ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்து

இரவின் இருளை
கிழிக்கும் நிலவாய்
நம் வாழ்வோடு மலர்ந்தீர்,
வெளிச்சத்தின் மலராய்!

கல்வியின் கரைதனை
தடையின்றி நாம் அடைய
நீர் எமக்காய் உழைத்தீர்,
துடுப்பாய் இங்கே!

பிறந்திட்ட மண்ணிலே
பெறுபேறுகளை உயர்த்த வந்தீர்,
பெயரளவில் நின்றிடாது
புதுக் காவியம் படைத்து நின்றீர்!

'ஆசான்' எனும் சொல்லுக்கு
அசையாத இலக்கணமானீர்,
நீர் இலக்கியம் படைத்திடும்
வல்லமை கொண்டீர்!

ஆயிரமாயிரம் இதயங்களின்
அன்புக்கு மகுடமானீர்,
அவர்கள் கல்வியின் பாதைதனில்
கலங்கரை விளக்கானீர்!

உரைத்ததில்லை இதுவரை நீர்
மனம் புண்பட ஓர் வார்த்தை,
மறந்ததில்லை இங்கே நாம்
மனம் பிரார்த்திக்க உமக்காக!

இளமை உம்மோடு
இனிதாய் சங்கீதம் பாட,
உயிரின் வேர்களில்
உற்சாகம் ஊற்றெடுத்தாேட,
மனதின் மேடைதனில்
மகிழ்ச்சி தாண்டவமாட,
மண்ணில் என்றென்றும்
காற்று உம் புகழ் பாட,
வரிகளில் தூது விடுகிறேன்
உமக்கான நன்நாளிலே,..
வல்லோனின் வரங்கள்
எல்லைகள் தகர்த்து,
எங்கும் என்றென்றும்
உம் மீது பொழிந்திடவே!..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (7-Nov-15, 9:21 pm)
பார்வை : 20461

மேலே