என் காதல் கணவா

             என் காதல் கணவா



உயிர் மெய்யில் கலந்த
என் ஆருயிர்
காதல் கணவா...

என் அன்பின் விளக்கமே
என் வாழ்வில்
கலங்கரை விளக்கம் போல
நிஜமான அன்பின் நிழலே
அன்பின் நிஜம் நீயே...

அங்கத்தின் அங்கமாய் 
அன்பின் முத்ததின் முத்தெழுத்தாய்
என் மீது கொண்ட அதீத பாசத்தால்
என்றும் சந்தேகம்தான் உனக்கு

நான் உடுத்தும் உடையில்
நடக்கும் நளின  நடையில்
ஒவ்வொரு அசையும் அசைவும்
பார்வைத் தூண்டிலில்  
சிக்கிய மீனாய் எப்போதும்
சந்தேகம்தான் உனக்கு

என் இரு அழகான
கயல் மீன்கள் சிவந்து
கண்ணீரில் மிதந்தபோதும்
ஆனந்தத்தில் விரிந்த போதும்
சந்தேகம் தான் உனக்கு

நான் தெருவில்
தண்ணீர் குடம் சுமக்கும் போதும்
கோலமிடும்போதும்
துணி காய வைக்கும்போதும்
சந்தேகம் தான் உனக்கு

துக்கத்தில்  கண்ணீர் திவலைகளாய்
விழிகள்  துயில் மறந்த கதை
தலையணை சொல்லும் உன்
சந்தேகத்திற்கான பதில் கேட்டும்
சந்தேகம்தான் உனக்கு

நான் சமைக்கும் உணவில்
உப்பு காரம் சரியாய் இருந்தும்
குறை என்று  சாப்பிடாமல்
கறிவேப்பிலை போல
வெறுத்து ஒதுக்கும் போதும்
சந்தேகம் தான் உனக்கு

பூக்காரன்
பால்காரன்
காய்கறி க்காரன்
விற்கும் பொருளுக்கு பணம் வாங்க
வாடிக்கையாய் வருகையில்
உனக்கும்
அவனுக்கும் என்ன
தொடர்பு என
தொடர்புப் படுத்துவதிலும்
சந்தேகம் தான் உனக்கு

உனக்குஎன் மீது
கொண்ட அளவு கோல் 
மில்லிகணக்கில் மீட்டர் கணக்கில்
அடிக்கடி அக்கறையால்
சந்தேகம்  வருகிறதே
என் அழகின் மீதா?
அழகான குரலின் மீதா?
அன்பான குணத்தின் மீதா?

நெடு நெடு நீண்ட கருநீல
சுருள் சுருள் கூந்தலை 
வாரிப் பின்னி நீண்ட பாம்பின் 
தலையில் பூச்சூடும் போதும் 
பளிங்கான முகத்தில் 
முகப்பூச்சு பூசும் போதும்
கலியுகக்கண்ணன் போல்   மறைந்திருந்து ரசிக்கையில்
சந்தேகம் தான் உனக்கு...

நீ தினம் தினம்
சந்தேகப்படுவது
பெத்த தாய் மடி போல
உலை நீரில் கொதிக்கும்
அரிசியைப் போல 
வீண் மனோ பயம்தான் உன்
சந்தேகத்திற்கான காரணம்....

இத்தனை கசப்புகள் இருந்தாலும்
உன் மேல் கொண்ட
நம்பிக்கை மதுரைவீரன் சாமி 
போலத்தான் நானும் உன்னை
வணங்கி நித்தம்  வழிபட....
நீயோ! சந்தேக பாவனையில்...

அன்னப் பறவை யைப் போல
என் மேல் நீ கொண்ட அன்பும்
அளவு கடந்த பாசமும் 
எப்போதும் சேர்ந்தே இருக்கும் 
என் காதல் கணவா....!




  

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (14-Jun-15, 11:50 am)
பார்வை : 585

மேலே