நரகாசுரனின் வாழ்த்து

நரகாசூரனின் வாழ்த்து

என் பிறந்த நாளை நான்
என்றுமே கொண்டாடியதில்லை
நான் புராண காலத்தில் வாழ்ந்தவனாம்
மக்களுக்குக் கேடு செய்து
அழிக்கப்பட்டவனாம்.

மறந்து காறித் துப்பி
ஒதுக்கப்படவேண்டிய நான் அழிந்த நாளை
நாடே கொண்டாடுவதை
மனதார வரவேற்கிறேன்.

ஏனெனில்
உயிரனங்களுக்கெல்லாம்
இடையூறு செய்தல்லவா
நான் அழிக்கப்பட்ட நாளை
நீங்கள் கொண்டாடுகிறீர்கள்!
நான் அழிக்கப்பட்டவன் என்றாலும்
அரக்கன் எனக்கு அழிவு பிடிக்காமல் போகுமா?

காதைப் பிளக்கும் வெடிகள்
மின்னலையும் மிரட்டும்
கண்ணைப் பறிக்கும்அசுர வெளிச்சம்
காற்றின் தூய்மையைக் கெடுத்து
நுரையீரலுக்கும் இதயத்திற்கும்
கேடுதரும் நச்சுக் கந்தகப் புகை!

அறிவியல் கால
ஞானிகள் அல்லவா நீங்கள்?
நான் அன்று செய்யமுடியாத
தீமைகளை இன்று அரங்கேற்றி
ஆரவாரம் செய்யும் அற்புதப் பிறவிகள்!
காலத்திற்கேற்ற கோலம் தவறில்லை;
கலிகாலம் தானே நீங்கள் வாழும் காலம்!

வாழ்க அழிக்கப்பட்ட அரக்கனுக்கு
நீங்கள் செய்யும் இந்தத் “திருப்பணி”!
உங்களை என் மானசீக வாரிசாய்
ஏற்பதில் தவறொன்றுமில்லையே?

நெருங்கி வருகிறது நான் அழிந்த நாள்
காசைக் கரியாக்கி எல்லோர்க்கும்
இடையூறு செய்யக் காத்துக்கிடப்போரே
ஆயிரக்கணக்கில் காசை வாரி இறைத்து
வாங்கிக் குவித்து வையுங்கள்
கிடைக்கும் வெடிபொருட்களையெல்லாம்.

நான் நிகழ்காலத்தை மட்டும்
அழிக்க முயன்று அழிந்துபோனேன்
நீங்களோ எதிர்காலத்தையும் பொசுக்கி
பேரானந்தம் கொள்ள நாட்களை எண்ணுகிறீர்

ஆஹா, எனதருமை வாரிசுகளே
என்னென்னவோ செய்து ஓசோன் படலத்தை
நீங்கள் துளைத்தது போதாது
காற்றின் தூய்மையைக் கெடுத்ததும் போதாது
இயற்கையை இதுவரை அழித்து
மழை வளத்தைத் தடுத்ததும் போதாது.

அந்த அழிவுக்கெல்லாம் ஏற்ற உரம் ஊட்டவே
என் அழிவு நாளையும் உற்றதுணையாக்குகின்றீர்
எப்படி நன்றி சொல்வேன் எனதருமை வாரிசுகளே!
தெரிந்தே தீவினை செய்வோரை வாழ்த்துவதே
அரக்கன் ஒருவனின் தார்மீகக் கடமை!


விண்ணதிர வெடியுங்கள்
மண்ணதிர வெடியுங்கள்
செவிப்பறைகளைக் கிழியுங்கள்
கண்ணோளியைப் பறித்திடுங்கள்
அஞ்சி நடுங்கட்டும் பிணியாளர்களும்
பிஞ்சுக் குழந்தைகளும் முதியோரும்
உமை நம்பி வாழும் விலங்குகளும் பறவைகளும்.

வாழ்க, வளர்க, அழிவினை வளர்க்க!

எழுதியவர் : மலர் (12-Oct-15, 5:00 pm)
பார்வை : 156

மேலே