கற்சுவர்கள்
தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்பு
------------------------------------------------------------------------------------------------------------
கற்சுவர்கள்
முன்னுரை
1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ‘அரச குடும்பம்’ - என்ற அர்த்தமில்லாத - ஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் பெரிய கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன.
பழைய பணச் செழிப்பான காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்களைப் புதிய பண நெருக்கடிக் காலத்தில் விட முடியாமல் திணறிய சமஸ்தானங்கள், குதிரைப் பந்தயம், குடி, சூதாட்டம், பெண்கள் நட்புக்காகச் சொத்துக்களைப் படிப்படியாக விற்ற சமஸ்தானங்கள், கிடைத்த ராஜமான்யத் தொகையில் எஸ்டேட்டுகள் வாங்கியும், சினிமாப் படம் எடுத்தும், தொழில் நிறுவனங்கள் தொடங்கியும், ரேஸ் குதிரைகள் வளர்த்தும் புதிதாகப் பிழைக்கக் கற்றுக் கொண்ட கெட்டிக்காரச் சமஸ்தானங்கள், என்று விதம் விதமான சமஸ்தானங்களையும் அவற்றை ஆண்ட குடும்பங்களையும் பல ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன்.
அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆனால் மூடி தொலைந்து போன ஒரு பழைய காலி ஒயின் பாட்டிலைப் போல் இப்படிச் சமஸ்தானங்கள் - இன்று எனக்குத் தோன்றின. காலி பாட்டிலுக்குப் - பெருங்காய டப்பாவுக்குப் பழம் பெருமைதான் மீதமிருக்கும்.
ஒவ்வொரு சமஸ்தானத்திலும் முன்பு சேர்ந்துவிட்ட பலதுறை வேலை ஆட்களை இன்று கணக்குத் தீர்த்து அனுப்புகிற போது எத்தனையோ மனவுணர்ச்சிப் பிரச்னைகள், ஸெண்டிமெண்டுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஊதாரித்தனங்களையும், ஊழல் மயமான செலவினங்களையும் விடவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்திருக்கிறார்கள் சமஸ்தானமாக இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இணைத்துக் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதை நிகழ்கிறது. டம்பத்துக்கும் ஜம்பங்களுக்கும் ஊழலுக்கும், ஊதாரித்தனத்துக்கும் இருப்பிடமான ஒரு பழந் தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. பரந்த நல்லெண்ணமும் முற்போக்குச் சிந்தனையும் உள்ள புதிய தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. சமஸ்தானமாக இருந்த குடும்பங்களிலேயே ‘ஜெனரேஷன் கேப்’ எப்படி எல்லாம் இருந்தது என்பதைக் காண்பிக்கிற நிகழ்ச்சிகள் கதையில் இடம் பெறுகின்றன.
கதையின் தொடக்கத்திலேயே இறந்து போகிற பெரிய ராஜா தாம் செய்துவிட்டுச் சென்ற செயல்கள் மூலமாகக் கதை முடிவு வரை ஒரு கதாபாத்திரமாக நினைவுக்கு வருகிறார். ஒரு தலைமுறையில் அழிவும் மற்றொரு தலைமுறையின் ஆரம்பமும் நாவலில் வருகிறது. மனப்பான்மை மாறுதல்கள் கதாபாத்திரங்கள் மூலமாகவே புலப்படுத்தப்பட்டுள்ளன. மனப்பான்மை முரண்டுகளையும் கதாபாத்திரங்களே காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு பெரிய ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ ஆக இருந்திருக்கிறது. ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ - அழியும் போது - அல்லது சிதறும் போது ஏற்படும் குழப்பங்கள் - மனிதர்கள் சம்பந்தமான பிரச்னைகள், புலம்பல்கள், கழிவிரக்கங்கள் எல்லாம் இந்தக் கதையில் வருகின்றன.
இந்நாவல் புதிய இந்திய சமூக அமைப்பில் - ராஜமான்ய ஒழிப்பு அவசியமே என்று நியாயப்படுத்தும் ஒரு கதையை வழங்குகிறது. ஒரு கதையோடு சேர்த்து நிரூபணமாகிற தத்துவங்கள் வலுப்படும் என்பது உறுதி. சமஸ்தான ஒழிப்பு, ராஜமான்ய நிறுத்தம் ஆகிய கடந்த பத்துப் பதினைந்தாண்டுக்காலப் பிரச்னைகள் - முற்போக்கான சமூக அமைப்புக்குத் தேவையான விதத்தில் இதில் பார்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். கதையில் வரும் ‘பீமநாதபுரம் சமஸ்தானம்’ - இதை விளக்குவதற்கான ஒரு கற்பனைக் களமே.
இதை முதலில் நாவலாக வேண்டி வெளியிட்ட மலேயா தமிழ் நேசன் தினசரியின் வாரப் பதிப்பிற்கும் இப்போது சிறந்த முறையில் புத்தக வடிவில் வெளியிடும் சென்னை தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நா.பார்த்தசாரதி
தீபம், 21-9-76
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கற்சுவர்கள்
1
பீமநாதபுரம் நகரம் என்று சொல்லிவிட முடிந்த அதிக வசதிகள் உள்ளதும் அல்ல; வசதிகளே இல்லாத குக்கிராமமும் அல்ல; சமஸ்தானமாக இருந்த காலத்தில் அந்த ஊருக்குத் தனி அடையாளங்களும் தனிச் சிறப்புகளும் இருந்தன. நவராத்திரி விழா, புலவர்களின் கவி மழைகள், இசை, நடனம், சதிர், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, வாண வேடிக்கை எல்லாம் இருந்தன. இவை ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. அரண்மனையையும், சமஸ்தானத்தையும் மையமாகக் கொண்டிருந்த ஊரின் முக்கியத்துவங்கள் அங்கிருந்து விலகி இடம் மாறின. ஊரின் முக்கால்வாசி இடம் அரண்மனை; மலைப் பாம்பு போல் வளைந்து கிடந்த கற்கோட்டைக்குள் காடாய் அடர்ந்த நந்தவனங்கள், பூங்காக்கள், மரக் கூட்டங்களுக்குள்ளே நடுவாக அரண்மனை இருந்தது. ஊரின் வளர்ச்சி, தளர்ச்சி, கடைவீதி வியாபாரம், போக்குவரத்து எல்லாம் ஒரு காலத்தில் அரண்மனையைப் பொறுத்துத்தான் இருந்தன. இன்று அது மாறிவிட்டது. வேறு சூழ்நிலைகளும் வேறு முக்கியத்துவங்களும் ஊருக்குள்ளே உருவாகிவிட்டன. பீமநாதபுரம் சமஸ்தானத்தின் ராஜமான்யமாகக் கிடைத்து வந்த ஆண்டுக்கு ஏழு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயும், பின்வழித் தோன்றல்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்களும் நிறுத்தப்பட்ட பின் அதே கவலையில் 1972-ம் வருடம் டிசம்பர் மாதம் பனி அதிகமாக இருந்த ஒரு பின்னிரவில் மாரடைப்பினால் காலமாகிவிட்டார் அதன் மகாராஜாவாக இருந்த பீமநாத ராஜ சேகர பூபதி.
அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெரிய மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதியுடன் ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டுத் தன் தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசியாவில் இருந்த ரப்பர்த் தோட்டத்துக்கு மானேஜராகப் போய்விட்ட ராஜாவின் ஒரே மூத்த மகன் திரும்பி வருவதற்காக அந்திமக் கிரியைகள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மூத்தமகன் விமானத்தில் புறப்பட்டு வருவதாகத் தகவலும் வந்துவிட்டது. தனசேகரன் வருவானா மாட்டானா என்று கூட அந்த ராஜ குடும்பத்தில் ஒரு சர்ச்சை இருந்தது. அவன் வருவதாகக் கேபிள் கிடைத்ததும் தான் அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவன் வருவது பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.
“ரெண்டு வருசமா எட்டிப் பார்க்காம இருந்த புள்ளையாண்டானுக்கு அப்பன் இறந்ததும் சொத்துச் சுகம், வாரிசு உரிமை எல்லாம் என்ன ஆகுமோன்னு பயம் வந்திருக்கும். அதான் ப்ளேன்ல பறந்து ஓடியாரான்.”
“சே! சே! அப்பிடிச் சொல்லிடாதீங்க. சொத்து சுகத்தை எல்லாம் தனசேகரன் என்னிக்குமே இலட்சியம் பண்ணினதில்லே. அப்படி எல்லாம் இலட்சியம் பண்ணியிருந்தா அவன் மலேசியாவுக்கே போயிருக்க வேண்டியதில்லியே?”
“எப்படியோ? இப்போ அவன் புறப்பட்டு வந்தால் எல்லாம் தானே தெரியுது? பெரிய ராஜா போயாச்சு. இனிமே எப்படியும் அண்ணன் தம்பி தங்கைகளுக்குள்ளே சொத்துச் சுகம் பற்றின தகராறுகளோ பேச்சு வார்த்தைகளோ ஏற்படாம இருக்கிறது சாத்தியமில்லே! தகராறு எப்படியும் வந்துதான் தீரும்.”
“அண்ணன் தம்பி தங்கைங்கிற பேச்சுக்கே இடமில்லே. முறையான வாரிசு தனசேகரன் ஒருத்தன் தான். மற்றவங்கள்ளாம் இளையராணிகளுக்குப் பிறந்தவங்கதானே?”
இப்படி எல்லாம் ஊரில் பலவிதமாகப் பேச்சு எழுந்தது. சமஸ்தானத்து உறவு முறைகளின்படி அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என்ற பெயரில் வெளியூர்களில் இருந்த எல்லாருக்கும் தந்திகள் பறந்தன. காலஞ்சென்ற பீமநாத ராஜ சேகர பூபதிக்கு ஏராளமான வாரிசுகள். மனைவியைத் தவிரவும் - அதாவது முறைப்படி ராணி என்று அரண்மனை வேலைக்காரர்கள் அழைத்து மரியாதை செய்து வந்த தர்மபத்தினியைத் தவிரவும் அந்தப்புரத்துக் காமக் கிழத்தியர் வேறு பலர் இருந்தனர். அவர்களுடைய குழந்தைகளும் மகாராஜாவின் வாரிசுகளாகவே கருதப்பட்டனர். இரண்டு வருஷங்களுக்கு முன் பெரிய ராஜாவின் போக்குகள் பிடிக்காமல் அவரை திருத்தவும் முடியாமல் தான் தனசேகரனே மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். அவன் மலேசியா புறப்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் அவன் அன்னையும் பட்டத்து ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாள் காலமாகியிருந்தாள். தனசேகரனுக்குத் தந்தையிடம் ஒட்டுதலே இல்லாததோடு தாயிடம் தான் நிறைய ஒட்டுதலும் பாசமும் இருந்தன. தாய் இறந்த சில மாதங்களுக்குள் தந்தை செய்த சில காரியங்கள் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. தாயும் தனசேகரனும் தான் பெரிய மகாராஜாவைத் தவறான வழிகளில் செல்லாமல் இழுத்துப் பிடித்து நிறுத்துகிற தடுப்புச் சக்தியாக இருந்தார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் தான் அவர் கொஞ்சம் பயப்பட்டார். மற்றவர்கள் எல்லாருமே அவரிடம் எதிரே நின்று பேசுவதற்கே அஞ்சுகிறவர்களாக இருந்தார்கள். தாய் போனதும் தனசேகரனுக்கும் மகாராஜாவுக்கும் இடையே இருந்த இணைப்புச் சக்தி போய்விட்டது. மகாராஜா தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
தனசேகரனின் அன்னையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் மூத்த ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாள் காலமானவுடன் திடீரென்று ஏற்பட்ட சபலங்களாலும், சகவாச தோஷத்தினாலும் கேட்பார் பேச்சை கேட்டுக் கொண்டும் சினிமாத் தயாரிப்பில் இறங்கினார் மகாராஜா. அதற்காக ‘பீமா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் சென்னையில் ஒரு சினிமாக் கம்பெனியும் திறக்கப்பட்டது.
சினிமாக் கம்பெனி திறக்கப்பட்டதையொட்டிச் சில நடிகைகளோடு அவருக்கு அதிகத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களில் சில அழகான இளம் நடிகைகள் ‘வீக் என்ட்’ எண்டர்டெயின்மெண்டுக்காகப் பீமநாதபுரம் அரண்மனைக்கே பெரிய பெரிய ‘சவர்லே’ இம்பாலா கார்களில் தேடி வரத் தொடங்கினார்கள். ஜெயநளினி என்ற ஒரு புதிய கதாநாயகிக்கு லட்ச ரூபாய் செலவழித்து அடையாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்தார் மகாராஜா. இந்த மாதிரிப் போக்கில் அதிருப்தியும் கசப்பும் அடைந்த பின்பே தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசிய நாட்டில் ஈப்போவில் வியாபாரமும், பக்கத்தில் ரப்பர் எஸ்டேட்டுகளும் இருக்கவே - அவரோடு மலேசியா புறப்பட்டுவிட்டான். மகாராஜாவின் மூத்த மகனும் இளையராஜாப் பட்டம் பெற வேண்டியவனுமான தனசேகர பாண்டிய பூபதி என்ற முழுப் பெயரையுடைய தனசேகரன்.
சமஸ்தானத்துக்கு ‘ப்ரீவிபர்ஸ்’ என்னும் ராஜமான்யத் தொகை வருவது நிற்கிற வரை பெரிய மகாராஜா, கூத்து, குடி, ரேஸ், சினிமாத் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளோடு லீலை எல்லாவற்றையும் தாராளமாக நடத்த முடிந்தது.
ராஜமான்யம் நின்றதுமே அவரது இதயமும் நின்று போய்விட்டது. விவரம் தெரியாத காரணத்தால் சினிமாத் தயாரிப்பில் அவரை நிறைய ஏமாற்றிவிட்டார்கள். அவரது படங்கள் வெற்றியோ வசூலோ ஆகவில்லை. அவ்வளவேன்? சில படங்கள் தயாராகவே இல்லை. பணத்தை மட்டும் லட்ச லட்சமாக முழுங்கின. நிறைய நஷ்டப்பட்டும் நடிகைகள் மேலுள்ள நைப்பாசையால் அவர் சாகிறவரை சினிமாவை விடவில்லை. சினிமாக் கவர்ச்சிகளும் சாகடிக்காமல் அவரை விட்டு விலகிப் போய்விடவில்லை.
சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு ராஜமான்யம் வரத் தொடங்கியதும், இந்திய மகா ராஜாக்களில் பலர் ரேஸ் குதிரைகள் வளர்ப்பது, சினிமா எடுப்பது, ஆடம்பர ஹோட்டல்கள் நடத்துவது, காபி எஸ்டேட், டீ எஸ்டேட், டெக்ஸ்டைல் மில் எனப் பலவிதமான தொழில்களில் இறங்கினர். அவர்களில் பலர் கடந்த கால டாம்பீக உணர்வுகளை விட முடியாமல் சிரமப்பட்டனர். பழைய பழகிய ஆடம்பரங்களுக்கும், புதிய நிர்பந்தமான பணப்பற்றாக்குறைக்கும் ஒரு போராட்டமே அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஆரம்பமாகியிருந்தது. அந்தப் போராட்டத்தில் தோற்றுப் போய்த்தான் மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதி மாண்டு போயிருந்தார்.
பீமநாதபுரம் சமஸ்தானமாக இருந்தவரை திவான் தனி இராணுவம், தனிப் போலீஸ், தனிக்கொடி, தனி ராஜ மரியாதைகள் எல்லாம் இருந்தன. கஜானாவில் தங்கமும் வைரமும் குவிந்து கிடந்தன. கடைசி திவானாயிருந்து ஓய்வு பெற்ற சர்.டி.ராகவாச்சாரியர் காலம் வரை அரண்மனையும் சமஸ்தானமும் செல்வச் செழிப்பில் தான் மிதந்தன. சமஸ்தான அந்தஸ்து ஒழிவதற்கு முந்திய கடைசி நவராத்திரி வித்வத் சதஸின் போது கூட மன்னரை வாழ்த்திய தமிழ்ப் புலவர்களுக்கும், சங்கீதக் கச்சேரி செய்த இசை வித்வான்களுக்கும், நாட்டியமாடிய நடனக்காரிகளுக்கும் தங்கச் சவரன்களாகத்தான் சன்மானங்கள் எண்ணி வழங்கப்பட்டன. பட்டுப் பீதாம்பரங்களும் விலையுயர்ந்த காஷ்மீர் சால்வைகளும் போர்த்தப்பட்டன.
சமஸ்தான திவான் சர்.டி.ராகவாச்சாரி ஓய்வு பெறுகிற நேரமும் சமஸ்தானங்கள் அந்தஸ்தை இழக்கிற காலமும் சரியாக நெருங்கி வந்ததினால் ‘மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் இனிமேல் நமக்கு ஒரு திவான் அவசியமில்லை’ என்ற முடிவுடன் திவானைக் கௌரவமாக ஓய்வு பெறச் செய்து ஒரு பெரிய விடையளிப்பு விருந்தும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் பீமநாத ராஜ சேகர பூபதி. ராஜமான்யமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில லட்ச ரூபாய்களுக்குள்ளேயே இனிமேல் சமஸ்தானச் செலவுகளையும் சொந்தச் செலவுகளையும், குறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. திவான் இல்லை என்றாலும் திடீர் என்று அவர் கவனித்து வந்த ஏராளமான வேலைகளையும், பொறுப்புக்களையும், யாராவது கவனித்தே ஆக வேண்டியிருந்தது. காரியஸ்தர் என்ற புதுப் பெயரில் ஒரு பழைய காலத்து வக்கீலை ராஜா நியமித்திருந்தார். அரண்மனைக் காரியஸ்தர் என்ற பெயரை ஏற்று உத்தியோகம் பார்த்து வந்த அவருக்குக் கீழே இரண்டு கிளார்க், ஒரு டைபிஸ்ட், ஓர் அகௌண்ட்டெண்ட், ஒரு கேஷியர், ஒரு அட்டெண்டர், ஒரு மெஸஞ்சர் ஆகிய ஆறு ஏழு பேர் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
பெரிய மகாராஜா மாரடைப்பால் காலமானவுடனே அப்போது மலேசியாவில் ஈப்போவில் இருந்த அவருடைய மூத்த குமாரன் தனசேகரனுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதே அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைதான்! தனசேகரன் உடனே வருவதாகத் தெரிவித்ததுடன் காரியஸ்தரைப் பீமநாதபுரத்திலிருந்து காரோடு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரச் சொல்லியும் வேண்டிக் கொண்டிருந்தான்.
தனசேகரன் வருவதோடு அவனுடன் காலஞ்சென்ற மகாராஜாவின் மைத்துனரும் தனசேகரனின் மாமாவான டத்தோ தங்கப் பாண்டியனும் மலேயாவிலிருந்து கூடவே புறப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரே கோலாலம்பூரிலிருந்து சென்னை வருகிற ‘பிளைட்டில்’ இருவருக்கும் இடம் கிடைக்காததால் ஆஸ்திரேலியாவிலிருந்து கோலாலம்பூர் வந்து அங்கிருந்து கொழும்பு செல்லுகிற ஒரு வெளிநாட்டு விமானத்தில் இடம் பிடித்துக் கொழும்பிலிருந்து சென்னை வந்து விடுவதாகத் தனசேகரனே மறுபடி டெலிபோனில் கூப்பிட்டு அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையிடம் வருகையை உறுதிபடுத்திச் சொல்லி விட்டான். அந்த வருகைச் செய்தி பீமநாதபுரம் நகரிலும் முழுமையாகப் பரவிவிட்டது. பீமநாதபுரம் அரண்மனைகளின் முகப்பிலேயே இருந்த ராஜராகேஸ்வரி விலாசஹாலில் காலஞ்சென்ற மகாராஜாவின் உடல் ஐஸ்கட்டிகள் அடுக்கப்பட்டு வாசனைத் தைலங்கள் தடவப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நகரில் பரவலாகத் துக்க தினம் அநுஷ்டிக்கப்பட்டது. கடைவீதிகளில் பெரும்பாலான கடைகள் துக்கத்தைக் காட்டும் அடையாள நிகழ்ச்சியாக மூடப்பட்டு விட்டன. அரசியல் கட்சிகள் என்ற பெயரில் எத்தனை கட்சிகளுக்குப் பீமநாதபுரம் தெருக்களிலும் நாற்சந்திகளிலும், முச்சந்திகளிலும் கொடிக் கம்பங்கள் இருந்தனவோ அத்தனை கொடிக் கம்பங்களிலும் கொடிகள் பாதி அளவு கீழே இறங்கிப் பறந்தன. பொது நிறுவனங்களுக்கும் கல்விக் கூடங்களுக்கும் மறுநாள் காலையே விடுமுறை விடப்பட்டன. மகாராஜாவின் சடலத்தைக் கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்கு நகரிலிருந்தும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் மக்கள் அரண்மனை முகப்பில் கூடி விட்டனர். எவ்வளவு தான் கெட்ட பெயர் எடுத்திருந்தாலும் எவ்வளவுதான் தாறுமாறாக வாழ்ந்திருந்தாலும் ஜனங்களுக்கு ராஜா என்ற பிரமையும், மயக்கமும் இருக்கத்தான் செய்தன. முறையாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதை விடத் தாறுமாறாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. கடைசிக் காலத்தில் அவர் சினிமாத் தயாரிப்பாளராக இருந்தார் என்ற தொடர்பினாலும் நிறைய நடிகைகளோடு அவருக்குத் தொடர்பிருந்ததனாலும் மரணம் நேர்ந்த இரவுக்கு மறுதினம் காலையிலேயே இரவோடிரவாகச் சென்னையிலிருந்தே காரில் புறப்பட்டும் திருச்சி வரை ரயிலில் வந்து பின்பு காரில் சவாரி செய்தும் பல நடிகைகளும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அஞ்சலி செலுத்துவதற்குப் பீமநாதபுரம் வந்து விட்டார்கள். அந்த மாதிரி வந்திருந்த சினிமா நட்சத்திரங்களைப் பார்க்கவும் வேறு அரண்மனை முகப்பில் மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நட்சத்திரங்கள் ஒரு மகாராஜாவின் பிரேதத்தைப் பார்த்துத் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்திவிட்டுப் போக வந்திருந்தார்கள். மக்களோ நட்சத்திரங்களுக்குத் தங்களுடைய மரியாதையைச் செலுத்தத் திரளாகக் கூடிவிட்டனர்.
யாருக்குக் காலஞ்சென்ற மகாராஜா லட்ச ரூபா செலவில் சென்னை அடையாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்ததாகப் பரவலாக ஒரு வதந்தி நாடு முழுவதும் பரவியிருந்ததோ அந்தக் கட்டழகு நடிகை ஜெயநளினி ஒரு முழுக்கறுப்பு நிறப் பட்டுப்புடவையை அணிந்து துக்கம் கொண்டாடுகிற பாவனையில் வந்த போது கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பார்த்ததாலும் பரபரப்பும் அதிகமாகிவிட்டன.
“மனுஷன் மண்டையைப் போடறதுக்கு முன்னே அவ்வளவு பணத்தையும் இவ காலடியிலே கொண்டு போய்த்தான் குவிச்சாரு!”
“அதுக்காவது விசுவாசம் காண்பிக்க வேண்டாமா? அதுனாலேதான் கறுப்புப் புடவை கட்டிக்கிட்டுத் துக்கம் கொண்டாட வந்திருக்கா இவ. வாங்கின காசுக்காவது நன்றியிருக்கணுமில்லியா?”
“பெரிய மகாராணி போனப்புறமே அவரு தாறுமாறா ஆயிட்டாரு. அப்புறம் கண்ட்ரோல் பண்ண ஆளு யாரும் இல்லே. அதுக்கேத்தாப்ல மூத்த புள்ளையாண்டானும் கோபிச்சுகிட்டு மலேசியாவுக்குப் போயாச்சு.”
“ஏதோ மனுஷன் போய்ச் சேர்ந்தாச்சு! சமஸ்தானமா இருக்கறப்பவே போயிருந்தாலும் ராஜ மரியாதை கிடைச்சிருக்கும். இப்போ அதுவும் இல்லே. வெறும் சினிமாக்காரங்க மட்டும் தேடி வர்ற மரியாதைதான்.”
இப்படிப் பலவிதமான உரையாடல்களை அரண்மனை முகப்பில் கூடியிருந்த பொதுமக்களின் கூட்டத்திடையே சர்வசாதாரணமாகக் கேட்க முடிந்தது.
மகாராஜா காலமான மறுநாள் இரவு ஏழே முக்கால் மணியளவில் தான் தனசேகரனும் அவன் மாமாவும் சென்னை வரமுடியும் என்றிருந்ததால் அடுத்த நாள் இரவையும் விட்டு மூன்றாம் நாள் அதிகாலையில் தான் காலஞ்சென்ற ராஜாவின் இறுதிச் சடங்குகளைச் செய்வதென்று முடிவாகி இருந்தது.
பீமநாதபுரம் நகரின் மேற்குக் கோடியில் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனி மயானம் ஒன்று அடர்ந்த தோட்டமாகக் காடு மண்டியிருந்தது. சமஸ்தானத்தின் வம்ச பரம்பரை முழுவதும் அந்த மயானத்தில் தான் இறுதி யாத்திரையை முடித்துச் சாம்பலாகியிருந்தது. அங்கே தான் அரண்மனை வெட்டியான்கள் காட்டைச் செதுக்கி இறந்து போன மகாராஜாவின் சடலத்துக்கு எரியூட்ட இறுதியிடம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சமஸ்தானத்துக்குச் சொந்தமான காட்டிலிருந்தே சந்தனக் கட்டைகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டிருந்தன. மகாராஜாவின் இறுதி யாத்திரையில் சடலத்துக்குப் பின்னால் தூவிக் கொண்டு வருவதற்காக ஒரு லாரி நிறைய ரோஜாப் பூக்களும், மல்லிகைப் பூக்களும் வேறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
இறுதி யாத்திரையை எந்தெந்த வீதிகள் வழியாக வைத்துக் கொள்வது என்பது பற்றிப் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூட் விவரம் சொல்லுவதற்கு முன்னால் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கும் ராஜ குடும்பத்தினருக்கும் அது பற்றிப் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருந்தன.
‘நாலு ரத வீதிகளிலும் நாலு ராஜ வீதிகளிலும் சுற்றி வந்து அப்புறம் மயானத்திற்கான சாலையில் போக வேண்டும்’ என்பதாக ராஜ குடும்பத்தினர் அபிப்பிராயப்பட்டனர். மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, அதை அடுத்து அதே போல் நான்கு ரத வீதிகள் ஆகிய எட்டு வீதிகளுக்கு ஒரே சமயத்தில் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்து தருவது உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் தங்களுக்குச் சிரமமாக இருக்குமென்று சொன்னார்கள். நான்கு ராஜ வீதிகள் மட்டும் போதும் என்று போலீஸ் அதிகாரிகள் யோசனை சொன்னார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அந்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டார். ராஜ குடும்பத்தினர் மட்டும் எட்டு வீதிகளையும் கண்டிப்பாக வற்புறுத்தினார்கள்.
மறுநாள் பகல் பதினொரு மணிக்கே அரண்மனைக்குச் சொந்தமான ‘சவர்லே’ கார் ஒன்று சென்னை விமான நிலையம் சென்று மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக வரப்போகும் தனசேகரனையும் அவன் மாமா டத்தோ தங்கப் பாண்டியனையும் அழைத்து வரப் புறப்பட்டது. முதலில் பெரிய கருப்பன் சேர்வையே அந்தக் காரில் சென்னை போய் விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்து வருவதாக இருந்தார். ஆனால் அரண்மனைக் காரியஸ்தர் என்ற முறையில் மகாராஜாவின் இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு அவர் பீமநாதபுரத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று தோன்றியதால் காரை மட்டும் டிரைவரோடு குறித்த நேரத்திற்கு ஒரு மணிக்காலம் முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும்படி அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டுப் போனதுமே அரண்மனையில் ஒரு முக்கியமான பிரச்னை காரியஸ்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. காலஞ்சென்ற பீமநாத ராஜசேகர பூபதிக்கு முறைப்படி பட்டத்து ராணியாயிருந்த வடிவுடைய நாச்சியாரம்மாளுக்குத் தான் தனசேகரன் ஒரே பிள்ளையே தவிர அந்தப்புரப் பெண்களான இளைய ராணிகள் மூலம் நிறையப் பிள்ளைகள் பெண்கள் பிறந்து அவர்களில் சிலருக்குத் திருமணமாகிப் பெரிய மகா ராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் பேரன் பேத்திகள் கூட இருந்தனர். அப்படி ஏற்பட்ட பேரன்மார்களில் சிலர் மகாராஜாவின் சடலத்தருகே நெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்றார்கள்.
காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு இந்த நெய்ப்பந்தப் பிரச்னையில் சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டன. அவர் காரியஸ்தராகப் பதவி ஏற்ற பின் அந்த அரண்மனையில் ஏற்பட்ட முதல் பெரிய சாவு இதுதான். அதனால் பல விஷயங்களை எப்படிச் செய்வது என்பதில் அவருக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது. நெய்ப்பந்த விஷயம் பின்னால் சொத்து வகையில் ஏதாவது தகராறுகளைக் கிளப்பிவிடுமோ என்று அவர் பயந்தார். தனசேகரனும் அவனுடைய தாய்வழி மாமாவும் வந்த பிறகு அவர்களைக் கேட்டுக் கொண்ட பின் நெய்ப்பந்த விஷயம் பற்றி முடிவு சொல்லலாமா இப்போதே சொல்லலாமா என்று அவர் தயங்கினார். ஏனென்றால் இறுதிக் கிரியைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் மகாராஜாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவதிலும் தொடர்பு இருந்தது. ‘என் பேர நெய்ப்பந்தம் பிடித்தான். அதனால் அவனுக்கு இன்ன சொத்து சேர்ந்தாக வேண்டும்’ என்று பின்னால் ஒவ்வோர் இளைய ராணியும் இதைச் சுட்டிக் காட்டி உரிமை கொண்டாட வந்துவிடக் கூடாதே என்று பயமாக இருந்தது பெரிய கருப்பன் சேர்வைக்கு. அதனால் தானே நெய்ப் பந்தத்தை மறுத்ததாக இருக்கக் கூடாதென்று அதற்குப் போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினார் அவர்.
“நீங்கள் முதல்லே இறுதி ஊர்வலத்துக்கு எட்டு வீதி கிடையாது. நாலு ராஜ வீதி மட்டும்தான்னு முடிவு பண்ணுங்க. அப்புறம் நெய்ப்பந்த விஷயத்தைக் கவனிக்கலாம்” என்றார் அதிகார்.
போலீஸ் அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி, “எட்டு ராஜவீதி கிடையாது, நாலு ராஜ வீதி தான். நெய்ப்பந்தத்துக்கு அனுமதி இல்லை” என்று இரண்டையும் தடுத்து விட்டார் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை.
மகாராஜாவின் அந்தரங்க அறைகள், இரும்புப் பெட்டிகள் எல்லாவற்றையும் பூட்டி உடனே ‘சீல்’ வைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் வேறு அப்போது ஏற்பட்டது.
இளையராணிகள் என்ற பெயரில் அரண்மனை அந்தப்புரத்தில் அடைந்து கிடந்த பல பெண்கள் காலஞ்சென்ற மகாராஜாவின் அறைகளில் புகுந்து அவரவர்களுக்கு அகப்பட்டதைச் சுருட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் காரியஸ்தருக்குத் தகவல் கிடைத்த போது பிற்பகல் இரண்டு மணி. எப்படிப் போய் யாரைக் கண்டிப்பது, யாரைத் தடுப்பது என்று முதலில் அவருக்குத் தயக்கமாக இருந்தது. எல்லாமே கொள்ளை போய்விட்டால் அப்புறம் தனசேகரனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் தான் பதில் சொல்லியாக வேண்டியிருக்குமோ என்ற கவலையும், பயமும் வேறு பிடித்தன. போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு மகாராஜாவின் தனி அறைகள், பீரோக்கள், இரும்புப் பெட்டிகள் இருந்த பகுதிகளைப் பூட்டி சீல் வைத்தார் காரியஸ்தர். மகாராஜா அலங்கரித்துக் கொள்ளும் அறையிலும் பாத்ரூமிலும் இருந்து பல கைக்கடிகாரங்கள், ஐந்தாறு மோதிரங்கள், அதற்குள் களவு போய் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. மகாராஜாவின் பெர்ஸனல் கலெக்ஷன்ஸ் என்ற வகையில் பலரக ரிஸ்ட் வாட்சுகள், அலாரம், டைம்பீசுகள், காமிராக்கள், டேப்ரெகார்டர்கள், காஸெட்டுகள் எல்லாம் இருந்தன. மோதிரங்களையும், செயின்களையும் குளியலறையில் கழற்றி வைத்துவிட்டு அதை ஒட்டியிருந்த படுக்கை அறையினுள்ளே தான் திடீரென்று அவர் மாரடைப்பில் காலமானார்.
அவர் காலமான அதிர்ச்சியிலிருந்து மீண்டு எச்சரிக்கை உணர்வோடு உடைமைகளைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யுமுன் அரண்மனைக்குள்ளேயே திருடர்கள் திருடிகள் உருவாகி அவரவர்களால் முடிந்த பொருள்களைத் திருடி ஒளித்து விட்டனர்.
ராஜமான்யம் நிறுத்தப்பட்ட சில மாதங்களில் அந்த அரண்மனையில் ஏற்பட்ட பணக் கஷ்டம் சொல்லி மாளாது. அந்தப் பணக் கஷ்டத்தில் மகாராஜாவே சில வேளைகளில் தம்முடைய பொருள்களையே யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக எடுத்துச் சென்று விற்றுப் பணம் பண்ண நேர்ந்திருக்கிறது. இளைய ராணிகள், அவர்களுடைய புதல்வர்கள், மகாராஜாவின் அந்தரங்க ஊழியர்கள் எல்லாருமே அவரவர்கள் பங்குக்கு அரண்மனைப் பித்தளைப் பாத்திரம் முதல் விறகுக் கட்டை வரை பலவற்றை இரகசியமாக விற்றுப் பணம் தேடிக் கொள்வது என்பது வழக்கமாகி இருந்தது.
பெண்கள் ஃபேஸ் பவுடரும், ஷாம்புவும் வாசனைச் சோப்பும் செண்ட்டு ஸ்நோவும், ஹேர் ஆயிலும் வாங்கப் பணம் கிடைக்காமல், டைனிங் டேபிள் சில்வர் வெஸல்ஸ் ஸெட்டுகளிலிருந்து வெள்ளித் தட்டு ஸ்பூன்கள், டம்ளர்கள் என்பது வரை வேலைக்காரிகள் மூலம் உள்ளூர் வெள்ளிக் கடைகளுக்குக் கொடுத்தனுப்பி விற்பது ஓர் இரகசிய வழக்கமாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி இருந்தது.
சட்டப்படி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்குத் தர்மசங்கடமாக இருந்தது. பொருள்களைத் திருடுகிறவர்கள், ஒளித்து வைக்கிறவர்கள், வெளியே இருந்து வந்ததால் போலீஸில் பிடித்துக் கொடுத்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். உள்ளேயே இருக்கிற இரகசியத் திருடர்களை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையைக் கையாளுவதில் அரண்மனையின் கௌரவம் வேறு சம்பந்தப்பட்டிருந்தது. விஷயத்தைப் பகிரங்கமாக்கி எல்லாரிடமும் புகார் செய்தால் அரண்மனையின் கௌரவம் மரியாதை உறவுமுறை எல்லாம் கெட்டுப் போய்விடும். ஒன்றும் செய்யாமலிருந்தாலோ உள்ளே இருந்தவர்களாலேயே தொடர்ந்தும் திட்டமிட்டும் நடத்தப்பட்ட சில்லறைத் திருட்டுக்களால் பொருள்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்விடும் போலிருந்தது.
அரண்மனைக்குள்ளே இருந்த ராஜகுடும்பத்தினரிடமும், அந்தரங்க விசுவாச ஊழியர்களிடமும் இதைப் பற்றிக் கூப்பிட்டுப் பேசவும் முடியாமல் விசாரிக்கவும் முடியாமல் பெரியகருப்பன் சேர்வையின் தாட்சண்ய சுபாவம் வேறு அவரைத் தடுத்தது.
வேறு எந்த நாளிலும் எந்தச் சமயத்திலும் திருட்டுப் போனதை விடப் பெரிய மகாராஜா இறந்த சில மணி நேரங்களில் காரியஸ்தர் உஷாராவதற்குள்ளே பல திருட்டுக்கள் அரண்மனையின் பல பகுதிகளில் நடந்து விட்டன. இதைத் தடுக்கப் போலீஸ் வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்ட பின்னரே போலீஸாரை உள்ளே கூப்பிட்டு அவர்கள் உதவியினால் முக்கிய அறைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்க நேர்ந்தது.
தனசேகரனும், அவன் மாமாவும் வந்து சேர்ந்து இறந்த மகாராஜாவின் காரியங்கள் எல்லாம் முடிந்ததும் “இந்தா! உன் சொத்து. இனிமேல் இவற்றை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு வயசாச்சு. என்னாலே முடியலை. தவிரவும் ராஜமானியமும் நின்னு போனப்புறம் அரண்மனைச் செலவுகள் மிகவும் சிரம ஜீவனமாகப் போச்சு. காரியஸ்தன்னு என்னை மாதிரி ஒருத்தருக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறது இன்னிக்கி இந்த அரண்மனை கஜானா இருக்கிற சிரமதசையிலே இனிமே சாத்தியமில்லே. நான் விலகிக் கொள்கிறேன்” என்று கௌரவமாகச் சொல்லிவிட்டே விலகிக் கொள்ளலாமென்று நினைத்தார் பெரியகருப்பன் சேர்வை. மகாராஜாவின் உயில் விவரம் எல்லாம் வேறு ஏற்கெனவே ஒரு வருஷத்துக்கு முன்னால் அவருக்கு முதல் ‘ஹார்ட் அட்டாக்’ வந்த போது எழுதினவை. ‘சீல்’ செய்யப்பட்ட உறைகளில் பெரிய கருப்பன் சேர்வையிடம் பத்திரமாக இருந்தன. போக இச்சையினாலும், சமஸ்தானமாக இருந்த காலத்து வழக்கப்படியும் அப்போதிருந்த செல்வச் செழிப்பு என்கிற மதிப்பினாலும் இளையராணிகள் என்கிற நாசூக்கான பெயரில் காலஞ்சென்ற மகாராஜா அரண்மனைக்குள் சேர்த்துக் கொண்ட எண்ணற்ற வைப்பாட்டிகள் கூட்டமும் அவர்கள் வாரிசுகளும் பேரன் பேத்திகளும் காரியஸ்தருக்கு அரண்மனை நிர்வாகத்துக்கும் பெரிய தலைவலியாயிருந்தார்கள். பின் நாட்களில் மகாராஜாவுக்குச் சினிமா நட்சத்திரங்களின் மேல் கவனம் விழுந்து விட்டதால் அந்தப்புரத்துப் பெண்கள் பக்கம் அவர் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அரண்மனை வருமானம் குறையக் குறைய இந்த அந்தப்புரப் பெண்களும், இவர்களுடைய வாரிசுக் கூட்டமும் தேவையில்லாத, ஆனால் கைவிடவும் முடியாத பெரிய சுமைகளைப் போல அரண்மனை நிர்வாகத்தை உறுத்தினார்கள். அவர்களுக்கு ஆடம்பரத் தேவைகள் இருந்தன. ஒவ்வொருத்தியும் ஒரு புடவையை நானூறு, ஐநூறு ரூபாய்க்குக் குறைவில்லாத வகையில் தான் கட்ட விரும்பினாள். விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் தவிர வேறு மலிவான துணிப் புடைவைகளை அவர்கள் தொடுவதேயில்லை. சோப்பு, வாசனைப் பவுடர், ஷாம்பு இவையெல்லாம் அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தால் கூடப் போதாது என்கிற அளவிற்குச் செலவழிந்தன. ராஜமானியம் நின்று பணத்தட்டுப்பாடு வந்த பின்னர் முதல் முறையாகக் கடந்த நாலைந்து மாதங்களில் பீமநாதபுரம் பஜாரில் உள்ள பெரிய ஜவுளிக்கடை, பெரிய நகைக் கடை, பெரிய ஷாப் எல்லாவற்றிலும் அரண்மனைக் கணக்கில் ஆயிரம் ஆயிரமாகக் கடன் பாக்கி நிற்கத் தொடங்கியது.
ஓர் எல்லைக்கு மேல் போகவே கடைக்காரர்கள் மேற்கொண்டு கடன் தருவதற்குக் கூடத் தயங்கினார்கள். துணிந்த சிலர் மகாராஜாவையே நேரில் போய்ப் பார்த்துத் தயங்கித் தயங்கி, “பாக்கி ரொம்ப நிற்குதுங்க. ஏதாவது கொஞ்சமாச்சும் கொடுத்தால் தான் மேற்கொண்டு கடன் தரலாம்” என்று கேட்கக் கூட ஆரம்பித்து விட்டார்கள்.
பீமநாதபுரம் மகாராஜா மாரடைப்பால் காலமான மறுதினம் பகலில் சென்னை விமான நிலையத்துக்குக் கார் அனுப்பி விட்டு அரண்மனை அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது பெரிய கருப்பன் சேர்வை இந்தப் பிரச்னைகளை எல்லாம் மாற்றி மாற்றி நினைவு கூர்ந்தார். மகாராஜாவின் முறையான வாரிசும் ஒரே புதல்வருமான தனசேகரன் இவற்றையெல்லாம் எப்படிச் சமாளிக்கப் போகிறானோ என்று அவருக்குக் கவலையாக இருந்தது. கவலையில்லாமல் தாய்மாமனுடைய அரவணைப்பில் ஈபோவில் இருந்த அவன் இனிமேல் இங்கு வந்து படவேண்டிய கவலைகளை எண்ணி அவன் மேல் பெரிய கருப்பன் சேர்வைக்கு அனுதாபம் கூட ஏற்பட்டது.
“பிணத்துக்குப் பின்னாலே மயானம் வரை காசு வாரி இறைக்கணும். அது இந்த சமஸ்தானத்தில் வழக்கம். மூணு தலைமுறைக்கு முன்னே இவரோட அப்பாவுக்கு அப்பா காலமானப்போ நாலு ராஜ வீதியிலேயும் பொற் காசுகளை வாரி எறைச்சாங்களாம். இப்போ அது முடியாட்டியும் ரெண்டு நயா பைசா ஒரு நயா பைசாவாவது மாற்றி இறைச்சாகணும்” என்று காரியஸ்தரை உள்ளே கூப்பிட்டுத் தகவல் சொன்னாள் அங்கிருந்தவர்களில் சற்றே வயது மூத்த ஓர் இளையராணி.
“ராத்திரி இளையராஜா தனசேகரனும் அவங்க மாமாவும் வந்துடறாங்க. எல்லாத்தையும் அவங்கள்ளாம் வந்தப்புறம் அவங்ககிட்டவே சொல்லுங்க. அவங்க இஷ்டப்படி எது தோதோ அதைச் செய்யட்டும்” என்றார் காரியஸ்தர்.
அந்த அரண்மனை முகப்பில் மகாராஜாவின் பிரேதத்தை மட்டும் மக்களின் பார்வைக்காக வைத்திருந்தார்கள். ஆனால் பார்வைக்குத் தெரியாமல் அரண்மனையின் பெரிய மதில்களுக்குள்ளே இருந்த கடன் பத்திரை நகல்களும், கடைகளின் நினைவூட்டும் கடிதங்களும் ஏராளமாக இருந்தன. பல செலவுகளைச் சமாளிப்பதற்கே தனசேகரனும், மாமாவும் வந்த பின்பு அவர்களைக் கேட்டுத்தான் வழி செய்ய வேண்டும் என்று பெரிய கருப்பன் சேர்வை காத்துக் கொண்டிருந்தார். வந்ததும் வராததுமாகத் தனசேகரனிடமும் அவனுடைய தாய்வழி மாமனிடமும் அரண்மனை ஏறக்குறையத் திவாலான நிலைமையில் இருப்பதைச் சொல்வதற்கு நேர்கிறதே என்பதை எண்ணிய போது காரியஸ்தரின் மனதுக்குக் கஷ்டமாகவும் தயக்கமாகவும் தான் இருந்தது. இன்று இந்த அரண்மனை இப்படிப் பண வறட்சியில் சிக்கியதற்குக் காலஞ்சென்ற மகாராஜாவும், அவருடைய துர்ப்போதனையாளர்களும் தான் முழுக்க முழுக்கக் காரணமே ஒழியத் தனசேகரன் காரணமில்லை. இந்த விஷயத்தில் அவன் மேல் அப்பழுக்குச் சொல்ல முடியாது என்பது எல்லாம் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது. ஒரு வேளை தனசேகரன் மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போகாமல் இங்கேயே உடனிருந்து பெரிய மகாராஜாவையும், அரண்மனைச் செலவுகளையும் கட்டுப்படுத்திக் கண்காணித்திருந்தால் இவ்வளவு மோசமாகி இருக்காதோ என்னவோ என்று கூடக் காரியஸ்தருக்குத் தோன்றியது. தனசேகரனுக்கு வீண் டாம்பீகமும், ஆடம்பரச் செலவுகளையும் பிடிக்காது என்பது காரியஸ்தருக்குத் தெரியும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடே அதில் தான் ஆரம்பமாகி முற்றியது என்று கூட அவர் அறிந்திருந்தார். சமஸ்தானாதிபதியின் மூத்த மகன், இளையராஜா என்றெல்லாம் பேர்கள் தடபுடலாக இருந்த போதிலும் தனசேகரன் மலேசியா புறப்படுவதற்கு முந்திய தினம் வரை இரயிலில் சாதாரண இரண்டாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பீமநாதபுரம் ஊருக்குள் கடை வீதிக்கோ, லைப்ரரிக்கோ - அவை மிக அருகிலிருக்கின்றன என்ற காரணத்தால் நடந்து தான் போய்க் கொண்டிருந்தான். மகாராஜா எத்தனையோ முறை நேரில் கூப்பிட்டுத் திட்டியும், இரைந்து கண்டித்தும், அவன் அதைக் கேட்கவில்லை.
“நமக்கு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குடா! ‘இன்ன சமஸ்தானத்து யுவராஜா காசில்லாமே ஸெக்கண்ட் கிளாஸ்ல போறான். தெருவிலே அநாதைப் பயல் மாதிரி நடந்து போறான்’னெல்லாம் நான் உயிரோட இருக்கிறப்பவே உன்னைப் பற்றி என் காதிலே விழப்படாது” என்று தனசேகரனைச் சத்தம் போட்டும் இருக்கிறார். ஆனால் அந்தச் சத்தத்தையும் கூப்பாட்டையும் தனசேகரன் பொருட்படுத்தியதே இல்லை. சமஸ்தான அந்தஸ்துப் போன பிறகும் மகாராஜா செய்த ஆடம்பரங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாகக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தை சினிமா எடுக்கக் கிளம்பியது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.
சொல்லிப் பார்த்து அவரை ஒன்றும் திருத்தி விட முடியாது என்று தோன்றவே தனசேகரன் தன்னளவில் ஒதுங்கி விட முயன்றான். அந்தச் சமயம் பார்த்து மலேயாவிலிருந்து ஊர் வந்திருந்த அவனுடைய தாய்வழி மாமன் தன்னோடு அக்கரைச் சீமைக்கு அவனைக் கூப்பிடவே அவனும் மறு பேச்சுப் பேசாமல் அவரோடு புறப்பட்டு விட்டான்.
அதன் பின்னால் இரண்டாண்டுகள் வரை அவன் ஊர்ப்பக்கமாக எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இப்போதுதான் தந்தை காலமான பின் முதன் முதலாக ஊர் திரும்பினான் தனசேகரன்.
இரவு எட்டு மணிக்குச் சென்னையிலிருந்து காரியஸ்தருக்கு ஃபோன் வந்தது. தனசேகரனும் மாமாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து காரில் ஊருக்குப் புறப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவித்தார்கள் வேண்டியவர்கள். அவர்கள் கார் நள்ளிரவு ஒன்றரை அல்லது இரண்டு மணிக்குப் பீமநாதபுரம் வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
____________________________________________________________
கற்சுவர்கள்
2
தனசேகரனும், மாமா தங்கபாண்டியனும் கோலாலம்பூரிலுள்ள சுபாங் இண்டர் நேஷனல் விமான நிலையத்தில் புறப்பட்டு கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது மாலை 4 மணி. கொழும்பிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் விமான நிலையமாகிய இரத்மலானை விமான நிலையமோ நகரின் மற்றொரு கோடியில் இருந்தது. சர்வதேச விமான நிலையமாகிய கட்டுநாயகவில் இருந்து ஒரு டாக்சியில் ‘இரத்மலான்’வுக்கு விரைந்து, அங்கிருந்து அவசர அவசரமாகச் சென்னை செல்லும் விமானத்தைப் பிடித்துப் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள்.
கொழும்பில் விமானம் வேலெழுந்து பறந்த போது ஏதோ குடும்ப விஷயத்தைப் பற்றி தனசேகரனிடம் பேச ஆரம்பித்தார் மாமா.
“கடைசி ரெண்டு வருசத்திலே உங்கப்பா இருந்த சவரணையைப் பார்த்தா அநேகமாச் சமஸ்தானத்துச் சொத்தை எல்லாம் சீரழிச்சிருப்பாரு. சும்மாக் கெடக்காம காலங் கெட்ட காலத்திலே அவருக்குச் சினிமாப் படம் எடுக்கற பைத்தியக்கார ஆசை வேற வந்து தொலைச்சிருந்தது.”
“நீங்க சொல்றதுதான் சரியாயிருக்கும் மாமா! உருப்படியா ஒண்ணும் இருக்காது. அரண்மனைக் கோட்டை மதில் சுவரைத் தவிரப் பாக்கி அத்தனையையும் வித்திருப்பாரு. அல்லது அடகு வச்சிருப்பாரு. எதுக்கும் இப்போது நீங்க என் கூடப் புறப்பட்டு வந்ததாலே எனக்கு நிம்மதி...”
“வந்துதானே ஆகணும் தம்பீ! உயிரோட இருந்தப்ப எனக்கும் அவருக்கும் ஒத்துக்காதுன்னாலும் சொந்த மச்சினரு சாவுக்குக் கூட வரலேன்னு நாளைக்கு ஒருத்தன் குறை சொல்ல இடம் வச்சுடப் பிடாது பாரு. ஆயிரம் மனஸ்தாபம் இருக்கலாம். உங்கப்பா கெட்டவராவே இருந்திருக்கலாம். குடும்பத்துக்குள்ளார ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கப்படுமா?” என்றார் மாமா தங்க பாண்டியன். அவரும் அவனும் பேச ஆரம்பித்த குடும்ப விஷயங்கள் ஒரு முடிவுக்கு வராமல் அநுமார் வால் மாதிரி நீண்டு கொண்டு போகவே விமானம் அதற்குள் சென்னை மீனம்பாக்கம் நிலையத்தில் தரையிறங்கிவிட்டது.
தனசேகரனிடமும் சரி, அவனுடைய மாமா தங்க பாண்டியனிடமும் சரி, ஆளுக்கு ஒரு ‘சூட்கேஸ்’ மட்டுமே லக்கேஜ் என்ற பெயரில் இருந்தன. அதனால் பாஸ்போர்ட் எண்ட்ரி, கஸ்டம்ஸ் செக்கிங் ஆகிய காரியங்கள் மிகச் சுருங்கிய நேரத்திலேயே முடிந்து விட்டன.
அவர்கள் விமான நிலையத்தில் சர்வதேசப் பரிசோதனைப் பிரிவிலிருந்து லவுஞ்ஜுக்கு வரும் முதல் வாயிலில் அடி எடுத்து வைத்ததுமே சில உறவினர்களும் பீமநாதபுரத்திலிருந்து காருடன் தயாராக வந்து காத்திருந்த டிரைவரும் அவர்களை எதிர்கொண்டார்கள்.
யாருடனும் நின்று பேச அவர்களுக்கு நேரமில்லை. வந்திருந்த உறவினர்களிடம் சொல்லி உடனே பீமநாதபுரத்துக்கு டெலிஃபோன் மூலம் தாங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஊருக்குக் காரில் புறப்பட்டு விட்டதாகத் தகவல் தெரிவிக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள். கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது இரவு மணி எட்டேமுக்கால்.
“பசிக்குதா தம்பி? ஏதாவது சாப்பிடறியா? நாளைக் காலையிலே பத்துப் பன்னிரண்டு மணி கூட ஆகும். மயானத்திலிருந்து அரண்மனைக்குத் திரும்பற வரை பச்சைத் தண்ணி கூட வாயிலே ஊத்த முடியாது” என்று மாமா ஆறுதலான குரலில் தனசேகரனை விசாரித்தார்.
“மனசு சரியாயில்லே, ஒண்ணுமே வேண்டாம் மாமா.”
“அடச் சீ!... போன மனுஷன் ஒண்ணும் நீ பட்டினியிருக்கேங்கிறதுக்காகத் திரும்பி வந்து சேர்ந்துடப் போறதில்லே. வயித்தைக் காயப் போடாதே. எனக்குத் தெரியாதா உன் சங்கதி? எத்தினி ராத்திரி ஈபோவிலேயிருந்து பினாங்குக்கோ, கோலாலம்பூருக்கோ போயிட்டுத் திரும்பறப்போ, வழியிலே ரெண்டு மூணு சீனன் கடையிலாவது காரை நிறுத்தி மீ கோரேங்கையும், கருப்புத் தேத்தண்ணியும் குடிச்சாத்தான் ஆச்சுன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கே நீ? இன்னிக்கு மட்டும் பசிக்காமப் போயிடுமா என்ன? ஏய் டிரைவர்! வண்டியை ஓரமா நிறுத்திப் போட்டுக் கொஞ்சம் ‘பிரட்’டும் பிஸ்கட்டும் வாழைப்பழமும் வாங்கிட்டு வா சொல்றேன்” என்று தனசேகரின் பதிலுக்குக் காத்திராமலே தானாகவே கார் டிரைவருக்கு உத்தரவிட்டார் மாமா தங்கபாண்டியன்.
டிரைவர் அவர் சொன்னபடி காரை மெயின் ரோட்டில் இடது பக்கம் ஓரமாக நிறுத்தி விட்டு ரொட்டி, பிஸ்கட், வாழைப்பழத்தோடு சொல்லாவிட்டாலும் இருக்கட்டும் என்று தமிழில் இரண்டும், ஆங்கிலத்தில் ஒன்றுமாகச் சாயங்கால நியூஸ் பேப்பர்கள் மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தான்.
“சபாஷ்! நியூஸ்பேப்பர் வேற வாங்கியாரச் சொல்லணும்னு நினைச்சேன். சொல்றப்ப மறந்துட்டேன். நீயாவே வாங்கியாந்துட்டே. நல்ல காரியம் பண்ணினே அப்பா” என்று டிரைவரைப் பாராட்டிக் கொண்டே பத்திரிகைகளை வாங்கிக் கொண்டார் மாமா.
“தம்பீ! பிரட்-பிஸ்கட் வாழைப்பழம் எல்லாம் வாங்கி வண்டியிலே வச்சிருக்கேன். பசிக்கிறப்போ சொல்லு, சாப்பிடலாம்” என்று தனசேகரனிடம் கூறிவிட்டு நியூஸ் பேப்பரின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களை மட்டும் காரின் உட்புறமிருந்த விளைக்கைப் போட்டுக் கொண்டு அந்த வெளிச்சத்தில் படிக்க முயன்றார் மாமா.
தமிழ் மாலைத் தினசரிகளில் எல்லாம் முதல் பக்கத்திலேயே தலைப்பில் இல்லாவிட்டாலும் சற்று கீழே தள்ளி ‘பீமநாதபுரம் ராஜா மாரடைப்பில் காலமானார்’ என்று பெரிதாகத் தலைப்புக் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ஆங்கிலத் தினசரியில் மட்டும் அதை மூன்றாம் பக்கத்தில் கீழ்க்கோடியில் மரண அறிவிப்புப் பகுதியில் முதல் அயிட்டமாக வெளியிட்டு இருந்தார்கள்.
தமிழ்ப் பத்திரிகைகளில் அந்தக் கார் வெளிச்சத்தில் படிக்க முடிந்த மாதிரி இருந்த பெரிய எழுத்துச் செய்திகளையும் தலைப்புக்களையும் வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்த மாமா, ‘நடிகர்களும் நடிகைகளும் திரைப்பட முக்கியஸ்தர்களும் முதுபெரும் டைரக்டர் கோமளீஸ்வரன் தலைமையில் பீமநாதபுரம் விரைகிறார்கள்’ என்று படித்துவிட்டு அவ்வளவில் அந்தப் பேப்பரைப் படிப்பதை நிறுத்திவிட்டுத் தனசேகரன் பக்கமாகத் திரும்பி, “தம்பி! இந்தக் கோமளீஸ்வரன் யாரு தெரியுமில்லே? நான் இவன் பேரை வேணும்னே உங்கப்பா கிட்டப் பேசறப்பக் கூடக் கோமாளீஸ்வரன்னுதான் சொல்வேன். இவன் தான் உங்கப்பாவைச் சினிமா லயன்லே கொண்டு போய்க் கவுத்து விட்ட பயல். இவன் பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தான் அவரு உங்கம்மா செத்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ளே அந்த ஜெயநளினி பேருக்கு லட்ச ரூபாயிலே அடையாறிலே வீடு வாங்கி வச்சாரு... இந்த பயலைப் பார்த்தா அரண்மனைத் தோட்டத்திலே ஒரு தென்னை மரத்திலே கட்டி வச்சு உதை உதைன்னு உதைக்கணும், அப்பத்தான் என் கோபம் எல்லாம் ஆறும்” என்றார்.
“இவரு, தானா வலுவிலே போயிக் காஞ்ச மாடு கம்புலே விழுந்த கதையாக் கெட்டுப் போனாருன்னா அதுக்கு அவன் என்ன பண்ணுவான் மாமா? அவனைப் போல் இருக்கிறவன் கொடுக்கிறதுக்கு யாராவது பசையுள்ள ஆள் சிக்கறானா இல்லியான்னு தேடிக்கிட்டுத்தான் இருப்பான். கெட்டுப் போகிறவன் மேலே கொஞ்சங் கூடக் கோபிக்காம கெடுக்கிறவனைக் கட்டிவச்சு உதைக்கப் போறேன்கிறது என்ன நியாயம்?”
“அது சரி தம்பி, ஆனால் கெட்டுப்போனவருதான் இப்போ உலகத்தை விட்டே புறப்பட்டுப் போயிட்டாரே? அவரை இனிமே என்னா செய்யமுடியும்?”
“அவரு காலம் முடியற வரை அவர் யார் சொல்லியும் திருந்தத் தயாராயில்லே. நீங்க கூடத்தான் எவ்வளவோ சொன்னீங்க. மீதமிருக்கிறதைக் கன்ஸாலிடேட் பண்ணி ஊட்டியிலியோ, கொடைக்கானலிலேயோ அல்லது மைசூர் ஸ்டேட்ல சிக்மகலூரிலேயோ எஸ்டேட் வாங்கிப் போடலாம்னீங்க. அவரு எங்கே கேட்டாரு? சமஸ்தானம், சமஸ்தானம்னு ராஜாப் பட்டம் போட்டு அழைக்கிற சோம்பேறிகளை எல்லாம் நம்பியே குட்டிச் சுவராப் போனாரு!”
“அதுமட்டுமில்லே! நான் எவ்வளவோ தலையிலே அடிச்சுக்கிட்டேன். உங்க காலம் மாதிரி எல்லாம் இனிமே எதிர்காலம் இருக்காது. அந்தப்புரத்திலே மந்தை மாதிரி இளையராணிங்கங்கற பேர்ல அடைச்சுப் போட்டிருக்கிற பொம்பளைங்களை வெளியே பத்தி விட்டுடுங்க. இல்லாட்டி அவங்க மக்கள், பேரன், பேத்திகள் எல்லாரையும் கட்டி மேய்ச்சுப் படிக்க வச்சுத் துணிமணி வாங்கிக் குடுக்க இந்த அரண்மனையைப் போலப் பத்து அரண்மனையை வித்தாக் கூடக் காணாதுன்னேன், கேட்கலை. இப்போ அவங்களையும் அவங்க வம்சாவளிங்களையும் பத்தி விடறதுக்கும் துரத்தறதுக்கும் வீணாகச் சின்னப் பையன் நீ சங்கடப்படணும்...”
“நாம எங்கே அவங்களைத் துரத்திவிடறது? அவங்க நம்மைத் துரத்தி விடாமே இருக்கணுமேங்கறதுதான் மாமா இப்போ என் கவலை?” என்றான் தனசேகரன். கார் டிரைவர் தங்கள் உரையாடலை எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறான் என்பதை இருவருமே நினைவு வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலஞ்சென்ற மகாராஜாவை மதித்ததை விட அந்த டிரைவர் தன்னையும் தனசேகரனையும் அதிகமாக மதிப்பது மாமா தங்கபாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். கடைசிக் காலங்களில் அவன் மகாராஜாவின் நடத்தைகள் பிடிக்காமல், “சமஸ்தான வேலைன்னா கௌரவம்கிற காலம் மலையேறிப் போச்சுங்க. இவரு கண்ட சினிமாக்காரிங்க வீட்டிலே எல்லாம் போய்க் காத்துக் கிடக்க ஆரம்பிச்சுட்டாருங்க. நானும் உங்க கூட மலேசியாவுக்கே வந்துடறேனுங்க. அங்கே எஸ்டேட்லே ஏதாவது டிரைவர் வேலை போட்டுக் கொடுங்க போதும். மானமாப் பிழைக்கலாம்” என்று தங்க பாண்டியன் ஊர்ப்பக்கம் வந்து திரும்பும் போதெல்லாம் அவரிடம் இந்த டிரைவர் பலமுறை கெஞ்சியிருக்கிறான். அதனால் சிறிது நேர உரையாடலுக்குப் பின் இந்த டிரைவரையே தங்கள் பேச்சில் கலந்து கொள்ளச் சொல்கிறார் போன்ற கேள்வி ஒன்றை அவனிடமே கேட்டார் மாமா தங்க பாண்டியன்.
“என்ன ஆவுடையப்பன்? நாங்க பேசிக்கிறதை எல்லாம் கேட்டுக்கிட்டுத்தானே வர்றே? மகாராஜா காலமானப்போ அரண்மனை நெலைமை எப்படி? கஜானா நிலைமை எப்படி? காரியஸ்தர் சேர்வை என்ன சொல்றாரு?”
“எல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் வரேன் சார்? வந்து இறங்கினதும் இறங்காததுமா உங்க மனசையும் சின்ன ராஜா மனசையும் கஷ்டப்படுத்தற மாதிரி விஷயமாச் சொல்ல வேண்டியிருக்கேன்னு தான் வருத்தமா யிருக்குங்க...”
“அதுக்கு நீ என்னப்பா பண்ணுவே? நடந்திருக்கிற விஷயத்தைத் தானேப்பா நீ சொல்ல முடியும்? எங்க மனசு கஷ்டப்படாமே இருக்கணும்கிறதுக்காக நடக்காதைதை இட்டுக் கட்டிச் சொல்லவா முடியும். செத்துப் போன மகாராஜா பிழைச்சு உயிரோட வந்துட்டதாகச் சொல்லுவியா? அல்லது அரண்மனை கஜானாவிலே ஐம்பது கோடி ரூபாய் எப்பிடிச் செலவழிக்கிறதுன்னு தெரியாமக் குவிஞ்சு கெடக்கு சார்னு பொய் சொல்வியா? நிஜமா நடந்ததைத் தானே நீ சொல்ல முடியும்? நிஜமா நடந்தது எல்லாம் கசப்பாவும் கஷ்டமாவுந்தான் இருக்கும். நீ பயப்படாமே நடந்ததைச் சொல்லிகிட்டு வா ஆவுடையப்பன்! எங்க மனசு ஒண்ணும் அதைக் கேட்டுக் கஷ்டப்பட்டுடாது. மனசுக்கு நல்ல ‘ஷாக் அப்ஸார்பர்’ போட்டு ஆடாம அதிராம வச்சுக்கிட்டிருக்கோம் நாங்க. கவலைப்படாமச் சொல்லு நீ” என்றார் மாமா.
“மகாராஜா காலமான அன்னிக்கே அரண்மனைக் குள்ளாரப் பலதும் பலவிதமா நடந்து போச்சுங்க. அரண்மனைக் காரியஸ்தர் உஷாராகிச் சுதாரிச்சுக்கிட்டுப் பெரிய ராஜாவோட டிரஸ்ஸிங் ரூம், படுக்கை அறை, அலமாரிகள், பீரோக்கள் எல்லாத்தையும் பூட்டி சீல் வைக்கிறதுக்குள்ளேயே நிறையத் திருட்டுப் போயிட்டதுங்க. கடைசியிலே கூட அரண்மனைக்குள்ளாரப் போலீஸைக் கூட்டியாந்துதான் சேர்வைக்காரரு எல்லாத்தையும் பூட்ட முடிஞ்சிச்சு!”
“திருடினவங்க யாரா இருக்கும்னு நெனைக்கிறே ஆவுடையப்பன்?”
“வேற யாரு? வெளியில் இருந்தா அரண்மனைக்குள்ளாரத் திருடிப் போட்டுப் போகணும்னு ஆட்கள் வரப் போறாங்க? எல்லாம் உள்ளேயே இருக்கிறவங்க செஞ்ச வேலை தான். அகப்பட்ட வரை சுருட்டிக்கிட்டது மிச்சம்னு சுருட்டிக்கிட்டாங்க. பெரிய ராஜாவோட பிரதேதத்தை முகப்பிலே ராஜராஜேஸ்வரி ஹால்லே கொண்டாந்து ஐஸ் அடுக்கிப் பொதுமக்களோட பார்வைக்கு வச்சிட்டுக் காரியஸ்தர் மறுபடி உள்ளே திரும்பிப் போறதுக்கு முன்னே ஒரு பெரிய தீவட்டிக் கொள்ளையே அடிச்ச மாதிரி சாமான்கள் பறிபோயுடிச்சி...”
“உங்க பெரிய ராஜா ஏதாச்சும் கொஞ்சமாவது வச்சிட்டுப் போயிருக்காரா ஆவுடையப்பன்?”
“என்னத்தை வச்சிருக்க விட்டிருக்கப் போறாங்க? எல்லாத்தையுந்தான் சினிமாக்காரிகள் உறிஞ்சியிருப்பாங்களே! நிறையக் கடனைத்தான் வச்சிருப்பாரு!”
“கேட்டுக்கோ தம்பி! உனக்குத்தான், உங்கப்பா எதைச் சேர்த்து வச்சிருக்கார்ன்னு கேட்டியில்லே?”
“ஆவுடையப்பனைக் கேட்டு விசாரிச்சுத்தான் இதைத் தெரிஞ்சுக்கணுமா மாமா? நமக்கே தெரிஞ்சுருக்கிற விஷயம் தானே இது?”
“ப்ரீவீ பர்ஸ் நின்னப்புறம் கூட அவரோட ஊதாரிச் செலவுகளை அவர் நிறுத்தலேன்னு தெரியறது. நல்ல மனுஷனா இருந்தா ராஜமான்யம் நிறுத்தப்பட்டதுக்குப் பின்னாடியாவது திருந்தியிருக்கணும். இவர் அப்பவும் திருந்தலே...”
“இவர் திருந்த மாட்டார் என்ற ஏக்கத்திலேதான் அம்மாவே ஏங்கி ஏங்கிச் செத்துப் போனாங்கங்கறதை மறந்துட்டீங்களா மாமா?”
கார் மதுராந்தகத்தைக் கடந்து திண்டிவனத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
“பெட்ரோ பங்க்லே கடன் சொல்லித்தான் டாங்க ஃபுல் பண்ணிக்கிட்டுப் புறப்பட்டேன் சார். சேர்வை காரரே பெட்ரோல் பங்குக்கு ஃபோன் பண்ணிக் கெஞ்ச வேண்டியதாப் போச்சு. வேறொரு சமயமா இருந்தா அவனும் நிர்த்தாட்சண்யமா மாட்டேன்னிருப்பான். சாவு காரியம்கிறதுனாலே போனாப் போகுதுன்னு சம்மதிச்சான். ஊர்லே ஜவுளிக்கடை, பலசரக்குக் கடை, பூக்கடை, பழக்கடை எல்லாத்திலியும் அரண்மனைக் கணக்கிலே கழுத்து முட்டக் கடன் இருக்கு.”
“அப்போ மகாராஜா, தம்பிக்குக் கழுத்து முட்டக் கடனைத்தான் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்காருன்னு சொல்லு!”
“நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன? எல்லாருக்கும் ஏற்கெனவே தெரிஞ்ச விஷயந்தானுங்களே?”
“கடைசிக் காலத்திலே வீடு வாங்கி வச்சுக் குலாவினாரே; அந்த சினிமாக்காரி அவ இப்போ இங்கே அழ வந்திருக்காளா அப்பா?”
“வராமேயா, பின்னே? அதுதான் சித்தே முந்திப் பேப்பர்லே படிச்சீங்களே; ‘டைரக்டர் கோமளீஸ்வரன் தலைமையிலே நட்சத்திரங்கள் பீமநாதபுரம் விரைகிறார்கள்’னு. எல்லோரும் வந்து ‘கஸ்ட் ஹவுஸ்’ நிறைய டேரா அடிச்சிருக்காங்க சார்.”
“உங்க தாத்தா விஜய மார்த்தாண்ட பீமநாத பூபதி காலமானப்போ பிரிட்டிஷ் கவர்மெண்ட்டோட பிரதிநிதியா டில்லியிலேருந்து வைசிராய் வந்து மலர் வளையம் வச்சாரு. அப்போ நான் சின்னப் பையன். உங்க அப்பா தலையெழுத்து - சினிமாக்காரிகளும், பட்டணத்து நடுத்தெரு புரோக்கர்களும் வந்து மலர் வளையம் வைக்கணும்னு தான் இருக்கு. மரியாதை கௌரவம் இதுக்கெல்லாம் கூடக் கொடுத்து வச்சிருக்கணும் தம்பீ! இவரு கொடுத்து வச்சது இவ்வளவுதான் போலிருக்கு.”
இதற்கு தனசேகரன், பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். மாமா சிறிது நேரம் கண்ணயர்ந்தார். கார் எவ்வளவு வேகமாகப் போனாலும் ஸீட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்த நிலையிலேயே கூட நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்க அவரால் முடியும். தனசேகரனால் அப்படித் தூங்க முடியாது. சுற்றுப்புறத்தில் சிறிய ஓசை ஒளிகளால் பாதிக்கப்பட்டால் கூட அவனுக்குத் தூக்கம் வராது. அவன் தன்னை ராஜபரம்பரை என்றோ பீமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய ராஜா என்றோ நினைப்பது கூட இல்லை. என்றாலும் பல விஷயங்களில் ராஜ துல்லிய குணம் என்று சொல்வார்களே அந்தத் தன்மை அவனிடம் அமைந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவன் செய்வது, தெரிவிப்பது, தெரிந்து கொள்ளுவது எல்லாம் துல்லியமாக இருக்கும்.
தாய்வழி மாமா தங்கபாண்டியனுக்கு தனசேகரன் மேல் அளவற்ற பிரியம். தன் அக்கா மகன் என்ற உறவு முறையையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் நேரடியான ராஜ வாரிசு என்ற கௌரவத்தையும் விட அவனுடைய கம்பீரமான தோற்றமும் எதிலும் அற்பத்தனமே இல்லாத பெருங்குணமும் அவரைக் கவர்ந்திருந்தன. நல்ல பழகும் முறைகளும் சிரித்த முகமும் தனசேகரனின் இயல்புகளாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனசேகரனின் தன்னடக்கத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யார் யாரோ புதுப்பணக்காரர் விட்டுப் பிள்ளைகள் எல்லாம் பணத் திமிரினாலும் செருக்காலும் மண்டைக் கனம் பிடித்து அலைகிற இந்த நாளில் தனசேகரின் தன்னடக்கம் பலரை ஆச்சரியப்பட வைத்தது.
மாமா தங்கபாண்டியன் பீமநாதபுரம் சமஸ்தானாதிபதியை விடப் பெரிய பணக்காரர் என்பதும் மலேசியாவில் ‘டத்தோ’ சிறப்புப் பட்டம் கொடுத்துக் கௌரவிக்கப்பட்ட பொது வாழ்க்கைப் பிரமுகர் என்பதும் அவரோடு வந்து தங்கியிருந்த மருமகன் தனசேகரனுக்கும் செல்வாக்கை அளிக்கத்தான் செய்தன, என்றாலும் அப்படி ஒரு செல்வாக்கைத் தான் அண்டியிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எல்லாரிடமும் எளிமையாகவும் வித்தியாசமின்றியும் மலர்ந்த முகத்தோடும் பழகினான் தனசேகரன்.
டத்தோ தங்கபாண்டியன் தம்முடைய மூத்த மகளைத் தனசேகரனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாகத் தம் அக்காவும் காலஞ்சென்ற பீமநாதபுரம் மூத்த ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாளுக்கும் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை காலஞ்சென்ற பீமநாதபுரம் மகாராணிக்கு அப்படி ஒரு வாக்கைக் கொடுத்திரா விட்டாலும் கூடத் தம்முடைய மகளுக்குத் தனசேகரனை விடப் பொருத்தமான வேறு ஒரு மாப்பிள்ளையை டத்தோ தங்கபாண்டியனால் தேர்ந்தெடுக்க முடியப் போவதில்லை.
விழுப்புரம் தாண்டியதும் மாமா தங்கபாண்டியன் தூக்கம் கலைந்து காரில் கண் விழித்தார்.
“ஏனப்பா ஆவுடையப்பன், வண்டியிலே கூஜா நிரையக் குடிதண்ணீர் எப்பவும் வச்சிருப்பியே; இருக்கா?”
“இருக்குங்க! பின்னாடி உங்க காலடியிலே ஒரு பிளாஸ்டிக் கூடையிலே கூஜா நிறையப் பச்சைத் தண்ணி, பிளாஸ்கிலே வெந்நீர் எல்லாம் இருக்கு சார்!”
“என்ன தம்பீ! இன்னுமா உனக்குப் பசிக்கலே? ஊர் எல்லைக்குள்ளார நுழைஞ்சிட்டா நீ சாப்பிட முடியாது. இப்பவே ஏதாச்சும் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டாத்தான் நல்லது தம்பி! இந்தா, எடுத்துக்க...” என்று ரொட்டிப் பொட்டலத்தில் ஒரு பகுதியையும், இரண்டு வாழைப் பழங்களையும் தனசேகரிடம் எடுத்து நீட்டினார் மாமா தங்கபாண்டியன்.
கார் போய்க் கொண்டிருக்கும் போதே பத்து நிமிஷத்தில் அவர்கள் உணவு முடிந்து விட்டது. மீது ரொட்டியையும் பிஸ்கட்களையும் வாழைப்பழங்களையும் எடுத்து டிரைவரிடம் கொடுத்து, “இன்னிக்கி நீயும் இதைத் தான் சாப்பிடு ஆவுடையப்பா! வேறே எதாச்சும் ‘ஹெவியா’ சாப்பிட்டா தூக்கம் வந்தாலும் வந்துடும். அகாலத்தில் காரை ஓட்டிக்கிட்டு ‘லாங் டிஸ்டன்ஸ்’ போறப்பக் குறைவாச் சாப்பிடுறதுதான் நல்லது” என்றார் தங்கபாண்டியன்.
“ஒண்ணும் சாப்பிடாட்டிக் கூட பரவாயில்லீங்க. எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பாங்க. உங்க ரெண்டு பேரையும் சீக்கிரமா ஊர்லே கொண்டு போய்ச் சேர்த்துடணும்.”
“அப்படிச் சொல்லாதே! முதல்லே சாப்பிட்டுக்கோ. ஓரமா வண்டியை நிறுத்தி வவுத்துப் பாட்டை முடி. அப்புறம் போகலாம்” என்று தங்கபாண்டியன் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.
டிரைவர் ஆவுடையப்பன் ரொட்டி, பிஸ்கட், வாழைப்பழம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காகக் கீழே இறங்கப் போனான்.
“இந்த இருட்டிலே நீ எங்கே இறங்கிப் போய்ச் சாப்பிடப் போறே? சும்மா முன் சீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுப்பா” என்றான் தனசேகரன்.
“இல்லீங்க... உங்க முன்னாடி எல்லாம் உட்கார்ந்து சாப்பிடறதுக்குக் கூச்சமா இருக்குமுங்க. என்னை என் இஷ்டப்படி விட்டுடுங்க” என்று கீழேயே இறங்கிப் போய் விட்டான் டிரைவர்.
“உங்கப்பாகிட்ட இத்தனை வருஷமா வேலை பார்த்தும் அவரோட கெட்ட குணம் எதுவும் தனக்கு வந்துடாமேயும், தன்னோட நல்ல குணம் எதுவும் அவராலே கெட்டுப் போயிடாதபடியும் தப்பினவன் இவன் ஒருத்தன் தான் தம்பி... இவனைக் கூட அவர் நல்லபடியா வச்சுக்கலே. நடுநடுவே நான் ஊர் வந்து திரும்பறப்ப எல்லாம் இவன் என்னைப் பார்த்து நானும் உங்க கூட மலேசியாவுக்கு வந்திடறேன் சார்னு சொல்லிக்கிட்டிருந்தான். நான் தான் ‘தெரிஞ்சவங்களுக்குள்ளே வீண் மனஸ்தாபம் வேண்டாமப்பா! நீ இங்கேயே இரு. செலவுக்கு வேணா அப்பப்போ ஏதாவது வாங்கிக்கோ’ன்னு நூறு அம்பதுன்னு குடுத்துக்கிட்டிருந்தேன்” என்றார் மாமா.
“எங்கப்பாவுக்கு விசுவாசம், நன்றி எல்லாம் பிடிக்கும். ஆனால் அது பணச் செலவில்லாமே கிடைக்கிற விசுவாசமா இருக்கணும். அவரு யாருக்காகப் பணத்தைத் தண்ணியா வாரி இறைச்சாரோ அவங்களெல்லாம் நன்றி விசுவாசமில்லாதவங்களா இருப்பாங்க. இதோ இந்த ஆவுடையப்பனைப் போல விசுவாசமுள்ள ஏழை எளியவங்களுக்கு அவர் ஒண்ணுமே பண்ணியிருக்க மாட்டாரு மாமா. அதுதான் அவர் வழக்கம்.”
டிரைவர் சாப்பிட்டுவிட்டு வந்து சேர்ந்தான். நிறைய இடங்களில் நெடுஞ்சாலையில் பாலங்கள், ரோடுகளில் ரிப்பேர் இருந்ததால் கரடுமுரடான மாற்று வழிகளில் கீழே இறங்கிக் கார் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே விரைந்து செல்வது தடைப்பட்டது.
முதலில் நினைத்திருந்தபடி நடு இரவு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு மணிக்கு அவர்கள் பீமநாதபுரம் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பது சாத்தியமாகவில்லை. ஊருக்குள் அவர்கள் கார் நுழையும் போது மணி இரண்டே முக்கால். அரண்மனையின் பிரதான வாயிலில் நுழையும் போது மணி மூன்று. எங்கோ கோழி கூடக் கூவி விட்டது. விடியப் போவதற்கு முந்திய குளிர்ந்த காற்றுக் கூட மெல்ல வீசத் தொடங்கி விட்டது. கார், நேரே அரண்மனை இராஜ ராஜேஸ்வரி விலாச ஹாலில் முகப்பில் போய் நின்றது.
எங்கும் ஒரே அமைதி. ஒரே இருட்டு. அங்கங்கே அரண்மனை விளக்குகள் மரங்கள் செடி கொடிகளின் கனமான அடர்த்தியினிடையே மின்மினிகளாய் மினுக்கிக் கொண்டிருந்தன. தொடர்ந்து இரண்டு இராத்திரிகள் கண் விழிப்பு என்பதனால் அங்கங்கே நின்றபடியேயும் உட்கார்ந்தபடியேயும், தூண்களில், சுவர்களில் சாய்ந்தபடியேயும் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். முகப்பில் கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டு முதலில் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அவரைத் தொடர்ந்து அரண்மனை ஊழியர்களும், முக்கியஸ்தர்களும், உறவினர்களும் ஒவ்வொருவராகக் கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றார்கள். அவர்களில் மிகச் சிலர் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் மேல் தங்களுக்கு இருந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காகச் சின்னராஜாவையும் தாய் மாமனையும் பார்த்தவுடன் சிறுபிள்ளைகளைப் போலக் கோவென்று கதறி அழத் தொடங்கியிருந்தனர். தனசேகரனுக்கும் மனசை ஏதேதோ உணர்ச்சிகள் தொட்டன. வருத்தின. ஆனால் அழுகை மட்டும் வரவில்லை. அம்மா இறந்த ஞாபகமும் அதை ஒட்டிய துயர ஞாபகங்களும் தான் மீண்டும் மனத்தில் மேலாக வந்து எழுந்து மிதந்தன.
மாமா தங்கபாண்டியன் மகாராஜாவின் சடலத்தருகே இரண்டு நிமிஷம் நின்று பார்த்துவிட்டு, “இந்தாங்க மிஸ்டர் பெரிய கருப்பன் சேர்வை! இப்பிடி வாங்க, உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணும், ஏற்பாடெல்லாம் எப்படி? என்னென்ன நிலைமை? காலையிலே விடிஞ்சதும் நேரே மயானத்துக்குப் புறப்பட்டுட வேண்டியதுதானே? நாளைக்கு என்ன கிழமை? ராகு குளிகன் பார்த்து எடுக்கிற நேரத்தை முடிவு பண்ணியாச்சா?” என்று சுறுசுறுப்பாக மேலே நடக்க வேண்டிய காரியங்களை விசாரிக்கத் தொடங்கினார்.
சிறிது தொலைவு தனியே சென்றதும் அக்கம் பக்கத்தில் வேறு யாரும் நின்று கேட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின் குரலைத் தணித்துக் கொண்டு “அரண்மனைக் கஜானாவிலே ரொக்கமா எதுவும் இல்லீங்க. ‘அன்று மறுநாள்’ காரியத்துக்கே பணம் கிடையாது. நீங்க வந்ததும் உங்க கிட்டவும் சின்ன ராஜா கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுத் தங்க நகைகள் எதையாவது கொண்டு போய் வச்சுப் பணம் பெற்றுக் கொள்ள அனுமதி வாங்கிச் செய்யலாம்னு இருந்தேன்” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.
“அது அவசியமில்லே! என்னோட மெட்ராஸ் ஆபீஸ் ஆட்களை நானே டெலிபோன்லே சொல்லி மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட்டுக்கு ‘கேஷோட’ வரச் சொல்லியிருந்தேன். அவங்க வந்திருந்தாங்க. பணம் என்ன வேணுமோ எங்கிட்டக் கேளுங்க. நான் தரேன். செலவுலே ஒண்ணும் கஞ்சத்தனம் வேண்டாம். குறைவில்லாமே எல்லாம் நடக்கட்டும். பூமி தானம், கோதானம், சுவர்ணதானம் எதுவுமே விடாமச் செஞ்சுடுங்க. தனசேகரன் சின்னப் பையன். அவனுக்கு ரொம்ப நேரம் பசி தாங்காது. பகல் பன்னிரண்டு மணிக்குள்ளார வாச்சும் எல்லாம் முடிஞ்சிட்டா நல்லது.”
“அதுக்குள்ளே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். இந்தப் பொம்பிளைங்க தான், நாலு ராஜவீதி மட்டும் போதாது, நாலு ரதவீதியையும் சேர்த்து எட்டு வீதியும் சுத்தினப்புறம் தான் பிரேதத்தை மயானத்துக்குக் கொண்டு போகணும்னு கலாட்டா பண்றாங்க. பேரப்பிள்ளைங்கன்னு ஒரு பெரிய பட்டாளத்தைக் கூட்டியாந்து, இவங்க அத்தினி பேரும் நெய்ப்பந்தம் பிடிக்கணும்னு தொந்தரவு பண்றாங்க. நான் சொன்னாக் கேட்க மாட்டேங்கறாங்க...”
“அவங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க. முதல்லே நாளை மத்தா நாளு அத்தினி பேரையும் அடிச்சுப் பத்தி வெளியிலே துரத்தி அரண்மனையை ‘டெட்டால்’ தெளிச்சு சுத்தப் படுத்தியாகணும், என்ன சொல்றீங்க...?”
“அதைப் பெரிய மகாராஜா எப்பவோ செஞ்சிருக்கணுங்க. செஞ்சிருந்தார்னா இன்னிக்கி இந்த அரண்மனை கடன்பட்டு இப்பிடித் திவால் ஆகிற நிலைமைக்கு வந்திருக்காது. நாங்கள்ளாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்... அவர் கேட்கலை” என்றார் சேர்வை. சேர்வையிடம் ரொக்கமாக அவர் கேட்ட தொகைக்கு ஒரு ரூபாய்களாகவும் இரண்டு, ஐந்து, பத்து, நூறு ரூபாய்களாகவும் சில்லறைக் காசுகளாகவும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டுத் தனசேகரனையும் உடனழைத்துக் கொண்டு அரண்மனையின் உட்பகுதிக்குச் சென்றார் தங்கபாண்டியன். அரண்மனை நகைகள் உள்ள கருவூல அறை, மகாராஜாவின் உடைகள் உள்ள அறை, கஜானா அறை, முக்கியமான தஸ்தாவேஜுகள் உள்ள ‘டாக்குமெண்ட்ஸ்’ ரூம், வெள்ளிப் பாத்திரங்கள், பாத்திரங்கள் எல்லாம் உள்ள ஸ்டோர் ரூம் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.
லைப்ரரி, ஐம்பொன் சிலைகள், புராதன ஓவியங்கள், வாகனங்கள் எல்லாம் உள்ள கண்காட்சி சாலை மட்டும் சீல் வைக்காமல் சும்மா பூட்டப்பட்டிருந்தது.
பெண்கள் பகுதியான அந்தப்புரத்திற்குள் அவர்கள் போகவில்லை. ஆனாலும் கண்விழித்து அவர்கள் அரண்மனைக்குள் வருவதை அந்தப்புரத்தில் ஏதோ ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்ட யாரோ ஓர் இளையராணி தூங்கிக் கொண்டிருந்த அத்தனை பேரையும், ‘சின்னராஜாவும் அவரு தாய் மாமனும் வராங்க’ என்று பரபரப்புச் சேதி சொல்லி எழுப்பி விட்டு விட்டாள்.
ஒரு பெரிய பெண் கூட்டம் பல்வேறு வயதுகளில் குழந்தை குட்டிகளுடன் வந்து சூழ்ந்து கொண்டது. சிலர் மகாராஜா இறந்ததற்காக அழுதனர். இன்னும் சிலர் தங்கள் எதிர் காலம் என்ன ஆகுமோ என்று அழுதனர். அவ்வளவு பேரும் தன் தந்தையின் விதவைகளைப் போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவர்கள் மனம் அப்படி எதையும், யாரையும் இழந்து விட்டது போன்ற நிலைமையில் இல்லை என்பது தனசேகரனுக்குத் தெரிந்தது. தங்களை இளையராஜாவுக்குப் பிடிக்காது என்று அதில் பலருக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் சித்திமுறை கொண்டாடித் தனசேகரனைக் கட்டி அழ வந்த சிலரை மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டுத் தடுத்துவிட்டார். “அவன் இந்தக் காலத்துப் பையன்! இந்தக் கட்டியழறதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. தெரியவும் தெரியாது. தயவு பண்ணி அவனை விட்டுடுங்க” என்று அந்தப் பெண் பிள்ளைக் கும்பலிலிருந்து அவனை விடுவித்து மீட்டுக் கொண்டு வந்தார் மாமா.
“நல்ல வேளை மாமா! நீங்க கூட வந்ததாலே பிழைச்சேன்” என்றான் தனசேகரன்.
“சித்தியாவது ஒண்ணாவது? அதிலே பலபேருக்கு உனக்கு அக்கா தங்கை இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஆகியிருக்கிற வயசு கூட இருக்காது. சும்மா பாவலாப் பண்றாங்க. ரொம்ப ஆபத்தான கூட்டம் இது. அப்பா காரியம் முடிஞ்சதும் தலைக்கு ஏதோ ஆயிரம், இரண்டாயிரம் குடுத்தாலும் சரி இவர்களை வெளியே அனுப்பிச்சு வச்சிடனும். இல்லாட்டித் தாங்க முடியாது.”
“அப்பா திவாலானதே இளையராணி இளையராணின்னு இப்படி ஒரு மந்தையை அரண்மனைக்குள்ளே சேர்த்ததாலே தான் மாமா.”
“விட்டுத்தள்ளு தம்பீ! செத்துப் போனவங்க யாரானாலும் அவங்க தெய்வத்துக்குச் சமானம்பாங்க. நல்லவரோ கெட்டவரோ உங்கப்பா போயிட்டாரு. போன மனுஷனோட குறைகளைப் பத்திச் சொல்லிக்கிட்டே இருக்கிறதிலே அர்த்தமில்லே. இதை எல்லாம்பத்தி நீயும் நானும் நாட்கணக்கா, வாரக்கணக்கா, மாதக்கணக்கா, வருஷக்கணக்காகப் பேசி அலுத்தாச்சு. இனிமே நடக்க வேண்டியதைக் கவனிப்போம் வா. நடந்த கதைகளைப் பேசிக்கிறதாலே ஒரு சல்லிக்குக் கூட பிரயோசனமில்லை தம்பி!”
அவர்கள் இருவரும் அரண்மனையிலிருந்து வெளியேறிக் ‘கஸ்ட் ஹவுஸ்’ முகப்பிற்கு வந்ததும் மின்னுகிற சில்க் ஜிப்பாவும் வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளுமாக ஓர் இரட்டை நாடி மனிதர் பெரிய கும்பிடாகப் போட்டுக் கொண்டே எதிரே வந்தார்.
“இதோ எதிரே வர்ரானே, இவன் தான் டைரக்டர் கோமாளீஸ்வரன்! தெரியுமில்லே?”
“தெரியும் மாமா! ஒரு தடவை பார்த்திருக்கேன்.”
கோமளீஸ்வரன் அருகே வந்ததும் மகாராஜாவின் மறைவிற்காக அவர்கள் இருவரிடமும் துக்கம் கேட்டான். அவர்கள் எப்போது, எந்த விமானம் மூலம் சென்னை வந்து பீமநாதபுரத்தை அடைந்தார்கள் என்பதை விசாரித்தான். அப்புறம் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, “காரியங்கள்ளாம் ஆனதும், ‘அவங்க’ சின்ன ராஜாவையும் உங்களையும் ரெண்டு நிமிஷம் தனியே பார்த்துப் பேசணும்னாங்க” என்றான். உடனே மாமாவுக்கு முகம் கடுகடுப்பாக மாறியது.
“அவங்கன்னா யாரு? எனக்குப் புரியலியே?”
“அதான் மகாராஜாவோட ‘இவங்க’, அடையாறிலே இருக்காங்களே...”
“எனக்கு புரியிறாப்ல சொல்லித் தொலைப்பா.”
“ஜெயநளினி அம்மா வந்திருக்காங்க சார்! அவங்க தான் காரியங்கள் முடிஞ்சதும் ரெண்டு நிமிஷம் உங்களைப் பார்க்கணும்னாங்க.”
“எனக்கு அப்பிடி யாரையும் தெரியாதேப்பா” என்றார் மாமா தங்கபாண்டியன்.
______________________________________________________________
கற்சுவர்கள்
3
சினிமா டைரக்டர் கோமளீஸ்வரன் எவ்வளவோ முயன்று சொல்லியும் அவன் கூறிய சினிமா நடிகை ஜெயநளினியைத் தமக்குத் தெரியாதென்று மாமா தங்கபாண்டியன் ஒரேயடியாக மறுத்துவிட்டார்.
“என்னங்க இப்படிச் சொல்றீங்க? நீங்களே இப்படிச் சொல்லலாமா? நீங்களே இப்படிச் சொன்னா என்ன செய்யறதுங்க?” என்று கோமளீஸ்வரன் மேலும் இழுத்த போது மாமா டத்தோ தங்கபாண்டியன், “அட போப்பா நீ! இப்போ எங்களுக்கு இதுதானா வேலை? வேற வேலை இல்லாமலா இப்போ நாங்க சும்மா சுத்திக்கிட்டிருக்கோம். உனக்குக் கட்டாயம் ஏதாவது சொல்லியாகணும்னு இருந்தா நாளைக்கிச் சாயங்காலமா வந்து பேசிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட்டார். தனசேகரன் அந்தக் கோமளீஸ்வரனோடு பேசவே இல்லை. மாமாவுடைய கோபத்தைக் கண்டு பயந்து கோமளீஸ்வரன் மெல்ல விலகிப் போய்விட்டான். அவன் தலை அந்தப் பக்கம் மறைந்ததும், “கொஞ்சம் இடங் கொடுத்தோமோ அட்டை உறிஞ்சற மாதிரி இரத்தத்தை உறிஞ்சிப்பிடுவாங்க கொலைகாரப் பசங்க” என்றார் மாமா.
“அவங்க என்ன பண்ணுவாங்க? எல்லாம் அப்பா கொடுத்த இடம் தானே,” என்று தனசேகரன் சொன்னான்.
“சரி வா தம்பி! எங்கேயாவது கொஞ்ச நேரம் தூங்கலாம். காரியஸ்தர் கிட்டச் சொல்லி அந்த வசந்த மண்டபம் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் கொண்டாரச் சொல்லலாம். அங்கே தான் கொஞ்சம் வெளித் தொந்தரவு இல்லாமே நிம்மதியா இருக்கும்” என்று சொல்லியபடியே அங்கே தென்பட்ட அரண்மனைக் காவலாளி ஒருவனைக் கைதட்டி அருகே கூப்பிட்டார் மாமா. அவன் பயபக்தியோடு அருகே வந்து ஏழடி விலகி நின்று கைகட்டி வாய் பொத்திக் கேட்கலானான்.
“சின்னராஜாவும் அவங்க மாமாவும் கொஞ்ச நேரம் தூங்கணும்னாங்கன்னு அந்த வசந்த மண்டபம் கஸ்ட ஹவுஸ் சாவியைக் காரியஸ்தர் கிட்டக் கேட்டு வாங்கிட்டு வாப்பா” என்று மாமா அவனுக்கு உத்திரவு போட்டார். அவன் சாவியை வாங்கிக் கொண்டு வருவதற்காகக் காரியஸ்தரைத் தேடிக் கொண்டு ஓடினான். சாவி வருவதற்காக வசந்த மண்டபம் ‘கஸ்ட் ஹவுஸ்’ முகப்பில் போய் நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே மிகவும் சுகமானதும், ஓர் அழகிய ஏரிக்கு நடுவில் மைய மண்டபம் போல மரஞ் செடி கொடி சூழ தோட்டத்தினிடையே அமைந்திருப்பதுமான ‘வசந்தகால விருந்தினர் விடுதி’ தான் சிறப்பானது. முதல் தரமானது. ஏரிக்கு நடுப்பகுதியில் உள்ள அந்த மாளிகை வாயில் வரை நடந்து செல்வதற்கும், கார், வாகனங்கள் செல்வதற்கும் பாலம் போல அழகான சிமெண்டுச் சாலை ஒன்றும் இருந்தது. அந்தச் சாலை வழியே பேசிக் கொண்டே நடந்து தான் மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் அப்போது அங்கே வந்திருந்தார்கள்.
பனி நிறைந்த அந்தப் பின்னிரவில் எழுதி வைத்த சித்திரம் போல அந்த வசந்த மண்டப விருந்தினர் விடுதி அமைதியாக இருந்தது.
“சங்கதியைக் கேட்டியா தம்பீ? நீயும் நானும் மலேசியாவிலிருந்து புறப்பட்டு வரலேன்னா ஏதாவது பாத்திரம், பண்டம், நகை நட்டுக்களை அடகு வச்சுத்தான் உங்கப்பாவோட காரியமே நடக்கணும்னாரு சேர்வைக்காரரு. அப்புறம் நான் தான் மெட்ராஸ்லே ஏர்போர்ட்டுக்குக் கொண்டாரச் சொல்லி வாங்கியாந்த எமவுண்ட்லேருந்து கொஞ்சம் கேஷ் எடுத்துக் குடுத்திருக்கேன்” என்று மாமா உள்ள நிலைமையைத் தனசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“மாமா! எதுக்கும் கொஞ்ச சிக்கனமாகவே செலவுக்குக் குடுங்க. தாராளம் காண்பிச்சீங்கன்னா எல்லாருமாச் சேர்ந்து ஆளை முழுங்கிடுவாங்க” என்று தனசேகரன் அவரை எச்சரித்தான்.
“இதிலே என்ன தம்பீ சிக்கனம் பார்க்க முடியும்? செத்துப் போனவருக்குச் செய்யிற காரியங்களில் ஒண்ணும் குறைவு வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன். அந்தக் காரியங்கள்ளாம் முடிஞ்சப்புறம் தான் நீயும் நானும் இங்கே பல பேரை விரோதிச்சுக்கிட்டாலும் பரவாயில்லேன்னு நாம ‘போல்டா’ பலதைச் செய்ய வேண்டியிருக்கும். சில விஷயங்களை முடிவு கட்டவே வேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் நிறைய எதிர்ப்பு வரும்.”
மாமா பேச்சை முடிப்பதற்குள் அரண்மனைக் காவல்காரன் ஒருவன் வசந்த மண்டபத்துச் சாவியோடு வந்து கதவைத் திறந்து விட்டான்.
“வேறே ஏதாச்சும் வேணுங்களா?”
“ஒண்ணும் வேண்டாம்ப்பா! குடிக்கத் தண்ணி மட்டும் கொஞ்சம் கொண்டாந்து வை... போதும்.”
காவல்காரன் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சொல்லிக் கொண்டு போனான்.
அப்புறம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தூங்கி விட்டார்கள்.
விடிகாலை ஐந்து மணிக்குக் காரியஸ்தர் வந்து அவர்களை எழுப்பினார். ஒரு பெரிய ‘பிளாஸ்க்’ நிறையக் கள்ளிச் சொட்டாக அருமையான காபியும் கொண்டு வந்திருந்தார்.
“எத்தனை மணியாகுமோ, என்னவோ, அங்கே ராஜ ராஜேஸ்வரி விலாசத்துக்கு வந்துட்டீங்கன்னா அப்புறம் சாப்பிட ஒண்ணும் கிடையாது. அதான் அரண்மனை வாசல்லே இருக்கிற அம்பிகா பவன் ஹோட்டல் ஐயருகிட்டச் சின்னராஜாவுக்குன்னு, ‘ஸ்பெஷலா’ச் சொல்லி வாங்கியாந்துட்டேன்.”
மாமாவும் தனசேகரனும் அந்த அதிகாலையில் காபியை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். பல்விளக்கி முகங்கழுவிக் கொண்டு இருவரும் காபியருந்தி முடிக்கவும் டிரைவர் ஆவுடையப்பன் வசந்த மண்டபத்து வாசலில் சர்ரென்று காரைக் கொண்டு வந்து நிறுத்தவும் சரியாயிருந்தது. “ஏன்ய்யா பெரிய கருப்பன் சேர்வை! இங்கே அரண்மனைக்குள்ளாரப் போறதுக்கும் வர்றதுக்கும் கார் எதுக்கு? நடந்தே போய்க்கலாமே?” என்று கேட்டார் மாமா.
“இல்லீங்க. நான் ஒரு காரணத்தோடதான் சொல்றேன். அங்கங்கே ஆளுங்க நின்னுக்கிட்டும், உட்கார்ந்து பேசிக்கிட்டும் இருக்காங்க. நீங்க நடந்தே வந்தீங்கன்னாச் சில ஆளுங்க முறை தெரியாமே மரியாதை இல்லாமே நடுவழியிலேயே உங்களை நிறுத்தி வச்சுத் துஷ்டி விசாரிப்பாங்க. அதைத் தவிர்க்கலாம்னுதான் காரைக் கொண்டாரச் சொன்னேன்” என்பதாகப் பெரிய கருப்பன் சேர்வை சொல்லி விளக்கிய பின்பு மாமாவுக்கும் அவர் சொன்ன யோசனை சரியென்றே தோன்றியது.
“ஏன் நடந்தே போகலாமே? அதிலே என்ன தப்பு?” என்று தனசேகரன் வேறு ஆரம்பித்தான்.
“இல்லே தம்பீ! அவர் சொல்றதுதான் மொறை. போறப்ப வர்றப்ப நடுவழியிலே நிறுத்தித் துஷ்டி கேட்கிறது நல்லா இருக்காது. அதுக்கு நாமே எடங் கொடுத்திடக் கூடாது” என்று மாமா அடித்துச் சொன்னார். தனசேகரன், அதற்கப்புறம் நடந்து போவதை வற்புறுத்தவில்லை.
முன் ஸீட்டில் காரியஸ்தரும், பின் ஸீட்டில் மாமாவும், தனசேகரனும் அமர்ந்த பின் டிரைவர் ஆவுடையப்பன் காரை ஸ்டார்ட் பண்ணினான். கார் அடுத்த நிமிஷமே கூட்டம் கூடியிருந்த ராஜ ராஜேஸ்வரி விலாச ஹால் முகப்பில் போய் நின்றது. காரை சூழ்ந்து கொண்டு வந்து ஒரு பெருங் கூட்டம் மொய்த்தது. ‘சின்னராஜாவும் அவங்க மலேயா மாமாவும் வர்றாங்க’ என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் முணுமுணுத்து ஓய்ந்தன. மகாராஜாவின் சடலத்தைச் சுற்றிலும் மொய்த்திருந்த முக்கியஸ்தர்களும், பிரமுகர்களும் விலகி வழி விட்டனர்.
ஜில்லா கலெக்டர், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், டிஸ்ட்ரிக் ஜட்ஜ் எல்லாரும் நன்றாக விடிந்த பின் ஏழு ஏழரை மணிக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள். “இந்தச் சினிமா ஸ்டார்ஸுங்க கொஞ்சம் பேர் மெட்ராஸ்லேருந்து வந்திருக்காங்க. தயவு செய்து பிரேத ஊர்வலத்திலே அவங்க நடந்தோ காரிலோ பின்னால் வரவேண்டாம்னு நீங்களே கண்டிச்சுச் சொல்லிடுங்க மிஸ்டர் தனசேகரன்! அவங்க வேணும்னா ஃப்யூனரல் புரொஸஷன் புறப்படறத்துக்கு முன்னாடியே அவங்க தகன கட்டடத்துக்குக் கார்லே போயிடட்டும். அவங்கள்ளாம் புரொஸஷன்ல வந்தா கூட்டம் கண்ட்ரோல் பண்ண முடியாமல் போயிடும். அப்புறம், போலீஸ் அரேன்ஜ்மெண்ட் சரியில்லேன்னு நீங்க என்னைக் குறை சொல்லப்பிடாது” என்று சர்க்கிள் தனசேகரனிடம் வந்து வேண்டிக் கொண்டார்.
“நீங்க கவலைப்படாதீங்க! நான் பார்த்துக்கறேன். ஸினி ஸ்டார்ஸ் யாரும் ஃப்யூனரல் புரொஸஷன்லே வரக்கூடாதுன்னு சொல்லி நானே தடுத்திடறேன். அவர்கள்ளாம் முன்னாலேயே தகன கட்டடத்துக்குப் போயிடட்டும்” என்று மாமா தங்கபாண்டியன் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குத் தனசேகரன் சார்பில் உத்திரவாதம் அளித்தார்.
அடுத்துப் பேரன்மார்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் நெய்ப்பந்தம் பிடிக்கும் பிரச்னை மீண்டும் பூதாகரமாக உருவெடுத்தது.
“அதெல்லாம் முடியாது! நிஜமாகவே அவருக்கு நெய்ப்பந்தம் பிடிக்கணும்னாத் தனசேகரனுக்குக் கலியாணமாகிப் பையன்கள் இருந்தால் தான் சாத்தியம். தனசேகரனுக்கு இன்னும் கலியாணமாகலே. அதுனாலே நெய்ப்பந்தம் பிடிக்கிறதுக்குப் பாத்தியதை உள்ள அசல் வாரிசு யாரும் இப்போ கிடையாது” என்று மாமாவே உரத்த குரலில் முரட்டடியாக அடித்துப் பேசி அந்தப் பிரச்னையையும் உடனே தீர்த்து வைத்தார்.
மீசை, தலைமுடி எல்லாம் தும்பைப் பூவாக வெளுத்த எண்பது வயதுக் கிழவர் ஒருத்தர், “அரண்மனைப் பரியாறி வந்தாச்சா? தனசேகரனை மொட்டை போட்டுக்கிட்டு வரச் சொல்லுங்க. பிரேதத்தைக் குளுப்பாட்ட முறைப்படி அரண்மனை வசந்த மண்டபத்துக் குளத்திலே தான் தண்ணி எடுக்கணும். தண்ணி எடுக்கப் போறதுக்கு முன்னாடியே மொட்டை போட்டாயிடணும்” என்று கர்ம சிரத்தையாக முன் வந்து வற்புறுத்திச் சொன்னார்.
மாமா தங்கபாண்டியனுக்கு அந்த நரைத்த தலைக் கிழவர் மேல் கோபம் கோபமாக வந்தது. கருகருவென்று சுருள் சுருளாகக் கர்லிங் விழுந்திருந்த தனசேகரனின் அந்த அழகிய கிராப்புத் தலையையும் நரைத்த தலைக் கிழவரையும் மாறி மாறிப் பார்த்தார் மாமா. தனசேகரன் மேல் மிகவும் அனுதாபமாக இருந்தது மாமாவுக்கு.
“இந்தக் காலத்துப் புள்ளைங்களை ரொம்பத்தான் சோதனை பண்ணாதீங்க பாட்டையா! கொஞ்சம், காலத்தை அனுசரிச்சு வழக்கங்களை விட்டுக் கொடுங்க. பாவம்! தனசேகரன் ‘பிரில் கிரீம்’ போட்டு ரொம்ப அழகா முடி வளர்த்திருக்கான். ஒரே நிமிஷத்திலே அதைத் தொலைச்சுடப் பார்க்கிறீர்களே?” என்று தனசேகரன் சார்பில் அந்தக் கிழவரிடம் தானே அப்பீல் செய்து பார்த்தார் மாமா. ஆனால் கிழவர் படு பிடிவாதக்காரராக இருந்தார். “அதெப்படி விட்டுட முடியும்? முறையின்னு ஒண்ணு இருக்கறப்ப நமக்குத் தோணுனபடியா செய்யிறது?” என்று மீண்டும் வற்புறுத்தினார் கிழவர். அந்த நிலையில் தன் பொருட்டு ஒரு வீணான சர்ச்சை அங்கே எழுவதை விரும்பாத தனசேகரன், “எது முறையோ அப்படியே நடக்கட்டும். நான் மொட்டை போட்டுக்கத் தயார். ஆளைக் கூப்பிடுங்க” என்றான். அந்தச் சமயத்திலே பெரிய கருப்பன் சேர்வை அவசர அவசரமாக மாமா தங்கப்பாண்டியனைத் தேடிக் கொண்டு வந்தார்.
“உங்க கிட்டத் தனியா ஒரு விஷயம் கன்ஸல்ட் பண்ணணுமே?”
“என்ன? இப்படி இங்கே வந்துதான் சொல்லுங்களேன்” என்று காரியஸ்தரை அங்கிருந்த ஒரு தூண் மறைவுக்குத் தனியா அழைத்துக் கொண்டு சென்றார் மாமா.
“பகல் சாப்பாடு எத்தினி பேருக்கு ஏற்பாடு செய்யணும்? இன்னிக்கிப் பகல் ரெண்டு மணிவரை உள் கோட்டையிலே அரண்மனைக்குள்ளார அடுப்பு எதுவும் புகையப்பிடாது. வெளிக் கோட்டையிலே வடக்கு ராஜ வீதியிலே சிவன் கோவிலுக்குப் பக்கத்திலே இருக்கிற தேவார மடத்திலே சமைக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணித் தவசிப் பிள்ளைங்களை உடனே அணுப்பணும், சொல்லுங்க.”
“என்ன சேர்வைக்காரரே! இதெல்லாமா எங்கிட்டக் கேட்கணும், சமையலுக்குச் சொல்ல வேண்டியதுதானே?”
“எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியலே. கூட்டத்தைப் பார்த்தாப் பயமாயிருக்கு. எரியூட்டு முடிஞ்சதும் நாலாயிரம் ஐயாயிரம் பேர் அப்படியே சாப்பாட்டுக்கு நுழைஞ்சிட்டாங்கன்னா அரண்மனைக் களஞ்சியத்தை பூரா திறந்து விட்டாலும் பத்தாது. அதான் என்ன செய்யறதுன்னு உங்ககிட்ட யோசனை கேட்க வந்தேன்.”
“இதிலே என்ன யோசனை வேண்டிக் கிடக்கு? சாப்பாட்டு விஷயத்திலே போயிக் கஞ்சத்தனம் எதுக்கு? இன்னும் வேணும்னாக் கொஞ்சம் பணம் தர்றேன், வந்தவங்க யாரும் எரியூட்டு முடிஞ்சதும் வயிற்றுப் பசியோட திரும்பப்பிடாதுங்கறது தான்முக்கியம்.”
“இப்போ நீங்க சொல்லிட்டீங்க. இனிமே எனக்குக் கவலை இல்லை, ஏற்பாடு பண்ணிடுவேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை வந்துடக் கூடாதுங்கிறதுதான் என் பயம்.”
“இதிலே என்ன பயம்? பார்த்து ஏற்பாடு பண்ணுங்க! திங்கிற சோத்துலே போயிக் கணக்குப் பார்த்துக்கிட்டு...?”
பெரிய கருப்பன் சேர்வை புறப்பட்டுப் போனார். அரண்மனைப் புரோகிதர் தம் சகாக்களுடன் வந்து ஏதேதோ ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். தனசேகரன் உறவினர்கள் பின் தொடர மொட்டையடித்துக் கொள்ளப் போனான். கொள்ளிச் சட்டியை வைத்துத் தூக்கிக் கொண்டு போக ‘உறி’ போல ஒன்று கயிறுகளாலும் மூங்கில் சட்டங்களாலும் கட்டிக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. கீழே மரத்தடியில் மகாராஜாவின் அந்திம யாத்திரைக்காகப் ‘பூச்சப்பரம்’ ஒன்றை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
“என்னப்பாது...? கொள்ளிச் சட்டியைக் கையிலே தூக்கிட்டுப் போறதுதானே மொறை! மைனர்ப் பையங்க சின்னஞ்சிறுசுகள் தூக்க முடியாதுன்னுதான் உறி கட்டுவாங்க. வயசானவங்க தூக்கிக்கிட்டுப் போறதுக்கு எதுக்கு உறி” என்று மீண்டும் அந்த நரைத்த தலைக் கிழவர் தொணதொணக்க ஆரம்பித்தார். சமயாசமயங்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் எப்படிப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்து கழுத்தறுப்பார்களோ அப்படிக் கழுத்தறுத்துக் கோண்டிருந்தார் அந்தக் கிழவர். அவரைச் சமாளிக்க மாமாவுக்கு ஒரே வழிதான் புலப்பட்டது. மாமா தங்கபாண்டியன் அந்தக் கிழவருக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து அங்கு நடந்து கொண்டிருந்தவற்றிலிருந்து அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக வேறு பழைய கால விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். தங்கபாண்டியனின் உபாயம் பலித்தது. கிழவர் சுலபமாகத் தங்கபாண்டியனிடம் சிக்கிக் கொண்டார். சமஸ்தானத்தின் பழைய நவராத்திரி விழாவைப் பற்றியும் ஒன்பது நாட்களும் ஊர் ஜனங்களுக்கு அரண்மனையில் வடை, பாயாசத்தோடு சாப்பாடு போட்டதைப் பற்றியும் கிழவரிடம் விவரமாக விசாரித்துக் கேட்கத் தொடங்கி அவருடைய கவனத்தை எதிரே நடந்து கொண்டிருந்தவற்றின் மேல் சொல்லவிடாமல் தடுத்து விட்டார் மாமா. இல்லாவிட்டால் அந்தக் கிழவர் அப்போது விடாமல் எதையாவது தொணதொணவென்று சொல்லிக் கொண்டிருப்பார் போலத் தோன்றியது. மகாராஜாவின் பிரேதத்தைச் சுற்றிக் குவிந்துவிட்ட மாலைகளையும் மலர்வளையங்களையும் அந்தக் கூடத்தின் வராந்தாவில் இரண்டு பெரிய அம்பாரங்களாகக் கொண்டு போய் அள்ளிக் கொட்டியிருந்தார்கள்.
தனசேகரனைப் பின்பற்றி அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் மொட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழுங்கச் சிரைத்த மொட்டைத் தலையோடு தனசேகரனை எதிரே பார்த்த போது மாமாவுக்கே முதலில் அடையாளம் புரிவது சிரமமாக இருந்தது. கருகருவென்று சுருண்ட அழகிய கிராப்புத் தலையோடு கூடிய தனசேகரனின் முகம் தான் அவருக்குப் பரிச்சயமாகியிருந்த முகம். இந்தப் புதுமொட்டைத் தலை முகம் உடனே அடையாளம் தெரிந்து மனத்தில் பதியச் சில விநாடிகள் பிடித்தன.
மகாராஜாவின் பிரேதத்தைப் பூச்சப்பரத்தில் எடுத்து வைக்கும் போது காலை எட்டே கால் மணி. முன்பு ஒரு காலத்தில் அரண்மனைப் பாண்டு வாத்திய கோஷ்டி என்ற பெயரில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்து விட்டு அப்புறம் வெளியே தனியாகக் கல்யாண ஊர்வலங்களை நம்பிக் கடை வைத்து விட்ட ஒரு பாண்டு வாத்திய கோஷ்டிக்காரன் சோக கீதங்களை இசைத்துக் கொண்டிருந்தான். அதிர் வேட்டுக்கள் போடுவோர், தாரை தப்பட்டை வாத்தியக்காரர்கள், புலி வேஷக்காரர்கள் எல்லோரும் மகாராஜாவின் அந்திம ஊர்வலத்தில் குறைவின்றி இருந்தார்கள்.
வெளிக் கோட்டையில் நாலு ராஜ வீதியிலும் தெருக் கொள்ளாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீடுகள், திண்ணைகள், மாடி, பால்கனிகள், மொட்டை மாடிகள், தெருவிலிருந்த மரக்கிளைகள் எல்லாவற்றிலும் ஜனக் கூட்டம் நெரிசல்பட்டுப் பிதுங்கி வழிந்தது. பிரேதத்துக்குப் பின்னால் பூக்களையும் காசுகளையும், வாரி இறைத்துக் கொண்டு வந்ததால் இறைக்கப்பட்ட காசுகளைப் பொறுக்குவதற்காக வேறு கூட்டம் முண்டியடித்தது. தனசேகரன் சிறிது நேரம் கொள்ளிச் சட்டியோடு பூச்சப்பரத்துக்குப் பின்னால் நடந்து பார்த்தான். கூட்டத்தின் நெரிசலில் அவனையும் கொள்ளிச் சட்டியையும் கீழே தள்ளிவிடுவார்கள் போலிருந்தது. முன்னால் திறந்த ஜீப்பில் அரண்மனைக் காரியஸ்தரோடு நின்றவாறே ஏற்பாடுகளைக் கவனித்தபடி வழி விலகிச் சென்று கொண்டிருந்த மாமா தனசேகரன் கூட்டத்தில் சிக்கித் தள்ளாடித் திணறுவதைக் கவனித்து விட்டார். வேறு வழியில்லாததால் ஜீப்பை நிறுத்தித் தனசேகரனையும் அதிலேயே ஏற்றி நிற்கச் செய்துவிட்டார் அவர். கொள்ளிச் சட்டியைத் தாங்கிய உறியைப் பிடித்துக் கொண்டு தனசேகரனும் ஜீப்பிலேயே நின்று கொண்டு பூச்சப்பரத்துக்கு முன்னால் சென்றான்.
அந்த அந்திம ஊர்வலம் அரச குடும்பத்து மயானத்துக்குப் போய்ச் சேரும் போது பகல் பன்னிரெண்டே கால் மணி ஆகிவிட்டிருந்தது. இளைய ராணிகள் என்ற பெயரில் அந்தப்புரத்தில் அடைந்து கிடந்தவர்களில் பலர் ஏற்கெனவே திருட்டு வேலைகளில் இறங்கியிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததினால் அந்திம ஊர்வலம் புறப்படுவதற்கு முன்னர் மாமாவும் காரியஸ்தரும் அரண்மனையில் காவல் ஏற்பாடுகளைச் சரியான முறையில் செய்து விட்டே புறப்பட்டிருந்தனர்.
மயானத்துக் காரியங்கள் ஒரு மணிக்குள் முடிந்து விட்டன. உறவினர்களும், அரண்மனை முக்கியஸ்தர்களும் நீராடித் தலை முழுகிய பின் தேவார மடத்துக்குச் சாப்பிட வந்தார்கள். கோமளீஸ்வரனும் இன்னும் யாரோ நாலைந்து சினிமா ஆசாமிகளும் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை வழிமறித்து, “என்ன ஏற்பாடுன்னு பண்ணினீங்க? காலையிலே ஸ்டாருங்களுக்கு ஒரு காபி கொடுக்கக் கூட ஆளு இல்லே. ராஜா இருந்தப்பக் கலைஞர்கள்னா உயிரை விடுவாரு. நீங்க என்னடான்னா...” என்று ஏதோ இரைந்து கொண்டிருந்தார்கள். அதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மாமா தங்கபாண்டியன் பொறுமையை இழந்து ஆத்திரமடைந்தார்.
“இந்தாய்யா கோமளீஸ்வரன்! அவரிட்ட ஏனய்யா சத்தம் போடறே? உன்னையும் உன் ஸ்டார்சுங்களையும் கவனிக்கிறதைத் தவிர, இங்கே அரண்மனையிலே அவங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு நினைச்சியா? இது எழவு வீடுன்னு நினைச்சியா? அல்லது உங்களை எல்லாம் கவனிச்சு விருந்துபசாரம் பண்றதுக்குக் கலியாண வீடுன்னு நினைச்சுக்கிட்டியா?” என்று மாமா தங்க பாண்டியன் கூப்பாடு போட்ட பின்புதான் டைரக்டர் கோமளீஸ்வரன் ஓய்ந்தான். அடுத்து உள்ளூர்ப் பத்திரிகை நிருபர்கள் நாலைந்து பேர் தனசேகரனைச் சூழ்ந்து கொண்டு அரண்மனையின் எதிர்காலம், மகாராஜாவின் உயில் பற்றி எல்லாம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுத் துளைத்தார்கள். தனசேகரன் சுருக்கமாகவும், அடக்கமாகவும் பதில்களைச் சொன்னான்.
“நீங்கள் இனிமேல் தொடர்ந்து இங்கே பீமநாதபுரத்தில் இருப்பதாக உத்தேசமா அல்லது மறுபடியும் உங்கள் மாமாவோடு மலேசியாவுக்கே புறப்பட்டுப் போய் விடுவீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, “இன்னும் அது பற்றி எல்லாம் முடிவு எதுவும் செய்யவில்லை” என்று தனசேகரனிடமிருந்து பதில் கிடைத்தது.
“உங்கள் தகப்பனார் தொடங்கிய சினிமாப் புரொடக்ஷன் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துவீர்களா?” என்று சினிமாவில் அதிக அக்கறையுள்ள ஒரு நிருபர் மெல்லச் சிரித்துக் கொண்டே கேட்டதற்குத் தனசேகரன் பதில் சொல்வதற்கு முன்பே மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டு, “என்னப்பா விவரம் தெரியாத ஆளுகளா இருக்கீங்க? எந்த நேரத்தில் எதைக் கேட்கறதுன்னு தெரியலியே? அவரு காலையிலேருந்து பட்டினி. அலைச்சல் வேறே. இப்பப் போயி உசிரை எடுக்காதீங்கப்பா” என்று அந்த நிருபர்கள் கூட்டத்தை மெதுவாகக் கத்தரித்து விட்டார். “நீ வா தம்பீ! முதல்லே ஜீப்பிலே ஏறி உட்காரு. போகலாம். இங்கே நின்னுக்கிட்டிருந்தா இப்பிடியே யாராவது வந்து ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க” என்று உடனே தனசேகரனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்படச் செய்யவும் தயாரானார். நிருபர்கள் அப்போதும் விடவில்லை. “ப்ளீஸ்... அப்படியே உங்க மாமாவோட கொஞ்சம் நில்லுங்க. ஒரே ஒரு படம் எடுக்கிறோம்” என்று புகைப்படம் பிடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
“நீங்கள்ளாம் நட்சத்திரேயனோட அவதாரம்பா” என்றார் தங்கபாண்டியன்.
“தங்கள் பெண்ணை இளையராஜாவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக ஒரு வதந்தி அடிபடுகிறதே?”
“அட சரிதான் போய்யா. அடியும்படலே. உதையும் படலே. கலியாணப் பத்திரிகையிலே போட வேண்டியதை எல்லாம் நியூஸ் பேப்பரிலே போடறேன்னா எப்படிப்பா?”
பத்திரிகை நிருபர்கள் சிரித்துக் கொண்டே போய் விட்டார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையையும், வேறு இரண்டொரு முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்ட பின் ஜீப் அரண்மனைக்குப் புறப்பட்டது.
“தம்பீ! வசந்த மண்டபத்திலே போய்க் குளிச்சு உடை மாத்திக்கிட்டு அங்கேயே சாப்பாட்டைக் கொண்டாரச் சொல்லிடட்டுமா? இல்லாட்டி நாமளும் தேவார மடத்திலேயே போய்ச் சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திரலாமா?”
“நாம இங்கே வசந்த மண்டபத்திலே நாலு அஞ்சு பேருக்குச் சாப்பாடு மாத்தியாறச் சொன்னா அங்கே அரண்மனையிலே யாராவது நாற்பது பேருக்கு மாத்திக்கிட்டு வரச் சொல்லுவாங்க. வீணா ஆளுங்க அங்கேயும் இங்கேயுமா அலைய வேண்டியிருக்கும். தேவார மடத்துலே போயே ஒரு மூலையில் உட்கார்ந்து நாமும் ஒருவாய் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு வந்துடலாம் மாமா” என்றான் தனசேகரன். மாமாவும் சம்மதித்தார்.
ஜீப் வசந்த மண்டபத்து விருந்தினர் மாளிகை வாயிலில் போய் நின்றதுமே தனசேகரனும் மாமாவும் உள்ளே போய் நீராடச் சென்றார்கள். “எனக்குப் பச்சைத் தண்ணி ஒத்துக்காது. நா கூட வீட்டுக்குப் போயி வெந்நீரிலே தலைமுழுகிட்டு வந்துடறேங்க” என்றார் காரியஸ்தர்.
“எங்கே பார்த்தாலும் ஒரே ஜனநெரிசலா இருக்கு. ஜீப்பிலேயே போயிட்டு வந்திடுங்க” என்று மாமா காரியஸ்தரை ஜீப்பிலே போகச் சொல்லி வற்புறுத்தினார்.
“இல்லீங்க. நான் நடந்தே போயிட்டு வந்துடறேன்” என்று மறுபடியும் தயங்கிய காரியஸ்தரை, “அது முடியிற காரியமில்லே. நான் சொல்றபடி கேளுங்க. ஜீப்பிலேயே போயிட்டு வாங்க” என்று கண்டித்துச் சொல்லி ஜீப்பில் அனுப்பி வைத்தார் தங்கபாண்டியன்.
அன்று மாலை ஐந்து ஐந்தரை மணி வரை தேவார மடத்தில் சாப்பாட்டுப் பந்திகள் ஓயவில்லை. அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் நிறைய வந்திருந்தார்கள். காரியஸ்தர் அவ்வளவு பேருக்கும் சாப்பாடு போட விரும்பவில்லை. அப்போது அந்த சமஸ்தானம் இருந்த பொருளாதார வறட்சி நிலையில் அது கட்டாது என்ற பயம் தான் காரணம். “சாப்பாட்டிலே போய்க் கணக்குப் பார்க்க வேண்டாம்” என்று தங்கபாண்டியன் சொல்லியதால் தான் “நமக்கென்ன வந்தது” என்று சற்றே தாராளமாக விட்டிருந்தார் காரியஸ்தர்.
அன்று பிற்பகலில் மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் இரண்டு மூன்று மணி நேரம் அயர்ந்து தூங்கினார்கள். மறுபடி அவர்கள் கண் விழித்த போது ஆறு மணி. காபியருந்தி விட்டுக் காரியஸ்தரைக் கூப்பிட்டு அனுப்பினார்கள் அவர்கள்.
காரியஸ்தர் வரும்போது அவரோடு டைரக்டர் கோமளீஸ்வரனும் வரவே மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரமே மூண்டது.
“இந்தப் பயல் கோமளீஸ்வரன் ஏன் ஒட்ட வச்ச வால் கணக்கா இன்னும் விடாமே சுத்திக்கிட்டிருக்கான்? இவன் ஏன் இன்னும் ஊருக்குத் திரும்பிப் போகலே? இங்கே இவனுக்கு என்னா வச்சிருக்கு?”
“அதுதான் எனக்கும் புரிய மாட்டேங்குது மாமா?”
நல்ல வேளையாக அப்போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அவர்கள் மனநிலை புரிந்தோ என்னவோ கோமளீஸ்வரனை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டுத் தான் மட்டும் தனியாக உள்ளே வந்தார்.
“உட்காருங்க மிஸ்டர் பெரிய கருப்பன் சேர்வை! உங்ககிட்ட நானும் தம்பியும் கொஞ்சம் தனியாப் பேசறத்துக்காகத்தான் இப்போ கூப்பிட்டோம்.”
பெரிய கருப்பன் சேர்வை எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் என்ன சொல்லப் போகிறார்களோ என்று அவர்கள் இருவர் முகத்தையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். முதலில் தனசேகரன் தான் பேசினான்:-
“சமஸ்தானச் சொத்துக்கள் - கடன்கள் எல்லாத்துக்கும் கம்ப்ளீட்டா அஸெட்ஸ் அண்ட் லயபிலிட்டீஸ் ஒண்ணு தயார்ப் பண்ணியாகணும். அரண்மனை அந்தப்புரத்திலே இளையராணீங்கன்னும் அவங்களோட வம்சாவளீன்னும் அடைஞ்சு கிடக்கிறாங்களே அதுக்கும் ஒரு லிஸ்ட் வேணும். இப்போ அரண்மனையிலே ஆற செலவு அயிட்டங்களைப் பத்தியும் உத்தியோகம் பார்க்கிறவங்களைப் பத்தியும் கூட விவரம் வேணும்” தனசேகரன் இப்படிச் சொல்லியதும் பெரிய கருப்பன் சேர்வை,
“ரெண்டு நாள் டயம் குடுங்க, எல்லாம் விவரமாத் தயார்ப் பண்ணித் தந்துடறேன். அதோட இன்னொரு விஷயம். இளையராணிங்க லிஸ்டிலே மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்களே அந்த சினிமா நட்சத்திரம் ஜெய நளினியைக் கூடச் சேர்த்துக்கணும் போலிருக்கே? அந்த நட்சத்திரத்துப் பேருக்கு ‘உயில்’ ஏதாச்சும் இருக்கான்னு நச்சரிச்சுக் காலைலேருந்து என் உயிரை எடுத்துக்கிட்டிருக்கான் இந்தக் கோமளீஸ்வரன். அவன் தான் இந்த நட்சத்திரத்தைப் பெரிய மகாராஜாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சானாம். அதுக்கப்புறம் திருத்தணிக் கோயில்லியோ எங்கேயோ மாலை மாத்தி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் கூடப் பண்ணிக்கிட்டாங்களாம். அந்தப் போட்டோ கூட அவன் கிட்டே இருக்காம்” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.
“இதென்ன? சுத்த பிளாக் மெயிலா இருக்கே?” என்று மாமா இரைந்தார்.
“என்ன கண்றாவியோ? இந்தக் கோமளீஸ்வரனும் இவனோட வந்த சினிமா ஆட்களும் அந்த ஜெய நளினியும் ஒரு முழு கஸ்ட் ஹவுஸ் நிறைய அடைஞ்சுக்கிட்டுத் தொந்தரவு பண்றாங்க. அவங்களை எப்படி வெளியே அனுப்பறதுன்னே தெரியலே?” என்றார் காரியஸ்தர். தனசேகரன் கேட்டான்:
“உண்மையிலேயே அந்தச் சினிமாக்காரி பேருக்கு உயில் ஏதாவது இருக்கா?”
“உங்க பேருக்குத்தான் உயில் எல்லாம் இருக்கு. வேற எதுவும் இருக்கிறதா எனக்கு ஞாபகம் இல்லே.”
“முதல்லே அந்தக் கோமளீசுவரனை உள்ளே கூப்பிடுங்க சொல்றேன்.”
பெரிய கருப்பன் சேர்வை எழுந்து சென்று வெளியே வராந்தாவில் உட்கார்ந்திருந்த கோமளீஸ்வரனை உள்ளே அழைத்து வந்தார். அவனை உட்காரும்படி கூட ச் சொல்லாமல் மிகவும் கண்டிப்பான குரலில் மாமா பேசினார். யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் அங்கே எவளை மையமாக வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்களோ அந்த ஜெய நளினியே திடும் பிரவேசமாக உள்ளே நுழைந்தாள். ஒயிலாக அபிநயம் பிடிப்பது போல் மாமாவுக்கும் தனசேகரனுக்கும், காரியஸ்தருக்கும் தனித்தனியாக வணக்கம் செலுத்தினாள். அழகு கொஞ்சும் அந்த எழில் வடிவத்தைத் தங்களிடையே தோன்றக் கண்டதும் அவர்கள் அனைவருமே சமாளித்துக் கொள்வதற்குச் சில கணங்கள் பிடித்தன. மாமா தங்கபாண்டியன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவளிடம் நேருக்கு நேர் கேட்டார்:
“ஏன்ம்மா? காலமான பெரியராஜா உங்களுக்காக எவ்வளவோ செலவழிச்சிருக்காரு. நீங்களும் அதை மறந்திருக்க மாட்டீங்க. அடையாறிலே அந்தப் பங்களா- அதான் - இப்ப நீங்க இருக்கீங்களே அதை உங்களுக்கு வாங்கி வைக்கணும்கிறதுக்காக அவர் இங்கே ஊர்லே அயனான தஞ்சை நிலங்களைப் பல ஏக்கர் வந்த விலைக்கு அவசர அவசரமாக வித்தாரு. எங்களுக்கெல்லாம் கூட அது பிடிக்கலே. ஆனா இப்போ இன்னமும் நீங்க ஏதோ கிளெய்ம் பண்ற மாதிரிக் கோமளீஸ்வரன் சொல்றானே?”
“நோ... நோ... அப்படி ஒண்ணுமில்லே. அவரு உயில்லே என் சம்பந்தமா ஏதாவது இருக்கான்னு எனக்குத் தெரியணும். அவ்வளவுதான்...”
“இருக்கிறதாத் தெரியல. அப்படி இருந்தால் அந்த விவரம் முறைப்படி உங்களுக்கு ‘ரெஜிஸ்தர்’ தபால்லே வந்து சேரும். நீங்க வீணா ஏன் இங்கே வந்து தங்கிக் கஷ்டப்படணும்னு தான் எனக்குப் புரியலே...”
“எப்படி இருந்தாலும் நாங்க இன்னிக்கிச் சாயங்காலம் கார்லே புறப்படறோம். அதான் உங்க ரெண்டு பேரிட்டவுமே நேர்லே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டாள் அவள்.
“என்னமோ எங்களையெல்லாம் மறந்துடாதீங்க. மகாராஜா மெட்ராஸ் ‘கேம்ப்’னா நான் இராப்பகலா வீடு வாசலை மறந்து அவரோட சுத்தியிருக்கேன்! என்னையெல்லாம் வெறுங்கையோட அனுப்பறது உங்களுக்கு நல்லா இருந்தாச் சரிதான்” என்று கோமளீஸ்வரன் ஏதோ பணத்துக்கு அடி போட்டான். ஆனால் அதற்குள் ஜெய நளினி அங்கிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு போய்விட்டாள். மாமாவுக்கு வந்த கோபத்தில் என்ன செய்து விடுவாரோ என்று பயந்தான் தனசேகரன்.
“ஏம்பா, நீயெல்லாம் மனுஷன் தானா? செத்துப் போனவருக்குத் தரகு கேட்டுக்கிட்டு இப்போ வந்து நிக்கிறியே! நீ செஞ்சிருக்கிற மானக் கேடான காரியங்களாலே இந்தச் சமஸ்தானமே சீரழிஞ்சு போயிருக்கு. இன்னும் உனக்குத் திமிர் அடங்கலியே?”
விநாடிக்கு விநாடி மாமாவின் குரலில் சூடேறுவதைக் கேட்டுக் கோமளீஸ்வரன் மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவி நடிகை ஜெய நளினியைப் பின் தொடர்ந்து சென்றான்.
__________________________________________________________________