அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அன்பான வாழ்க்கை சந்தோசமாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
எந்நாளும் வாழ்க்கை பூந்தோட்டமாய்
என்னுள்ளம் பாடும் சங்கீதமாய்
மனமறிந்து அதன்படியே நடப்பவள் என் மனைவி
மனையறத்தை நல்லறமாய் நடத்திவரும் துணைவி
எனக்கேற்ற துணையானாள் தாய்க்குப்பின் தாரம்
என்றும் என் வாழ்க்கைக்கு இவளேஆ தாரம்
உதவுகின்ற குணமுடையாள் தொப்புள்கொடி பூத்தான்
உதிரத்தை தந்துபிறர் உயிரதனை காத்தான்
உதவுவது மனிதாபி மானமென கண்டேன்
உண்மையிலே என்மகனால் பெருமிதமே கொண்டேன்
என்கடமை பணிசெய்து கிடப்பதென அறிந்தேன்
இதனால் தான் நல்வாழ்வு துறைப்பணியில் தொடர்ந்தேன்
இன்னுமொரு பிறப்பெதற்கு இன்றே நீ உதவு
இதற்குத்தான் நமைஎல்லாம் படைத்திட்டான் கடவுள்..
புல்கூட பிணிதீர்க்கும் மருந்தாகி உதவும்
பூண்டுந்தான் சுவைகூட்டும் விருந்தாக்க உதவும்
மண்புழுவும் உழவருக்கு உழவதனில் உதவும்
மரங்கூட உயிர்வளியை தந்துநமக் குதவும்
நாம்தோண்டும் நிலம்நம்மை தாய்போல சுமக்கும்
நம்மனதில் பொறுமையதன் பெருமையினை உரைக்கும்
நாம்தோன்றி செய்ததென்ன நமைநாமே கேட்போம்
நம்மாலே இயன்றவரை உதவவழி பார்ப்போம்
அடுப்படியில் குட்டிபோட்ட பூனைக்கருள் புரிந்தார்
அதைவிரட்ட மனமின்றி கருணைக்கடல் கனிந்தார்
அடுப்புவேறு மூட்டென்றார் நம் காஞ்சி துறவி
அன்பேதான் கடவுளென காட்டிவிட்டார் துறவில்
அடுத்தவர்க்கு உதவிடத்தான் கிடைத்ததிந்தப் பிறவி
ஆனந்தம் உதவுவதில் வருமென்றே அறிவி