நானும் வா திறந்தேன்
செங்குருவி ஒன்று பிள்ளையாய் பிரவேசித்த நாளிகை
செங்கதிரோன் விடிய நிறைந்தே மிளிர்ந்தான்
உயிர்களின் மெத்தனம் கழிந்து பூத்துணர்வு சஞ்சரித்தது
பூக்களின் கோண முக பாவம் சில்லென விரிந்தது
இப்பூமிக்கிவனை வரவேர்க்கும் பாங்கில்
கிளையின் இலைகள் வரிசைகொண்டு தோரணமாயின..
ஈரம் தாங்கிவந்த காற்று அதன் இறகுகள் குலையாமல் அனுசரித்து வீசின
அத்துனை சொந்தமும்,அவனை சுற்றி நின்று தங்களை அறிமுகம் செய்து கொள்ள மும்முரமாய் காத்து கிடக்க..
கொள்ளையில் அண்ணன் குருவி சுருதி சேர்க்க முயன்றது...
இவன் சொந்தத்திற்கென்றும் குந்தகமில்லை
அதிர்ஸ்ட ரேகை கையில் விழுந்து பரவி,
அவனது நெடிய வசந்தத்தை ஜாடையில் உணர்த்திட..
அதன் முகத்திலோ மொத்த அழகும் கோலூன்றி நின்றன
சிறகுகளோ,
பின் நாளில் அது வானம் முழுமைக்கும் வீசும் கம்பீரத்தை வருணனை செய்யும் ஏடுகளாய் தெரிந்தன
தன் மஞ்சத்தில் பிறந்த பிள்ளைதனை கொஞ்சி,அதன் மூக்கை
அரைத்தது அன்னை குருவி..
கூட்டின் குச்சிகளும் புது வரவு கிள்ளையை,அள்ளி தன் வவுற்றில் செருகின
அதன் பிறந்த நிமிடம் இலையில் ஏந்தி சோசியம் கணிக்க தந்தை குருவி ஓட்டம் பிடிக்க..
அதன் கிரக நிலை பாட்டை பார்த்தவனும் பரிதவித்து போனான்..
பாவி மகன் இத்துனை கொடுப்பினைகள் இந்த ஒரு வாழ்விலா என்றே வாதிறந்தான்...