வஉசிகுழந்தைப் பாடல்

வ.உ.சி.///////குழந்தைப் பாடல்.

கப்பல் ஓட்டிய தமிழன் யாரு?
கண்மணி கூறு.
இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்த கப்பலு
இந்தியாவில் ஒருவர்தானே
என்பது பேரு.
சிங்கம் அவர் தென் தமிழன்
சிதம்பரனாரு.

வ.உ.சி. என்றாலே வள்ளல்
என்பாரே.
வரலாறு அறிந்தாலே வீரன்
என்பாரே.
பிள்ளை என்று சொன்னாலே
உள்ளம் பதறுவார்.
வெள்ளை அவன் இவராலே
வியர்த்துக் கொட்டுவான்.

பக்க ஊரு பதிந்த வீரம்
பாஞ்சாலங்குறிச்சி
திக்கெல்லாம் திகில் பரவும்
தில்லென உதிச்சு.
கட்டபொம்மன் விட்ட இடம்
தொட்ட வீரரு
ஓட்டப்பிடாரம் உலக நாதர்
பெற்ற பிள்ளையிவரு.

செக்கிழுத்த செம்மல் இவர்
சொத்திழந்தாரு.
சுதந்திரந்தான் சொத்து என
சுகமிழந்தாரு.
வக்கீலாக வாழ்ந்த இவரு
கல்லுடைச்சாரு
வாழும் நாட்டின் உரிமைக்காக
வறுமைப் பட்டாரு.

பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்தாரு.
மிச்சம் என்ன உயிர் அதையும்
துச்சம் என்றாரு.
முத்தமிட்டே பாரதத்தை
முன் மொழிந்தாரு.
கட்டாயம் விடியும் என்றே
கண் அயர்ந்தாரு.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (19-Nov-14, 7:57 pm)
பார்வை : 403

மேலே