என் உயிரோடு நீ அங்கே

எனக்காக
நீ கட்டிய இதயக்கோயிலை
தகர்த்து விட்டு
இன்னொரு உயிரோடு
நான் உறவுப் பயணம்
போய் விடுவேனென்று
யார் சொன்னது..?
எனக்காக
யாரோ பெண் பார்க்கச் சென்றார்கள்
என்று எவனோ சொன்னதற்கே
பஞ்சு மேகக் கண்களிரண்டிலிருந்து
கரைகட்ட முடியா கண்ணீரை
கொட்டியிருக்கிறாய்..!
உன் கண்களில் மட்டுமன்றி
ஈரமான என் நினைவுகளிலும்
எத்தனை நெருடல்களை
உற்பத்தி செய்துவிட்டுப்
போய் இருக்கிறாய்..!
என்னவளே ,,,!
உன் கண்ணீரின் மதிப்பு
என் பார்வைகளை விட
என் இதயத்துத் தெரியும்
மிக மிக ஆழமாக..!
உன் இதயத்தின் மதிப்பு
உன்னை விட
என் இதயத்துத் தெரியும்
மிக மிக ஆழமாக..!
உன்னைக் காதலிக்கும்
நானும் தனியே...!
என்னைக் காதலிக்கும்
நீயும் தனியே..!
நம் நம்பிக்கை மட்டும்
வலிதாய் இணைந்தபடி
என்றும் இருக்கட்டும்
இணைந்து செல்லும்
எதிர்கால வாழ்வில்
இந்தக் கண்ணீர் நிமிடங்கள்
இனியொரு முறை வேண்டாம்..
என் தோள் சாயும் உயிர்க்கொடி
என்றும் நீயே ..!
என் நம்பிக்கை வார்த்தைகளில்
இனி உன் கண்ணீர் பாதைகள்
மலர்ப்பாதையாகும்
என்ற நம்பிக்கையில்
பயிரோடு நானிங்கே...
மாநிலம் கடந்து
கல்லூரி விடுதியில்
என் உயிரோடு நீ அங்கே... ! !
நம்பிக்கைதான் வாழ்க்கை என்று
வழக்கமாய்
நான் சொல்லும் வார்த்தை
இப்போது மட்டுமல்ல
எப்போதும்
நினைவில் இருக்கட்டும்...
(என் எண்ணங்களை நானே ஓவியமாக்கி, அந்த ஓவியத்துக்கு நான் வரைந்த கவிதை).