அமைதி கொள்

ஏய்..
என்னப்பா..
இங்கே வந்தும்..
இரண்டு நாளாகியும்
அழுது கொண்டிருக்கிறாய்..?

இன்னுமா
கவலைப் படுகிறாய் ..
இழந்த வாழ்க்கையை எண்ணி..?

இங்கு
எல்லோரும் அப்படித்தான்..
முதல் நாளில் அழுவார்கள்..
என் பேச்சை கேட்டதும்
அமைதியாகி விடுவார்கள்..!

என்னது ..நீ இங்கு வரும் போது
உனக்கு விழுந்த மாலைகளில் ..
உன்னைப் பற்றிய புகழுரைகளில்
உன்னை தூற்றியவர்களின்
பங்கும் இருப்பதை எண்ணி
நெகிழ்ந்து கலங்குகிறாயா ?

உலகம் அப்படித்தான்..
முதன் முதலாக இங்கு வந்து
நீண்ட காலமாய்
இருக்கும் அனுபவத்தால்
சொல்கிறேன்..
இன்னும் கொஞ்ச காலம்
வாழாமல் இப்படி
அவசரமாய் வந்து விட்டோமே
என்று வருந்தாதே..

மீண்டு நீ வரமாட்டாய் என்பதால்தான்
அவர்கள் அப்படியெல்லாம்
பேசுகிறார்கள்..
திரும்பி மட்டும் நீ போனால்
திரும்ப வந்து புதைத்திடுவார்கள்
உடனே!

பேசாமல் உன் கல்லறையில்
படுத்துறங்கி
வேடிக்கை பார்..
இங்கிருக்கும் மற்ற
கல்லறைகளில் சிரித்தபடி
படுத்துறங்கும் இவர்களைப் போல!

ஹாவ்வ்வ்..எனக்குத் தூக்கம் வருகிறது!

எழுதியவர் : கருணா (9-Mar-15, 11:38 am)
Tanglish : amaithi kol
பார்வை : 851

மேலே