சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 9

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக் காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 9 ஆம் பாடல்.

பாடல் 9 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பலபல வேடமாகும் பரனாரி
...பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே
...லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு
...தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை:

பல்வேறு கோலங் கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோராலும், வரக்கூடிய பலவிதமான கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை:

நாரி – உமாதேவியார், மலர்மிசையோன் - செந்தாமரை மேலிருக்கும் பிரமன்,

காலம்ஆன - கெட்டகாலங்களானவை .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-15, 1:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 173

சிறந்த கட்டுரைகள்

மேலே