வெயில் சரிந்த மனம்
வெயில் தெளித்த
வாசலாய் இருக்கிறது மனம்.
கண்களில் தளும்பும்
மழைக்காலம்
நினைவுறுத்துகிறது
இலையுதிர் காலத்தை.
காதுக்குள் சரியும்
கண்ணீர்த் துளிகள்...
மின்விசிறியிலிருந்து
சிதறும் காற்றின் சப்தத்தோடு
அலைகிறது.
சிறகின் வாசத்தைக்
கிளர்த்தும் நினைவுகள்
நட்சத்திரங்களை எண்ணும்
இரவோடு மிதந்து போகிறது.
புல்லின் வேர் போல் பெருகும்
என் கேவல்கள்...
நெரிக்கிறது உடல் மரத்தை
இரை அருந்திய பாம்பென.
என்னை உனக்குத் தந்த
என் கடிதங்களின்
வரையறையற்ற வடிவங்கள்
முடிவற்ற இருளின்
உருவகமாய்
என்னைக் கடக்கிறது.
என் கண்ணீரின்
கடைசி முட்டையிலிருந்து
கசிகிறது..
நம் இருவருக்கும்
ஒரே வானத்தின் கீழ்
இரு வேறு வேறான
மழைத்துளிகள்.