பழி ஓரிடம் பாவம் ஓரிடம்

யானை வழித்தடத்தை மறித்து
குடில் கட்டிய கும்பல்
கூச்சலிடுகிறது
யானை ஊருக்குள் புகுந்ததென……!

துந்து, தொலைந்துபோன
ஏரி குளங்களின் நீர்
போத்தல்களில் அடைக்கப்பட்டது
மழைநீர் சேகரிப்பு மாநாட்டில்
மேடை பேச்சாளர்களுக்காக……!

காடுகளையும் மரங்களையும்
அறுத்த ரம்பம்
பசிதீரலை என
உடற்கூறு ஆய்வுக்காக
சவகிடங்கிற்கு சென்றது
பிணத்தை அறுக்க.…..!

நதிக்கு பெண்ணின் பெயர் வைத்ததால்
அவளுக்கு ஒப்பனை செய்ய
சாயபட்டறை வண்ண கழிவுகளை
வாரி இறைத்து அழகு பார்க்கின்றான்……!

ஓசோனுக்கு ஓட்டை போடுவதில்
நம்மவன் தீவிரம் காட்டுகிறான்......!
இவ்வுலகை படைத்த பிரம்மன்
எட்டி பார்த்து முகம் சுழித்து
இன்னொரு உலகம் படைப்பான் என……!

கோட்டு சூட்டு போட்டு கார் செய்ய
வெள்ளையும் சொள்ளையுமா
வருபவனுக்கு கார்காலம்.......!
காலங்காலமா ஏர் புடிச்சி
வெள்ளாமை செஞ்சவனுக்கு ராகுகாலம்……!

மரக்கடத்தல் செய்தவன்தான்
என சுட்டு வீழ்த்தியதில்
செங்குருதி பாய்ந்து ஓடியதால்
அவர்கள் செம்மரகடத்தல்காரர்கள்
என ஓர் அரசு சொல்லும்
அதை ஓர் அரசு கேட்கும்……!

செம்மரகடத்தல் மாபியாக்களின்
வேர்களுக்கு சொட்டு நீர் பாசனம்
அரசாங்க மானியத்துடன்.......!
இலைகளை
துப்பாக்கியால் சுட்டுபொசுக்குகிறது……!

அரசியல்வாதியின் பணப்பசியால்
நாடு குப்பையாகிறது
குப்பை பொறுக்கும்
சிறார்களின் வயிற்றுப்பசியால்
நாடு தூய்மையாகிறது……!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (18-May-15, 9:56 pm)
சேர்த்தது : பெ கோகுலபாலன்
பார்வை : 259

மேலே