கோட்டோவிய மழலைகள் - 14
![](https://eluthu.com/images/loading.gif)
கள்ளங் கபடம் இல்லா உள்ளம்
துள்ளல் துடிப்பில் இதயம் கிள்ளும்
அள்ளும் அழகில் மயக்கும் நெஞ்சம்
பிள்ளைக் கனியாய் மதுரம் கொஞ்சும் !
சுட்டிக் குறும்பால் மனதை வெல்லும்
கட்டிக் கரும்பாய் மகிழும் சொல்லும்
பட்டுச் சிரிப்பில் மறையும் துன்பம்
குட்டிக் குழந்தை குணத்தால் தெய்வம் !
சேட்டை செய்து அடமும் பிடிக்கும்
கேட்டால் சிரித்து மழுப்பி நடிக்கும்
வீட்டைக் கலகலப் பாக்கும் மழலை
பாட்டில் பதிந்த அழகின் கவிதை !
கையால் கடைந்த பருப்புச் சோற்றை
கைவிரல் சுட்டிப் பகிர்ந்து கொடுக்கும்
பொக்கை வாயைப் பிளந்துக் காட்டி
மெல்வது போலே பாவனை செய்யும் !
தூங்க வைக்கத் தூளியில் போட்டால்
தாங்க மாட்டா சேட்டை செய்யும்
தொட்டில் புடவை சற்றே விலக்கி
எட்டிப் பார்த்தே குறுநகைப் புரியும் !
மறைத்த சீலைக்குள் அமுதுண் டாலும்
முகத்தைத் தூக்கி வேடிக்கைப் பார்க்கும்
வாய்க்குள் பாலை நிறைத்துக் கொண்டு
ஃபூவென ஊதியே மழையாய்த் தூறும் !
அடிப்பது போலே கையைத் தூக்க
அடித்தது போலே அழுகை முட்டும்
உதட்டைப் பிதுக்கி பொய்யாய் விம்மி
பயந்தது போலே பாவனை செய்யும் !
விரட்டிச் சென்று எறும்பு பிடிக்கும்
விரலைக் கடித்தால் ஓவெனக் கத்தும்
எழுதும் குச்சியை ரசித்துத் தின்னும்
அழுதடம் பிடித்துக் கண்டதைக் கேட்கும் !
பாட்டுக் கேட்டால் தலையை ஆட்டும்
ஆட்டம் பார்த்தால் தானும் ஆடும்
விளம்பரம் வந்தால் ரசித்து நோக்கும்
விளங்கி யதுபோல் நகைத்துக் கொள்ளும் !
தாளைக் கண்டால் கிழித்துப் போடும்
தாயைக் காணா விட்டால் தேடும்
கள்ளினும் போதை யூட்டும் கீதம்
பிள்ளை மொழிக்கு ஈடோ வேதம் ?
குழந்தை இருக்கும் இல்லம் சொர்க்கம்
மழலைப் பேச்சில் விடைபெறும் துக்கம்
அழகில் ஒவ்வொரு பிள்ளையும் உச்சம்
பழகிப் பார்த்தால் புரியும் மிச்சம் .....!!!