மகிழ்ச்சியின் முயற்சி

மகிழ்ச்சி ஒரு மந்திரச் சாவி...
புன்னகை தேசத்தின் அத்தனைப் பூட்டுகளையும்
மொத்தமாய்த் திறந்து விடும் ஒற்றைத் திறவுகோல்

பூட்டிய இதயங்களைப் புன்னகையால் திறந்து காட்டும்
மனிதர் கையில் இருந்தால் மழலைப் பள்ளியாக்கும்
வாடிய முகங்களையும் பௌர்ணமி நிலவாக்கும்
வானத்து முகில்களையும் புது வண்ண மயமாக்கும்

மங்கை மடியினிலும் மழலை மொழியினிலும்
கங்கை அலைகளிலும் கலைகள் அனைத்தினிலும்
நீக்கம் அற நிறைந்திருக்கும் – ஒன்றை
நின்று ரசித்தால் நிம்மதியாய்க் கரை சேர்க்கும்

கால் கடுக்க ஓடி வந்த காற்று
கடல் நீரில் களைப்பு நீங்கி களிக்கிறது
மெல்ல மெல்லக் கரையேறி மேகத்தை முத்தமிட
தன் மேனி சிலிர்த்து மேகம் கரைகிறது

உச்சி குளிர்ந்து ஓடி வந்த மழைநீர் - மண்ணின்
மிச்ச மானத்தை மீட்டெடுத்து உதவியது
கட்டி வைத்த மானத்தைக் காத்தவனுக்கே
ஒட்டு மொத்தமாகத் தந்து ஊடுருவ விட்டது

மண்ணும் மழைநீரும் மனமாரக் கூடி மகிழ்ந்தன
மரம், செடி, கொடிகள் யாவும் மழலையாய் சிரித்தன
பூரித்த மொட்டுகள் பொழுதில் பூப்பெய்தி மணந்தன
பூஞ்சோலை அடர்த்தியில் புத்துணர்வு பரவின

காணும் இடமெல்லாம் பச்சை காலோச்சி நின்றது
காணும் மனத்தை கண் வழியே சென்று நிறைத்தது
உள்ளம் மகிழ்ந்ததும் நம் உதட்டில் வருவது சிரிப்பு
உன்னையும் என்னையும் அறியா உணர்வின் வெடிப்பு

ஒன்று மகிழ்ந்ததும் மற்றொன்றைத் தேடி மணக்கிறது
இரண்டும் சேர்ந்த பின் இன்னொரு மகிழ்ச்சி பிறக்கிறது
மூன்றும் வந்ததற்கு மொத்த அடிப்படை அன்பு
தன் மகிழ்ச்சியில் பிறரை நனைப்பதே அதன் பண்பு

உன்னையும் என்னையும் அது ஒருங்கிணைக்கும் கருவி
உணவின் ருசியை உதட்டோரம் காட்டும் அருவி
உழைத்த களைப்பை ஓட விரட்டும் பயிற்சி
உலகத்தை இயங்க வைக்கும் உன்னதமான முயற்சி

வெல்பவர் இடத்தில் மட்டுமே இல்லை மகிழ்ச்சி
விட்டுக் கொடுப்பவர் புகழைக் கூட்டுவதும் அதன் முயற்சி

- C விஸ்வநாதன்

எழுதியவர் : C விஸ்வநாதன் (16-Nov-15, 11:06 pm)
பார்வை : 1313

மேலே