உணவுக் கலைச்சாரம்

பண்டைய தின்பண்டமெல்லாம்
தொண்டையில அடைக்குது!
இன்றைய தின்பண்டமெல்லாம்
மண்டையில ஏறுது!
செட்டிநாட்டுக்கோழி வறுவல்
புதுசா இருந்தும் மதிப்பு குறையுது
மேல்நாட்டுக்கோழி வறுவல்
செத்தே மாசமாகியும் விலை உயருது!
ரேஷன்கடையில மக்கள் வரிசையில் நின்னு
அரிசி சக்கரை வாங்க தயங்குது
வெளிநாட்டுக்காரன் வைச்ச கடையில, கண்ணு
வறுத்த கோழிக்கு வரிசையில நிக்குது!
கேழ்வரகு அடையை அடகு வைச்சுட்டு
மைதா அடையை அடைய ஊர்விட்டு
ஊர்சென்று நாகரிக கொக்கரிக்கும் இளையவர்
உயர்வகுப்பின் வாழ்க்கை முறையாய் கொண்டாடுகிறார்!
சிறுதானிய உணவின்முறை மறக்கடிக்கப்பட்டு
வறட்சியின்போது உணவுப்புரட்சியின் பெயராலே
அரிசியில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு
விளைஞ்சது என்னவோ சர்க்கரை நோய்தானே!
டீக்கடைப் பெஞ்சு கொடுத்த உறவுகூட
காபிக்கடை சோபா தர மறக்குது!
ரோட்டுக்கடை இட்லிவடை ஊர்முழுக்க மணக்குது
ஃபாஸ்ட்ஃபுட்கடை கறிச்சோறு வயித்த கணக்குது!
இயற்கை உரமிட்டு விளைவிச்ச என் தாத்தாவுக்கு
மிச்சமானது என்னவோ அவரு பேரு மட்டும்தான்
இன்றைக்கும் அதையே விக்கிறவங்க வாழ்க்கை
உச்சமானது, காலமாறிப் போச்சோ! அட விட்டுடுங்கப்பா...!
முன்னவங்க சமைச்ச உணவ அமுதுன்னு சொல்லுவாங்க
சொன்னவங்க உணவையே மருந்தாக செஞ்சாங்க
இன்னவங்க சமைக்கிறதையே சங்கடமா பார்க்கிறாங்க
பார்க்கிறவங்க மருந்தையே உணவாக மாத்திறாங்க
இப்படியேப் போனா உணவும் மருந்தும்
இனிமே வெறும் மாத்திரைதாங்க...!
இதை அறிஞ்சேனும் இனியாவது
நம்ம ஊரு உணவுப்பழக்கத்துக்கு மாறுங்க...!