மனிதநேயம்

மனிதநேயம் பற்றிய வகுப்பு
ஒன்று போகையிலே
ஜன்னல் கம்பிகளில் மோதி
உள்ளே விழுந்தது சிறகொடிந்த
பறவை ஒன்று.!!

சில நிமிட சலசலப்புக்கு பின்
ஆங்காங்கே வெவ்வேறு குரல்கள்

ஒடிந்த சிறகிற்கு சிகிச்சை
அளிக்கலாமென ஒரு குரல்.!
தண்ணீர் கொடுக்கலாமென
மற்றொரு குரல்.!

பாவம் அது என்ற பரிதாப
குரல் ஒன்று.!
வெளியே விட்டுவிடலாம்
என்று அதன் விடுதலைக்கான
குரல் ஒன்று.!

செல்லப்பறவையாக நான்
வளர்க்கிறேன் என்ற உற்சாக
குரல் ஒன்று.!

இறுதியில்,

சிறுபறவைக்கே பரிவு காட்டும்
நீங்களெல்லாம் உள்ளபோது
மனிதநேயம் அழிந்ததென எவன்
சொன்னது என்ற ஆசிரியரின்
பெருமித குரல் ஓயும்முன்னே.!

கதவோரத்தில் ஒரு பிஞ்சுக்குரல்
கையில் சிறு உண்டியலோடு
ஆதரவற்ற குழந்தை நான்
உதவி என்று.??

எழுதியவர் : பார்த்திப மணி (24-Jul-15, 10:35 pm)
Tanglish : manithaneyam
பார்வை : 1173

மேலே