நாளும் பொழுதும் காத்திடு
பட்டம்விடும் பருவத்தில்
சட்டையின்றி விளையாடு !
பாலகனாய் மாறிவிட்டால்
கல்வியுடன் விளையாடு !
வாலிபத்தை அடைந்தால்
சமுதாயத்தை எடைபோடு !
வாழ்ந்திடும் காலம்வரை
நல்வாழ்விற்கு வழிதேடு !
கணவனென நிலையானால்
மனைவியை மகிழ்வித்திடு !
தந்தைநிலை வந்திட்டால்
பிள்ளைகளை கவனித்திடு !
வளர்ந்திட்ட செல்வங்களுக்கு
கடமைதனை செயலாற்றிடு !
தாத்தாஎன உயரும்போது
தன்னிறைவுடன் வாழ்ந்திடு !
ஓய்வுபெறும் காலம்வந்தால்
சாய்வாக அமர்ந்து ஓய்வெடு !
நினைவலைகள் மோதும்போது
நிம்மதியாய் அதை அசைபோடு !
உடல்நிலை ஒத்துவந்தால்
சமுதாயத்திற்கு பாடுபடு !
கடலான நம் சமூகத்திற்கு
கடமையென நினைத்திடு !
உள்ளவரை உலகைநினை
ஊருக்கும் உழைத்துவை !
நம்மினம் நம்மொழியை
நாளும் பொழுதும் காத்திடு !
பழனி குமார்

