நானும் பெண்தான்

எதிர் நின்று பார்க்கக் கலங்குகிறேன்
என் விழி உன் விழிக்கு
இடும் நேர் கோட்டை
உன் விழி என் விழிக்கு
இணைகோடாக்கி விடுமோ - என்று
உனக்கு எதிராய் ஒலியுடன்
வர மறுத்து சிறைப்பட்டது
என் வாக்கியம் என்னுள்ளேயே..
வெளிவந்தால் சிறை பட்டு விடுமே ;
அதுவும் உன் செவிகளிடம்..
நீ எதிரில் நின்றால்
என் எழுத்து வேலைக்கு எவ்விதமும்
இல்லை பாதிப்பு !
என்னை இழந்து
எழுதுகோல் மறந்து
எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்
ஏக்கப் பார்வைகளால்
நீ எழுந்து செல்லும் வரை!
நேற்று எடுத்து வைத்த
உன் பாதத்தடம் உன்
பார்வைக்கும் விழுகிறதா?
இன்றும் அதே தடம்
உன் பாதங்களுக்கு …
சிறிதேனும் நகர்த்தி வைத்தால்
வேறிடமும் ஓவியம் கொள்ளுமே!
இன்று ஏன் எந்த கோப்புகளிலும்
சந்தேகம் எழவில்லை உனக்கு?
அதைத் தீண்டியாவது இன்றைய
தேதிக்கு நாள்காட்டியில் வட்டமிட்டிருப்பேன்.
நீ கசக்கிய காகிதங்களும் கூட
ஒளிந்து கொண்டதேன்?
நீ தொட்டவுடன் மோட்சம் கொண்டனவோ?
தினமும் வேண்டுகிறேன் தமிழ் மொழியிடம்
புது வார்த்தை ஒன்றை ஈன்றெடுக்க
அதை உன் பெயராக பரிசளிப்பேன் ..
பெண்ணே உன்னைப் பற்றி
என் வர்ணிப்பு முழுச்சதவிகிதம்
பெற வில்லையா ..
ஏனோ உன் கண்களை மறைக்க
இன்னும் பிறக்கவில்லையே
நாணம்!
கொஞ்சம் பொறு,
முழுச் சதவிகித தேர்ச்சி பெறுகிறேன்!
என் தாயின் மகனாக
இன்னுமோர் ஜென்மம் கொண்டு
இன்று நானும் ஓர் பெண்ணல்லவா …