ஸ்ரீவித்யா

மீனாட்சி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ஸ்ரீவித்யாவின் நடிப்பு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களை ஈர்த்தது. இவரது தாயார் எம்.எல்.வசந்தகுமாரி பிரபலமான கர்நாடகப் பாடகர். தந்தை கிருஷ்ணமூர்த்தியும் பிரபலமான நடிகர்.

1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்த போது, உடல்நலக்குறைவு காரணமாக அவரது தந்தையார் நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தபோது, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாகப் பாடிக்கொண்டிருந்தார் அவரது தாயார்.

“கைக்குழந்தையான தனக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூட அம்மாவுக்கு நேரம் இருக்கவில்லை, அப்படி குடும்பத்துக்காக உழைத்தார்” என்று பின்னாட்களில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீவித்யா. இந்த பொருளாதாரக் கஷ்டங்களினால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழும்ப சங்கீத மேதையான தாத்தா அய்யாசாமி அய்யர் வீடுதான் ஸ்ரீவித்யாவின் இருப்பிடம்.

ஸ்ரீவித்யா சிறுமியாக இருக்கும் பொழுது மயிலாப்பூர் மார்கெட்டுக்கு தன் தாத்தாவோடு ரிக்ஷாவில் காய்கறி வாங்க வருவார். ரிக்ஷாவில் வரும்போது சங்கீத கீர்த்தனைகளை தாத்தா உபதேசிக்க பத்துவயதுக்குள் கச்சேரி செய்யுமளவுக்கு இசையைக் கற்றுத் தேர்ந்துவிட்டார் ஸ்ரீவித்யா.

ஆனாலும் அவருக்கு சங்கீதத்தைவிட நாட்டியத்தில் தான் பிடிப்பு அதிகம் இருந்தது. காரணம் இந்தியாவிலே நடனத்துக்குப் பெயர்பெற்ற திருவாங்கூர் பத்மினி சகோதரிகள் வசித்த வீடும் ஸ்ரீவித்யாவின் வீடும் பக்கத்துப் பக்கத்து வீடுகள். நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனம் என்றால் அவருக்கு உயிர். பத்மினியே குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை நாட்டியம் கற்றுக்கொள்ள வைத்தார். பத்மினி-ராகினி நடத்திய நாட்டிய நாடகத்தில் பாலசீதாவாக ஆறுவயதிலே நடித்தவர் ஸ்ரீவித்யா. பதினோரு வயதில் நாட்டிய அரங்கேற்றமும் முடிந்தது.

பின் இந்தியா முழுக்க நடனத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் நடித்து, பி.ஆர்.பந்துலு தயாரித்த “ரகசிய போலீஸ் 115” திரைப்படத்தில் கதாநாயகி வாய்ப்பு ஸ்ரீவித்யாவின் வீட்டுக் கதவைத் தட்டியது. அலங்காரச் சோதனைக்குப் பிறகு, “புடவையில் சிறுபெண்ணாகத் தெரிகிறார்” என்று நிராகரித்ததோடு இன்னும் சில வருடங்களில் நானே வாய்ப்புக் கொடுக்கிறென் என்றார் எம்.ஜி.ஆர்.
பின் அந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதா ஒப்பந்தம் ஆனார்.

அதுவரையில் நடிப்பின் மீது ஆர்வமில்லாமல் இருந்த ஸ்ரீவித்யா ஏ.பி.நாகராஜன் ஏற்கனவே கேட்டுவந்த “திருவருட்செல்வர்” படத்தில் நாட்டியமாட சம்மதம் தெரிவித்தார். “காரைக்கால் அம்மையார்” படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய “தகதகதகவென ஆடவா” பாடலில் ஸ்ரீவித்யாவின் நாட்டியத்தைப் பார்த்து தமிழ்நாடே கைதட்டிப் பாராட்டியது.

அதன்பிறகு மலையாளத்தில் “சட்டம்பிக்காவலா” படத்தில் நாயகியாக நடித்தார். கதாநாயகன் சத்யனுக்கு அப்போது ஐம்பத்தி ஏழுவயது. நாற்பதுவருடம் மூத்த நடிகருடன் துணிச்சலாக நடித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.

தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் கே.பாலச்சந்தரின் இராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் “வெள்ளி விழா”, “நூற்றுக்கு நூறு” ஆகியபடங்களில் நடித்து, பாலச்சந்தர் படங்களுக்கு ஆஸ்தான கதாநாயகியாக உருவாகினார். அவருடைய “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படம் கமல்ஹாசனுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவும் சிவக்குமாரும் முக அசைவுகளிலே சொல்லவேண்டிய வசனங்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

ஸ்ரீவித்யாவின் பெரிய கண்களும், அவருடைய நடனமும் அவரை வெறும் கதாநாயகியாக மட்டுல்லாமல் திறமையான குணச்சித்திர நடிகையாகவும் உருமாற்றியது. “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் இருபது வயதுப் பெண்ணுக்கு தாயாக நடிக்க இருபத்தி இரண்டுவயது ஸ்ரீவித்யா சம்மதித்த போது ஆச்சர்யத்தில் மூழ்காத திரையுலகினரே இல்லை. அபூர்வ ராகங்களில் வந்த பைரவி கதாப்பாத்திரம் தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற கதாப்பாத்திரங்களுள் ஒன்று.

ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படத்தில் அவருடைய கதாநாயகி ஸ்ரீவித்யா தான். இந்தப்படத்தில் இடம்பெற்ற “ஏழு ஸ்வரங்களுக்குள்” பாடலும் ஸ்ரீவித்யா நடிப்பும், பாவனைகளும் இன்றைக்குப் பார்த்தாலும் என்ன அற்புதமாக இருக்கும்.

எழுபதுகளின் இறுதியில் ரஜினி, கமல் மட்டுமல்லாமல் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். சிவாஜி கணேசனுடன் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ போன்ற படங்களில் நடித்தவருக்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. எம்.ஜி.ஆர் முதல்வரானதும் கலைமாமணி விருதும், 1977-78ம் ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், எனத் 900படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா.

எழுதியவர் : செல்வமணி முகநூல் விஜயகும (20-Oct-15, 9:01 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 140

மேலே