சிலிர்த்த இதயம் சிரித்ததே

தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!

தென்னை மரத்திலே தென்ற லடித்திடுந் தீவினிலே
கன்னங் கருங்குயில் கான மொலித்திடும் காதினிலே
அன்னம் இணையுடன் ஆடியே நீந்திடும் ஆற்றினிலே
சின்னஞ் சிறுமலர் சிந்திடும் தேன்துளி சீதனமே ....!!!

குழலிசைக் கேட்டதும் கொட்டில் பசுக்களும் கூடிவர
அழகிய ராதை அபிநயங் கொஞ்சிட ஆடிநிற்க
சுழலும் வளியும் சுகமாய் வருடியே சொக்கவைக்க
கழலில் சிலம்பொலி கார்முகில் வண்ணனைக் காட்டியதே ....!!!


( கட்டளைக் கலித்துறை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Mar-15, 11:41 am)
பார்வை : 96

மேலே