பட்டாம்பூச்சிகள் 2

அழகான பொருள் என்று
எல்லோரும் ஓடிவந்து வாங்க
நீ அதைவிட அழகாய்
மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாய்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ அழத்துவங்கினாய்
நானோ ஒரு ஓவியம் குலைவதை
பார்க்கத் தயாரானேன்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ படுத்திருக்கிறாய்
உன்னையே
ஒரு புல்லாங்குழலாய்
வாசிக்கத் தோன்றியது எனக்கு.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உள்ளங்கை நீட்டி
சத்தியமா.? என்கிறாய் நீ.!
உன் உள்ளங்கை தொடவே
சத்தியம் செய்கிறேன் நான்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இத்தனை வருடங்களுக்குப் பிறகு
இப்போதுதான் அக்பர் அசோகரின்
ஆத்மாக்கள் சாந்தி அடைந்திருக்கும்.
நீ வரலாறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாய்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
முன்னால் கிடந்த ஜடையை
எடுத்துப் பின்னால் வீசி எறிகிறாய்
அது முன்னழகு பற்றி
பின்னழகோடு பேசத் துவங்கியது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
காட்டு யானையை பிடிக்கும்
தந்திரம் தந்ததே
உன் கன்னக்குழிதான்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இரண்டு நாளாய்
கடல் சீற்றத்துடன் காணப்படுகிறதாம்
அன்பே நீவந்து கால் நனைத்துப்போயேன்
அது அமைதியாகட்டும்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
காலையில் உன்னைப் பார்த்ததிலிருந்தே
உனதாடையின் நிறமாய்
தெரிகிறது இந்த உலகம்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ என்னோடு பேசும் போதெல்லாம்
உன் தோடும் என்னோடு பேசுகிறது
நான் யார் பேசுவதைக் கேட்ப்பது.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எந்தச்செடியாக இருந்தாலும்
உன் கையில் இருக்கும்போது
பூச்செடியாகிவிடுகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீரூற்றினால்தானே பூப்பூக்கும்
இங்கென்ன
நீ பூத்தாய் என நீரூற்றுகிறார்கள்.!?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
கிணற்றில் நீர் இரைக்கிறாய்
வாளி மேலே வர வர
என் வாலிபம் உள்ளே விழுந்து
தத்தளிக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மலரில் தேன் வைத்த படைப்பை
உன் முகத்தில் இதழ் வைத்து
முடித்திருந்தான் இறைவன்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

எழுதியவர் : நிலாகண்ணன் (12-Oct-15, 12:07 am)
பார்வை : 472

மேலே