நெற்றிகண் திறப்பினும்

செய்தித்தாள்களை நீ
புரட்டோ புரட்டென்று
திருப்புகையில் என்
அதிகாலைகள்
அதிக முதிர்ச்சியோடு
காட்டுகிறது...!!

தொடர்ந்து மூன்றாவது
முறையாக தொலைக்காட்சியில்
வரப்போகும் அதே
செய்திகளைக்கூட
பல்லை கடித்துக்
கொண்டு பார்த்துவிடலாம்..

ஒவ்வொருமுறையும்
முதல்முறை பார்ப்பதைபோலவே
நீ காட்டும் பாவனைகளை...
சத்தியமாக முடியாது...!!

நீ சிலபோது கொடுக்கும்
அறிவார்ந்த விளக்கங்கள்
இருக்கிறதே.....
எனை பார்த்தே
கேட்க தோன்றும்..
"இது உனக்கு தேவையா..??"

ஆயிரம்முறை சொல்லியனுப்பியும்
சொன்னதில் ஒன்றையேனும்
வாங்காமல் வந்துவிட்டு
மறந்துவிட்டேன் என்றால்கூட
மன்னிக்கலாம்....
நீ சொல்லவே இல்லை
என்பாயே..
உன்னை...................
வேண்டாம் என்னையே
திட்டி கொள்கிறேன்..!!

என் பிரிய தொடர்களின்
முக்கிய பாகங்களை
பந்தாடும் உன்
கிரிக்கெட் மேட்சுகளால்
நானடைந்த பெருங்கோபத்திற்கு
சிவந்திருக்கும்
அந்த "இரத்த நிலவே"
சாட்சி...!!

தினம் அலைபேசியில்
உன் வாடிக்கையாளர்களை
நலம் விசாரித்து
நீ மகிழ்வித்திருந்தபோது

முன்னமே வந்தமர்ந்த
என் தின்பண்டங்கள்...
உன்னையும் என்னையும்
வேடிக்கை பார்த்தே
ஆறிப்போனது....

என்னுடைய சில
பாராட்டுக்களும்...
எதிர்பார்ப்புக்களும்கூட...!!

எழுதியவர் : மணிமேகலை (20-May-15, 3:21 pm)
பார்வை : 166

மேலே