இந்திய நெருப்பு நீ
#இந்தியநெருப்புநீ!!!
இராமேசுவரத்து அலை
நேற்றோடு ஓய்ந்து விட்டது
அந்த கனவு நாயகன்
நம் எல்லோருக்கும் இனி
கனவாகவே ஆகிவிட்டான்
அன்பே உருவான எங்கள்
அப்துல் கலாமே
உம்மை எம்மிடமிருந்து
பிரித்துவிட்டது இந்த
பொல்லாத காலமே
உண்மையில் இது எங்கள்
போதாத காலமே...
இனி கருப்பு தினமாகத்தான்
கழியப்போகிறது
எங்களின் மிச்ச நாளுமே...
படகோட்டியின் மகனாய்
அவதரித்த அறிவியல் துடுப்பு நீ
வறுமையில் நசுங்கிய
உன் ஏழ்மை இளமையிலும்
இமயச்சாதனை புரிந்த
இந்திய இதயம் நீ....
அமெரிக்காவையே
நடுங்கச் செய்த
அறிவியல் சூரனே
பதவி பல பெற்றும்
உன்னிடம்
இங்கிருக்கும் பலர்
கற்றுக்கொள்ளும் படி
எளிமையை
உயர்த்திப்பிடித்த
உத்தம உள்ளமே...
பகட்டில்லை
பந்தா இல்லை
ஆடம்பரமில்லை
ஆர்ப்பாட்டமில்லை
அலட்டல் இல்லை
ஆணவமில்லை
இவைகள் தானே
நீ வாழ்ந்த
வாழ்வின் எல்லை...
தேசம்
மக்கள்
மாணவர்கள்
இதை சிந்தித்து சிந்தித்து தானே
உன் கடைசி நிமிடத்தை கூட
எங்களை சந்தித்தே
உதிர்த்துவிட்டாய்...
ஓய்வில்லா சூரியனே
நீ எங்களிடம்
விதைத்தது
அணுவல்ல
ஆகாயமளவு...
நீ தந்த அக்கினி
சிறகுகளை அணிந்து கொண்ட
ஆற்றல் மறவர்கள்
நாங்கள்....
இதோ
சிறகு விரித்துவிட்டோம்..
எம் தேசம் வல்லரசாகும் வரை
ஓயாது எங்கள் பயணம்
அதுவரை எமக்கில்லை
ஓர் நொடியும் சயனம்....
கலாம்
கண்ணீருடன்
உனக்கு
ஒரு
சலாம்