காலச்சக்கரம்

காலச்சக்கரம்

புதுப்பொழுது நல் புலர்ந்து,
பொலிவுடன் பூ மலர்ந்து,
பல வர்ண பட்டாம்பூச்சிகள்,
பரவசத்துடன் மேல் பறக்க,
மகிழ்வுடன் மயில்கள்
தோகை விரித்தாட,
குருவிகளும் குதூகலத்தில்
கூட்டமுடன் நடனமாட,
குயில்களும் உடன் கூடி
குலவி அவை தாம் பாட,
வந்திட்டேன் வசந்தம் நான் என
காலமது கூவுதுவே;

தகிக்கும் வெயிலிலும்,
உழவர்கள் முறை உழைத்து,
தருணத்தில் நாற்று நட்டு,
வருணத்தை எதிர் நோக்கி,
வசந்தத்தின் பூக்களது
வெயிலில் பழமாகி,
சிதறி வெடித்த விதைகளது
முளை விட்டு மேல்வளர,
வந்திட்டேன் நானும் என
வேனிர்காலமது கூறுதுவே;

கருமேகம் தலை மீது
பெரும் காற்றுடன் வந்து
மின்னலது ஒளியென
இடியுடன் வானதிர
தத்திரகிடதோம் என
தேரையின் தாளத்துடன்
தாளித்த கடுகுபோல்
மழை துளிகள் தெறித்ததிர,
வந்திட்டேன் நானும் என
மழைகாலமது சொல்லுதுவே;

பனி மூட்டம் புடை சூழ
மரங்கள் இலையுதிர்த்து
எளியோர் குளிர் காய
சோகத்தில் பங்குண்டு
விறகுகள் உயிர் மாய
கதிரவனும் கரைந்து
விரைந்தமிழ்ந்து விடையும் பெற
பனித்துளிகள் பஞ்சணைபோல்
புவிதனை மேல் அணைத்து
வந்திட்டேன் நானும் என
குளிர்காலமது கூறுதுவே;

கடவுளது நல் படைப்பில்
சப்தஸ்வரங்கள் போல்
காலங்கள் பல மாறும்
இயற்கையின் இசையைதனை
நல்முறையில் நாம் ரசிப்போம்;

சம்பத்






எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 4:38 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 269

மேலே