அம்மாவுக்கு கடுதாசி

வெளிநாட்டிலிருந்து...
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
நலந்தான் ஆத்தா
நாங்கல்லாம் இங்க
நிம்மதிதானா
நீங்கள்ளாம் அங்க

ஆடுமேய்க்கிறேன்னு
அதுகளோடு சுத்தாத
வெள்ளாமை பாக்குறேன்னு
வெயில்லையும் சுத்தாத

ஊரைவிட்டுவந்தாலும்
உங்களைத்தான் உசுருக்குள்ள
தாங்கியிருக்கேன்.
கட்டம்போட்ட சேலையும்
கல்லுவச்ச தோடும்
தங்கச்சிக்கு வாங்கியிருக்கேன்.

மருங்கிவய வெளஞ்சா
கருப்பனுக்குப் பொங்க வையி
வெளையாமப் போச்சுன்னா
பந்தியில நொங்க வைய்யி

வந்த மொதநாளே விழுந்திருச்சு
ஊர்ல ஆடுன பல்லு
கந்தசாமி பழனிவேலு எல்லாரையும்
கேட்டேனு சொல்லு

போனவாரம் வாத்தியாரு வீட்டு
ஃபோனுக்கு கூப்ட்டுருந்தேன் ஒன்ன
நீ இல்லைனு சொல்லி அவுக
பொண்டாட்டி வச்சுபுட்டா ஃபோன.

ஓமகன் உறங்காம
நீ ஒறங்க வழியில்லை
ஓங்குரல் கேக்காம இங்க
ஒடம்புக்கே சரியில்லை

ஏமகனச் சுமக்க
நீயிருக்கவேணும்
பேரப்புள்ளைய தலையில
பேனெடுக்க வேணும்

கடல்தாண்டி கெடக்குறது
என்னவோ போலிருக்கு
அப்பன் போன ஆத்தங்கர
நீபோக நாளிருக்கு

நா அனுப்பாத கண்ணீர
வரவில் வைய்யி
நா அனுப்புற பணத்த
செலவு செய்யி

கடிதத்த முடிச்சுகிறேன்
கண்ணீரத் தொடைச்சுக்க
கடவுளத் திட்டாத
காலமுனு நெனச்சுக்க

நிலாகண்ணன்
8428007006

எழுதியவர் : நிலாகண்ணன் (5-Nov-15, 9:15 am)
பார்வை : 211

மேலே