தனிமைக் களம் - சந்தோஷ்
இரவின் கருமைத்தகிப்பில்
நிசப்தம் பரவிய
எனதறையின் மூலையிலிருக்கும்
ஒரு நாற்காலியில்
வெம்பியவாறு கவிதையென்பதாக
சிந்திக்கொண்டுகிறது
ரணத் துயரங்களை
எனது விரல்கள்....!
***
களிம்பாக
எனது ரணத்தில்
பூசி மகிழ்ந்துவிடுகிறேன்
கவலைக் கத்தியில்
கிழிக்கப்பட்டு வெளியேறிய
எனது குருதித்துளிகளை..!
****
ஏற்படவிருக்கும் மனப்பிறழ்வுப்
பேரலைகளை தடுத்துவிடுகிறது
எனக்குள்ளிருக்கும் இந்த
கவிதை பேரின்பச்சுவர்..!
***
நீளும் இந்த
வாழ்வுக் கொடியில்
கொத்து கொத்தாக
தொங்கிக்கொண்டிருக்கிறது
எனது தோல்விப்பிசாசுகள்.
இயற்கைக்கு
இலையுதிர்காலம் போல
என்னால்
இவைகளுக்கு
கொலையுதிர்காலமிருக்கும்.
காத்திருக்கிறேன்.
**
மெளனத்தின் ஆயுதங்கொண்டு
கவிதைப்போர் புரிகிறேன்.
தினமும்.. நித்தமும்...
என்னோடும்..
என் தனிமையோடும்..!
**
--இரா.சந்தோஷ் குமார்.