வாழும்வரை இன்பமே வையகத்தில்
காணும் கனவெலாம் நனவானால்
கானல் நீரும் கடலாய் மாறிடும் !
வேண்டுதல் எல்லாம் நடந்திட்டால்
வேள்வியும் கேள்வியும் மறைந்திடும் !
கற்பனைகள் எல்லாம் உண்மையானால்
கற்சிலைகளும் உயிராய் எழுந்திடும் !
முடிவுறும் நிகழ்ச்சிகள் சுபமானால்
முப்பொழுதும் மனங்களும் மகிழ்வுறும் !
ஓவியங்கள் யாவும் உயிர்பெற்றால்
காவியங்கள் படைக்கும் தூரிகைகள் !
பயணிக்கும் பாதை பகுத்தறிவானால்
வாழ்க்கைப் பயணமும் இனித்திடும் !
நட்பொன்றே மனதில் உணர்வானால்
பகையென்பதே பாரினில் மறந்திடும் !
உறவுகள் எவையும் வாய்மையானால்
உள்ளமும் இல்லமும் தூய்மையாகும் !
காழ்ப்பும் கசப்பும் மறைந்துவிட்டால்
காரிருளும் நமக்கு ஒளிமயமாகும் !
விருப்பும் வெறுப்பும் வெளியேறினால்
விவேகமே என்றும் நிலைத்திடும் !
வேசமும் விஷமும் விலகிப்போனால்
பாசமும் நேசமும் நிலைத்துநிற்கும் !
வாசிப்பவர் அனைவரும் புரிந்திட்டால்
வாழும்வரை இன்பமே வையகத்தில் !
பழனி குமார்