நீ இன்னும் மனிதன்தானா - கற்குவேல் பா

மனிதா பதில் சொல் !
நீ இன்னும் மனிதன்தானா ?
பிறப்பதற்கு முன்னமே
அறுத்து எடுக்க
தேதிகள் குறித்தாய் !
பிறந்தது பெண்னெனில்
கள்ளிப்பால் கறந்து
உயிரினைப் பறித்தாய் !
பொய்கள் பேசியே
நித்தம் நித்தம்
உடலது வளர்த்தாய் !
போலி முகங்கள்
கொண்டே - உலகில்
அலைந்து திரிந்தாய் !
அழுக்காறு என்பதற்கு
நற்சான்று நீயென
அலுக்காமல் கூறினாய் !
பிறர்மனைவி தொட்டே
பிணம் தின்னும்
கழுகாய் மாறினாய் !
பாலியல் துன்பங்கள்
செய்தே - பதராய்
பழகிப் போனாய் !
திருடித் தின்றவாறே
திசைஎங்கும் - உன்
பெயர் மொழிந்தாய் !
மரங்கள் அழித்தே
காவிக்குள் மறைந்து
மயிர்க்கூச்சம் கொண்டாய் !
ஓ மனிதா !
நில் !
காலன் வந்து - உன்னை
கல்வாரி மலையினில்
சிலுவையில் ஏற்றி ,
ஆயிரம் ஆண்டுகள்
உண்ணாமல் இருந்த
வல்லுருக்களை ஏவிவிட்டு ;
அவை உன் தேகம் கிழித்து
இரத்தம் சுவைக்கும்முன்
உண்மையைச் சொல்லிவிடு !
மனிதன்தானா நீ ?
நீ இன்னும் மனிதன்தானா ?
- கற்குவேல் . பா