வீம்புக்கு வீரம் வளர்ப்பவன்

வீரம் இருக்குத் தமிழனிடம்.
வீம்பும் இருக்கு அவனிடம்.
வாழவேண்டும் வாழவேண்டும்
வீரத் தமிழன் என்று
வாழவிடாமல் தடுக்குது
வீம்பு பிடித்தக் கூட்டம் ஒன்று.
இங்குள்ளத் தமிழ்
இனங்கள் சாதிவாரியாய் பிரிந்துவிட்டது.
இலங்கையில் வாழும் தமிழ்
இனங்கள் மீது கரிசனம் வந்துவிட்டது.
ஒன்றுபட்ட தமிழ் இனத்தின் வீரத்தை
ஒட்டுறவு இல்லாமல் வீம்புக்குச் சிதைச்சாச்சு.
சாதிப் பேரு சொல்லியே வம்புகளை விதைச்சாச்சு.
நீதிபோதனை - தமிழனிடம்
நிற்காமல் அலைய விட்டாச்சு.
கட்டபொம்மன் காலத்திலேயே - தமிழனைக்
காட்டிக்கொடுத்த ஒரு
எட்டப்பன் மட்டும் எட்டிப் பார்த்தான்.-இன்றோ
எத்தனையோ எட்டப்பன்கள்
கட்டபொம்மன் கெட்டப்பில்
வீம்புக்கு வீரத்தை
வளர்க்கின்றார்கள். - தமிழனை
சாதிவாரியாய் கூட்டம் சேர்க்கிறார்கள்.
ஒன்றுப்பட்டத் தமிழரினம்
ஓங்கி உடைத்தப் பானைப்போல்
ஒவ்வொரு சாதிக்குள் சிதறிக்கிடக்குது.
ஒவ்வாதக் கொள்கைகளை
ஓதி ஓதியே தமிழனின் வீரத்தை
ஓரங்கட்டி அடக்கி ஆளுது.
நிறத்தை மாற்றும் ஓணானைப் போல்
சிறுத்தையாய் மாறி சீறிப் பாயுது.
பாக்கை வெட்டும் கருவியாய் - போலிகள்
நாக்கை வளர்த்து நகரலாச்சு.-தமிழ் இன
மக்களுக்காக சேவை என்று - தம் குல
மக்களுக்காக சேவை செய்யும்
மகுடம் சூடா தலைவனாக ஆயாச்சு.
கலக்கத்தை தமிழகத்தில் தூவவிட்டு
கலவரத்திற்கு வீரத்தை வளர்த்தாச்சு.
குடியுரிமை தான்மட்டும் பெற்றிடவே
"குடி" மகன்களை "குடி"உரிமைக்கு மட்டும்
கொண்டுபோயி வாழவிட்டாச்சு.
கோபுரத்தில் தான் மட்டும் ஏறிடவே
கோலேச்சும் பொய்யானக் கொள்கைகளை
கொட்டிப் பேசியே வீம்புக்கு வீரத்தை வளர்த்தாச்சு.
தமிழா! - "தமிழ் வாழ்க" என்று மட்டும் முழங்காதே.
தமிழோடு தமிழினமான நீயும்
தலைநிமிர வீம்புக்கு வீரத்தை வளர்க்காதே.
வீரம் என்பது உன்னோடு விதைக்கப்பட்டது.
வீம்பு என்பது உனக்குள் தூவப்படுவது.
தூவியதை துரத்திவிடு. - வீரத்தின்
தூயவனாய் மாறிவிடு. - போலி அரசியல்வாதிகளின்
தொண்டனாய் அலைவதை நிறுத்திவிடு.
அவனல்லவா தமிழையும் தமிழனான உன்னையும்
அவமானபடுத்துகிறான்.-இதனை நீ அறியாயோ.
அறிந்தும் அறியாமல் இருக்கின்றாயோ.
அன்றைய காலத்து வீரத்தில் வேட்கை இருந்தது.
இன்றைய காலத்து வீரத்தில் வீம்பு இருக்கிறது.
வீம்புக்கு வீரத்தை வளர்ப்பதால் - தமிழினத்தின்
வெளிச்சங்கள் இருட்டுக்குள் அல்லவா வீழ்ந்து வருகிறது.
வீழ்வதற்கா நீ தமிழனாய் வாழவந்தாய்.
வீழ்வதற்காத் தமிழையும் வளர்க்கின்றாய்.
பிற மொழி பேசும் மனிதனைப் பாரடா - அவனைப்
போல் நீயும் தமிழை வாழவைக்க வேணுமடா.
தீக்குச்சித் தானே தீபத்தையும் ஏற்றுகிறது.
தீதையும் ஏற்றுகிறது. - போலியானவர்கள்
தீக்குச்சியைப் போன்றவர்கள். - அவர்கள்
உன்வீட்டு தீபத்தை ஏற்றுவதில்லை.- உன்னால்
அவன்வீட்டு தீபம் ஏற்றப்படுகிறது.- நீ
மாண்டப்பின்தான் மாலையோடு வந்து
மரியாதை உனக்களிப்பான். - நீ
மண்ணுக்குள் போனதும் - நாளடைவில்
மறந்துவிடுவான். - ஒரு தமிழன் நீ
மாண்டாலும் இன்னுரு தமிழன் மூலம்
ஆண்டாள வீம்பினை வீரமாய் வளர்ப்பான்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (6-Dec-14, 6:28 am)
பார்வை : 1614

மேலே