அவனுக்கு வருத்தம்

♦கனவுகளால் நிறைந்தவனே !

கண்ணீரில் மிதப்பவனே !

கண்ணிருக்கும் கண்ணீரை

துடைத்துவிட்டு வா உடனே !

♦முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன்முட்டாளாய் மாறிவிடும் முட்டாள் நீயில்லை !

சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,

வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்

மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !

மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்

வானம் மாறாது வையத்தில் வீழாது

♦உன்னைப் பார்த்து உலகம் சொல்லும்

இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!

கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்

கரங்கள் கண்டு கலங்கி விடாதே !

வானம் போல வாழப் பழகு

புல்நுனி மீது பனித்துளி போல

முள் நுனி மீதும் உறங்கப் பழகு

கட்டி வைத்த கோட்டை தனை

கண்ணீரில் கரைத்திடாதே !

மனம் வரைந்த சித்திரத்தை

அழுதழுது அழித்திடாதே!

♦உன்னை அழவைத்த

உலகம் இதைப்பற்றி

உனக்கு தெரியுமா ?

♦ “அதைசெய் ” “இதைசெய் ” என்று

அறிவுரை ஆயிரம் சொல்லும்

உந்தன் வருத்தம் போக்க

ஆறுதல் வார்த்தை சொல்லும்

வெற்றி பெற வழிகள் சொல்லி

வேறு பாதை உனை திருப்பும் ;

ஆடு நனைய அழுகை கொள்ளும்

அதிசய ஓநாய்க் கூட்டம்

♦யார் மீதும் முழுதாக

நம்பிக்கை கொள்ளாதே!

எவர்பற்றி எவரிடமும்

எப்போதும் சொல்லாதே !

சுவரில்லா சித்திரங்கள்

பார்வைக்கு படுவதில்லை

சுவரை முதலில் கட்டு

சித்திரம் அதன்பின் தீட்டு

♦கனவுகள் கண்ணீரில்

மூழ்கி விடக்கூடாது !

♦கனவை கனலாக்கி

கண்ணீர் காயவை!

உணர்வை உணவாக்கி

கனவை வாழவை !

♦கனவுகளால் நிறைந்தவனே !

கண்ணீரில் மிதப்பவனே !

கண்ணிருக்கும் கண்ணீரை

துடைத்துவிட்டு வா உடனே !

எழுதியவர் : (17-Dec-14, 3:25 pm)
Tanglish : avanukku varuththam
பார்வை : 389

மேலே