ரகுமான் கனவுகள்

ரகுமான் கனவுகள்

ஜெய் ஹோ என்ற பாட்டை கேட்டு
ரகுமானை போல் நானும் சிறந்த
பாடகன் ஒருவன் ஆனால் என்ன
என்ற கேள்வி மனதில் தோன்ற
தேடிபிடித்து ஒரு தம்பூராவை
வீட்டிற்கு நான் வாங்கி வந்தேன்;

பாயை விரித்து அமரும்போது
மனைவி கேட்டாள் உரத்த குரலில்
புதிதென்ன இழவு இது
கறிகாய் வீட்டில் அறவே இல்லை
கழிவறையில் கரப்பான் தொல்லை
மற்றும் உண்டு பற்பல வேலை
இதற்கிடையே பாட்டு என்ன தொல்லை?

ஸ்ருதி சேர்த்து ஸ்வரத்துடன்
தொடர்ந்தேன் நானும் உரத்த குரலில்
ரகுமான் போல நானும் பாடி
ரசிகர்கள் வருவர் இல்லம் தேடி
அதுவரை சற்றே பொறுப்பாய் நீயும்
அயரேன் இதற்கிடையில் நானும்;

தம்பூராவின் கம்பியை மீட்ட
'அப்பா ஒரு நிமிடம்' என்றென
மகன் வந்து என்னை மடக்க
அவன் பள்ளி புத்தகத்தில் நான்
கையெழுத்திட இதுவா நேரம்?
மூட மகனே பொறு சில நிமிடம்
புத்தொரு ரகுமான் பிறப்பார் இவ்விடம்
ஸ்ருதியை சேர்த்து ஸ்வரத்துடன் நானும்
உரத்த குரலில் பாட்டை தொடர்ந்தேன்;
தம்பூராதனில் இனிமை இல்லை,
தொண்டை எனதில் பிசகே இல்லை;
கற்பூர வாசனை அற்ற அந்த
கழுதை போன்ற வீட்டுக்காரன்,
வீட்டில் ஏன் அழுகை குரல்
அவல ஓலம் கேட்கிரதென்றான்;
ரகுமான் அவரை மனதில் கொண்டு
அவமானத்தை தாங்கிக்கொண்டு
பாட்டை நானும் மீண்டும் தொடர்ந்தேன்;

வாயிலில் புதிதொரு அலறல் கேட்க
கதவை நான் திறந்து பார்க்க
சிறுவர் கூட்டம் சூழ்ந்தபடி
வண்ணான் அவனது கழுதையுடன்
'என் கழுதைக்கு பிடித்தது உமது பாட்டு
அளித்தேன் கழுதையை கையை நீட்டு'
என்று வண்ணான் சிரித்தபடி
கையில் அளித்தான் அதனின் கயிற்றை;

கயிற்றின் நீளம் கூரையிலிருந்து
பற்றுமா என் கழுத்துவரை
என்று யோசித்து மேல் நான் நோக்க
ரசிகர் கூட்டம் என நினைத்த
சிறுவர் கூட்டம் கலைந்ததுவே;

பலகாலம் கடந்து நான்
ஜெய் ஹோ பாடலை மீண்டும் கேட்க
பரணிலிருந்த தம்பூராவை
பெருமூச்சுடன் நினைகூர்ந்தேன்
ரகுமான் கனவை அறமறந்தேன்!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:09 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 240

மேலே