குண்டூசி வார்த்தைகள்
உனக்குள் இப்போது
ஊசித்துளைப்பின் வலியாய்
ஓராயிரம் கேள்விகள் ......
மருந்து செலுத்தியும் மரிக்கமறுக்கிறது
உன் மீதான காதல் காய்ச்சல்
தொண்டைக்குள் சொருகிய
கெண்டைக்கயல் முள்ளாய்
விழுங்கவும் விடாமல்
விக்கலாய் எழும் வினாக்கள்
அன்பு எப்போதும் நீர்க்குமிழியா
இல்லை நீர்க்குடமா? எனஅறியாமல்
தண்ணீரில் தள்ளாடும்
தடமில்லா நிழலாய் தவிப்பில் நீ
நீர்விட்டு அழித்தாலும் அழியாத
அகலாத உன் நிழல் நான்
மெய்க்காக அல்ல.... மெய்யாக என
எப்போது உணரப்போகிறாய் ?
கவிதாயினி நிலாபாரதி