‎கொக்கட்டிச்சோலையில்‬ குருதி படிந்த கொடூரக் கொலைகளின் நினைவு நாள்

கொக்கட்டிச்சோலையில் குருதி படிந்த கொடூரக் கொலைகளின் நினைவு நாள்
‎கொக்கட்டிச்சோலையில் குருதி படிந்த கொடூரக் கொலைகளின் நினைவு நாள்
கிழக்கில் கிளை பிரிந்து ஓடும் மண்முனைத்தேனாற்றைக் கடந்து பயணிக்கையில் கண்ணாமரங்களும் ,தில்லைமரங்களும் அடர்ந்த வனமாக அழகாக காட்சி தரும் .ஒற்றைப்பாதையும் ஓரங்களில் பெரிய குளங்களும் .நெல்விளையும் பொற்பூமியையும் காணலாம்
செழிப்பாய் வளர்ந்த தென்னை மரங்கள் சிறகடித்துப்பறக்கும் குருவிக்கூட்டங்களும் , நான்கு பக்கங்களும் நீரினால் சூழ்ந்த அழகூரை மகிழடித்தீவு சந்தியே எம்மை வரவேற்க வலது பக்கத்தில் பிள்ளையார் கோயிலும் ,இடது பக்கத்தில் மெதடிஸ் தேவாலயமும் காத்திருக்கும்
நேராக சென்றால் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை தரிக்கலாம்,வலது பக்கமாக சென்றால் முதலைக்குடா , முனைக்காடு இடது பக்கத்தில் மகிழடித்தீவு .கடவுளின் ஆசிர்வாதமும் ,அன்பின் அரவணைப்பும் ,இயற்கையின் கொடையும் ,வீரத்தாய்களும் மாவீரர்களும் தந்த இந்த அழகிய கிராமத்தில் நடந்த அனர்த்தம் என்ன ?
தைத்திங்கள் 28 ம் நாள் 1987 அன்று வழமைபோல இல்லாத வானம் செயற்கைக்கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன அந்த கழு களுக்கான நரமாமிசம் முதலைக்குடா ,மகிழடித்தீவில் வெள்ளைக்கரர்களால் அமைக்கப்பட இறால் பண்ணையிலேயே தென்பட்டது ,இங்கு அக்கிராம வாசிகள் மட்டுமல்லாது எழுவான்கரை வாசிகளும் படுவான்கரை மண்ணில் அமைந்த இறால் பண்ணையில் தொழில் புரிந்தார்கள் .இந்தக்கழுகளின் நோக்கம் புரிந்த மக்களின் மனதில் அச்சம் நிலவியது .தங்களின் பிள்ளைகள் ,கணவன்மார்களுக்கு பாதுகாப்பாக அப்பண்ணை அமையும் என்ன அந்த வாசிகள் ஊகித்தார்கள்.இன்று அமரர் ஆகிய ஆசிரியர் செல்லத்துரை ரவிநாதன் அவர்கள் மட்டுமே இந்த நரமாமிசம் உண்ண வந்தவர்களிடம் கண்ணில் மண்ணைதூவி தப்பித்தார் ...அவர் கூறும் போது . அன்று இறால்ப்பண்ணையின் இரவுநேரக் காவலாளியாகக் கடமைபுரிந்தவர். கொலை நடந்த அன்று பகல் நேரக்காவலாளியாக மாற்றம்பெற்றிருந்தார். கொலைத் தாண்டவத்தின் ஒரு பகுதிக்குள் சிக்கித்தடுமாறி தப்பித்துக்கொண்ட இவரிடம் அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்
‘நான் அதிகாலையிலேயே வேலைக்குப் போக வெளிக்கிட்டேன். வெளிக்கிடேக்க ஒருநாளும் இல்லாத மாதிரி ரெண்டு மூண்டு கெலி சுத்திச்சுத்தி அடிச்சுக் கொண்டிருந்தான். ஏதோ நடக்கப்போகுதெண்டு தெரிஞ்சிட்டுது. இறால்பண்ணையை நோக்கி ஓடினேன். ஆம்பிளைங்க கனபேர்பண்ணையை நோக்கி ஓடிவந்தாங்க. வெள்ளக்காரன்ர பண்ணதான் எதுவும் செய்ய மாட்டானெண்டு எல்லோருக்கும் நம்பிக்கை. முதலும் ரெண்டுதடவை இப்பிடி சுத்தி வளைச்சுப் பிடிச்சு விசாரிச்சிட்டு விட்டிருந்தான். அதால, அந்த நம்பிக்கையில ஓடினம். சந்தியில பவல்வாகனம் வந்து நிண்டுது. அதில இருந்து ஆமி குதிச்சுக் குதிச்சு ஒடிப்போய் வீதி ஒரத்தில பதுங்கினாங்க….
முதல் முதல் STF எப்பிடி இருப்பாங்க எண்டதை அண்டைக்குத்தான் பார்த்தம் வீதி ஓரத்தில் பதுங்கி இருந்தவங்க எல்லோருமே இறால்பண்ணையை நோக்கித்தான் துப்பாக்கிய நீட்டியிருந்தாங்கள். ஒருத்தன் எழும்பி நம்மள நோக்கி துவக்க நீட்டினபடி வந்தான். இதப் பார்த்தவுடனேயே எங்களோட நிண்ட ரெண்டுமூண்டுபேர் குனிஞ்சு கொண்டு தண்ணீக்கால மெதுமெதுவாக ஓடினாங்க. ‘அம்பிகைபாதம், ஓடாதேங்கோ. ஓடினா எல்லோரையும் சுடுவான். திரும்பிவாங்கோ’ என மெதுவாய் கூப்பிட்டம். திரும்பி வந்தாங்க. வரேக்க முகமெல்லாம் ஒருமாதிரியா மாறிட்டுது.
முதலைக்குடா, முனைக்காடு,மகிழத்தீவு, அம்பிளாந்துறை என எல்லா இடங்களிலுமிருந்து வந்தவங்களும் இதுக்க பட்டிட்டாங்க. வயல்வேலையில நிண்டிட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த நாராயணப்பிள்ளை திரும்பி பண்ணைக்குள்ள ஓடிவந்தார். முதல் வெடி அவருக்குத்தான் விழுந்தது. அவர் நல்ல வாட்டசாட்டமான மனுசன். முறுக்குமீசையும், எழும்பின தோற்றமும், நல்ல பலசாலி, மூண்டு ஆமி நாங்க நிக்கிற இடத்துக்குவந்திட்டான்.
வந்து எல்லாரையும் ஒரு இடத்துக்கு வருமாறு கத்திக்கூப்பிட்டான். எல்லாரும் நடுங்கிக்கொண்டு நிற்க ஒரு சூடு சுட்டான். உடன கும்பியா நிண்டவங்க எல்லாம் சிதறினாங்க. நான் என்ன செய்தனெண்டா, இறால்பண்ணைக்குள்ள கிடந்த சின்னச்சின்ன கொட்டில்களோட மெதுமெதுவாக மறஞ்சு ஓடினேன். தெய்வநாயகமெண்ட இளைஞனும் எங்களுக்கு முன்னால ஓடினவர். திடீரெண்டு ஒரு வெடிச்சத்தம். அவருக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது நான் உடன தண்ணிபாயிற வாய்க்காலுக்க படுத்திட்டன். எனக்கு முன்னால நேசதுரை எண்ட இளைஞனும் வாய்க்கால் பக்கம் பதுங்கிட்டாங்க, அவன் என்ன செய்தானெண்டா, ஓடினபக்கமா பவல் வாகனத்திருப்பிவிட்டிட்டு அடிக்கத் தொடங்கிட்டான். இஞ்சால குருவிக் காவலுக்கு வந்த சின்னப் பொடியங்களையெல்லாம் சுட்டுச்சுட்டு போடுறான். பாவம், கஸ்ரத்தில காலைலேயே இறாலை காக்காய் தூக்காமல் பாதுகாக்கிறதுக்கு வந்து நிப்பாங்க. காக்காய் காவலுக்கு வந்தா ஏதாவது கிடைக்குமெண்டு வேளைக்கே வந்திடுவாங்க அவங்கள எல்லாம் சுட்டுச்சுட்டுப் போட்டாங்க.
நான் போட்டிருந்த உடுப்பெல்லாத்தையும் களட்டிட்டு தலையைத் தூக்கிப் பார்க்கிறதும், ஓடுறதும், படுக்கிறதுமாய் கண்ணாக்காட்டை நோக்கி ஓடினன். கண்ணா ஓரமாய் ஓடிட்டிருக்கும்போதே சூட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் பண்ணைப்பக்கம் சத்தத்தை காணல்ல. திரும்பிப் போய்ப்பாப்பமென்று யோசிச்சன். திரும்பி வரேக்க, தம்பி , உங்கால போகாத, பண்ணேல நிண்ட எல்லாரையும் சுட்டிட்டாங்க என சொல்லித் தடுத்தார். ஒரு முதியவர். நான் ஓடினதுக்கு காரணம், ஏற்கனவே நான் ஆசிரிய நேர்முகப்பரீட்சைக்குப் போகும்போது கரடியானத்து காம்பில மறிச்சு என்ர இறால்ப்பண்ணை அடையாள அட்டையை பறிச்சிட்டாங்ககள் நேர்முகப் பரிட்சை முடிஞ்சு திரும்பி வரேக்க கரடினயனாத்தால வாற பயத்தில, புல்லுமலையில பஸ்சால இறங்கி, நடந்து வந்தனான். அடையாள அட்டை இல்லாத பயத்திலதான் ஓடினனான். கிடந்திருந்தா, நானும் பட்டிருப்பன். இறால்பண்ணைப் படுகொலையில் மகனையும் மருமகன் இருவரையும பறிகொடுத்து விதவையாக ஏழைக் குடிசைக்குள் வாழும் திருமதி தம்பிப்போடி ஞானம்மாவை அவரது வீட்டில சந்திச்சுக் கேழுங்கோ என ரவிநாதன் ஆசிரியர் அன்றைய நாளின் ஒரு பகுதியை நினைவுக்குக் கொண்டு வந்தார்.
இறால் பண்ணையில் எஞ்சிய அப்பாவித் தமிழர்களை மந்தையாக அழைத்துச் சென்று சிலுவையில் அறைந்த ஜேசுவின் முன்னாலே அந்த அப்பாவிகளின் குருதி வெள்ளமாய் ஓடிப்படிந்தது
உலகத்தின் காவலர்களென கருதப்படும் சர்வதேசம் இந்தப்படுகொலை நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தது ?
அதில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகளென தெரிந்தும் தமிழன் என்ற காரணத்துக்காகவே படுகொலை செய்யப்பட்டார்கள் .அப்பாவிகளின் சடலங்களை உழவுயந்திரத்தில் ஏற்றிச்சென்று மணப்பிட்டி ஆற்றில் விட்டதாக செய்தி பரவியது
அது மட்டுமல்லாது மகிழடித்தீவு கிராமத்துக்குள் சென்ற இராணுவம் அங்கு இருந்த ஆண் ,பெண் கர்ப்பிணித்தாய் என பாராது கொன்று குவித்தார்கள்.
அந்தப்படுகொலை அன்றைய சிறுவர் ,சிறுமிகளாக இருந்த அந்த பிஞ்சி நெஞ்சில் நஞ்சாய் பதிந்தது எம்மினத்தைக்கொன்றவனைக்கொல்லும் எண்ணத்தில் போராட்டத்தில் இணைந்து வீரகாவியமானார்கள் ,அதில் கரும்புலியாய் புறப்பட்ட போராளியான முனைக்காட்டை பிறப்பிடமாக கொண்ட சின்னத்தம்பி அருளானந்தம் என்கின்ற கரும்புலி கப்டன் சிவலோகன் என்கின்ற போராளியை நேர்காணல் காணும் போது
அந்த போராளி இந்த படுகொலையை அவனுள் வடுவாக அமைந்ததாக கூறுகின்றான்
அந்த அப்பாவித்தமிழர்களின் நினைவுத்தூவி அமைக்கப்பட்டிருந்தது
அதைக்கூட விட்டு வைக்காமல் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை
இன்று புனரமைக்க பட்டுக்கின்றது.
இங்கு நடந்த படுகொலைக்கு ஒரு ஈனத்தமிழனே காரணம் ஒரு தனிநபரின் சுயநலத்தாலே இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்றது இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் புலிகள் என பொய் தகவலை ஏற்று இராணுவத்தினரால் இப்படுகொலை இடம்பொற்றதாக அரசாங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டது அதன் பின்னர் ஒரு குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செய்சப்பட்டது.

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (28-Jan-15, 10:38 pm)
பார்வை : 457

சிறந்த கட்டுரைகள்

மேலே