தவறுகளை ஒப்புக் கொள்ளுவோம்

மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் தவறு என்று உணர்ந்த பின்,அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறின்றோமோ என்பது தான், நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.

செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல..அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் நமக்கு பிரச்னை!

குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தோம்? நம்மை அடித்தவரிடமே கூட எந்த வன்மமும் இல்லாமல் திரும்ப அவர்களிடம் சென்றோம்...

அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது..?ஆனால் இப்போது வளர, வளர உடல் அளவிலும், மனதளவிலும் நாம் இருகி விட்டோம்.

சமூகத்தில் நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டோம்.அதனால் தான் நாம் நமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டோம்..!

தவறை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல்,மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.நாம் செய்த தவறை மற்றவர்கள் கையும்கள‌வுமாகப் பிடிபட்டாலும்,நம் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகின்றோம் நம்மில் சிலர்.

இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளுவோம்.

அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.ஒருவரின் காலைதெரிந்தோ,தெரியாமலோ மிதித்து விடுகின்றோம். மன்னிப்புக் கேட்பதை விடுத்து,"வேண்டுமென்றா நான் மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்...?

"மன்னித்துவிடு! தெரியாமல் நடந்துவிட்டது,

அறியாமல் செய்துவிட்டேன்! என்று பணிந்து சொல்வதால், நாம் என்ன குறைந்தா போய்விடுவோம். சிலர் நம் தவறுகளை பூதக் கண்ணாடியால் பார்க்கக்கூடும்,

பார்த்துவிட்டு தான் போகட்டுமே!நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், நம் யுத்தம் அங்கேயே முடிந்து,நம் மீது குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?

புரிந்துகொள்ளுங்கள்..இது விட்டுக் கொடுப்பதோ,தோற்றுப் போவதோ அல்ல!நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....

வியாபாரம் செய்தாலும்,விளையாட்டாக இருந்தாலும்,தவறுகளை எற்றுக்கொள்ளவதைப் பொறுத்து்த்தான் வாழ்க்கையில் வெற்றி அமைகிறது.

தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை,மனதிற்க்குள் சிலுவை போல் நம் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.

நமது அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும்,கவலைப்படாமல், செயல்பட்டாலும்,காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு நம்மை துரத்தும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது,எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம்.எதிர்த்து வீழ்த்த முடியாத பலம்.வாழ்க்கையில் நம்மை அடுத்த படிக்கு அழைத்துச் செல்லும் பலம்!

அதுபோலவேதான்,அன்பு நண்பர்களே.,

*மற்றவர்களின் தவறுகளை மன்னித்து விடுவோம்.

*மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துவோம்..

*எல்லோரிடமும் பேதம் பார்க்காமல் பழகுவோம்..

*புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (24-Feb-15, 3:40 pm)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 564

மேலே