நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று-கார்த்திகா

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று

அழகிய பொய்கள் இனித்திட
வாழ்ந்திட்ட நாட்கள் பழையவை

விரல்நகம் தொடாத தனிமையும்
கண்கள் வருடலில்
இமைகள் காதல் கொண்டதும்
பசுமையாய் இன்றும் ஞாபகத்தில்

பிடித்ததும் பிடிக்காததும்
கேட்டறிந்து கொண்ட நமக்கு
பொறுமை காக்க நேரமில்லை

ஆசையாய் காதல் செய்து
திருமணம் கண்ட பின்
ஏதோ ஒன்று
இனிமையில் கசப்பாய்
சேர்ந்தது இடையூறாக
உறுத்தாமல் விலகினோம்

பத்திருபது வருடங்கள்
சகித்துக்கொண்டு
வாழவா சாகவா நெருக்கடிகளில்
சிக்கிக்கொள்வதற்கு
பிரிதலின் புரிதல் அவசியமே

உன் சொற்கள்
நெஞ்சைக் கூரிட்டாலும்
நம் அன்பை நிஜமாக்க
வேறு வழி சொல்லவில்லை நீ

நீயும் நானும்
வேறு இல்லை
நிஜங்களை விட நிழல்கள்
சுகமானது!

இப்பொழுதும் கடை இதழோரம்
சிறு புன்னகை வலியுடன்
உன்னில் மட்டும் சென்று சரணடைகிறது !!

எழுதியவர் : கார்த்திகா AK (20-Jun-15, 9:19 pm)
பார்வை : 162

மேலே