒரு அனுபவ பாடமாக அமைந்திருக்கிறது. அவர்களைப் பின்பற்றுவோம். அவர்களைப் போல் நாமும் சாதிக்கப் படைப்போம். சாதிப்பதற்கே பிறந்த நாம் சாதனைக்கே சாதனைப் படைப்போம். சமீபக் காலத்தில் இந்திய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 5வது இடத்தைப் பெற்றிருப்பதை அறிந்திருக்கின்றோம். விளையாட்டிலும் பொறுமை மிக அவசியம் என்பதை விளையாட்டு வீரர்கள் சாதித்துக் காட்டிவிட்டார்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களை பாராட்டுகள் தேடி வருகின்றன. எவற்றிர்க்கேல்லாம் அவர்களது பொறுமை மிக்க செயல்பாடே சிறந்த உதாரணமாகும். 5வது இடத்தில் உள்ள இந்தியாவை 1வது இடத்திற்குக் கொண்டுவருவதற்கு நாம் பொறுமையுடன் நமது செயலில் காட்டுவோம். இன்னும் பல சாதனைகளை இந்தியாவிற்குள் படைப்போம். இந்தியாவின் பெருமையைக் காப்போம். பெருமையைத் தேடித் தருவது பொறுமை என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். பெருமைமிகு பொறுமையாய் வாழ்க்கையில் கடைப் பிடிப்போம். நடைப்போடுவோம். தடைகளைத் தகர்வோம்.

எழுதியவர் : சு, சங்கு சுப்ரமணியன். (17-Aug-14, 7:12 am)
சேர்த்தது : s.sankusubramanian
Tanglish : porumai
பார்வை : 3334

சிறந்த கட்டுரைகள்

மேலே